Breaking

Wednesday, March 18, 2026

Wednesday, March 18, 2026

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை - ஏப்ரல் 2 ஆம் வாரத்திற்குள் முழு ஆண்டுத்தேர்வுகளை முடிக்க ஏற்பாடு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை - ஏப்ரல் 2 ஆம் வாரத்திற்குள் முழு ஆண்டுத் தேர்வுகளை விரைவில் முடிக்க ஏற்பாடு - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேட்டி
Wednesday, March 18, 2026

SSLC பொதுத் தேர்வு - சொல்வதை எழுதுபவராக 6-8 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களையே நியமனம் செய்ய வேண்டும் -DGE

SSLC பொதுத் தேர்வு - சொல்வதை எழுதுபவராக 6-8 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களையே நியமனம் செய்ய வேண்டும் - சம்பந்தப்பட்ட பாடத்தை போதிப்பவராக இல்லாமல் அப்பாடத்தைப் பற்றி அறிந்தவராக இருக்க வேண்டும் - அ.தே.இ!
Wednesday, March 18, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.03.2026

ரூடோல்ப் டீசல்


திருக்குறள்: 

அதிகாரம் 58 / CHAPTER 58 

கண்ணோட்டம் 

குறள் 571: 

கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை 
உண்மையான் உண்டிவ் வுலகு. 

விளக்க உரை: 

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

பழமொழி :

When fortune smiles embrace her. 

அதிர்ஷ்டம் கதவை தட்டும் போது அனைத்துக் கொள்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி : 

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நமது திறமையும் நேர்மையும் வெளிப்படும் பொழுது எதிரியும் நம்மை மதிக்க தொடங்குவான் - டாக்டர் அம்பேத்கர்

பொது அறிவு : 

01.இந்திய காடுகளின் ராஜா என்று அழைக்கப்படும் மரம் எது?

தேக்கு மரம் -Teakwood

02.இந்தியாவில் முந்திரி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

மகாராஷ்டிரா -Maharastra

English words :

opportunity -

a chance to do something that you would like to do, செய்ய விரும்பும் ஒன்றைச் செய்வதற்கான வாய்ப்பு

opponent -a person who disagrees with somebody's actions, எதிராளி

தமிழ் இலக்கணம்: 

அன்று என்பது ஒருமைக்கும் அல்ல என்பது பன்மைக்கும் உரியன.

எ. கா. 1. இது பழம் அன்று

இவை பழங்கள் அல்ல.

2. இது காகம் அன்று. 

        இவை காகங்கள் அல்ல

அறிவியல் களஞ்சியம் :

தேன் ஒருபோதும் கெட்டுப்போகாது; 3,000 ஆண்டுகள் பழமையான தேன் கூட உண்ணக்கூடிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

மார்ச் 18

ரூடோல்ப் டீசல் அவர்களின் பிறந்த நாள்

ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (பி. மார்ச் 18, 1858 - செப்டம்பர் 29, 1913) ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரும் புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

நீதிக்கதை

 பொய்

நாதஸ்வரம் மற்றும் மேளதாளத்துடன் பாண்டியனும் அந்த கிராமத்து மக்களும் மந்தை வெளியில் காலை பஸ்ஸீக்காக காத்துக் கிடந்தனர். மதுரையிலிருந்து வரும் பஸ் அங்குதான் வந்து நிற்கும். அதில்தான் பத்தாவது பாஸ் ஆன பாண்டித்தேவரின் மகன் ரகு வருவான்.

அந்த கிராமத்தில் ரகு ஒருவன் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவன் படித்து அந்த கிராமத்தை முன்னுக்குக் கொண்டு வருவான் என்று எல்லோருமே நம்பினர். பஸ் வந்து நின்றது.

பஸ்ஸிலிருந்து ரகு இறங்கினான். அடுத்த வினாடி நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்கியது. பாண்டியன் தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார்.

ரகுவை எல்லோரும் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். ரகுவின் அம்மா பேச்சியம்மா வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்தாள்.

தான் பரிட்சையில் தேறவில்லை என்பதை எப்படிச் சொல்வது?

“பாஸ் பண்ணிட்டியாப்பா” என்றாள் அம்மா

“ஆமாம்மா பாஸாயிட்டேன்” ஒரே ஒரு பொய்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டான். ஆனால் அடுத்தடுத்து ஊரில் கேட்கும் எல்லோருக்கும் அதே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது.

“என்னா தம்பி மேல படிக்கப் போறீயா?”

“ஆமாம்”

“டாக்டருக்குப் படிக்கப் போறியாமே”

“ஆமாம்”

“இப்போ எப்படி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா?”

இப்படி ஆளுக்கு ஆள் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டனர். இவனும் ஓயாமல் பொய் சொன்னான். “ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும்” என்று தன் ஆசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

அடுத்த நாள் ரகுவின் அப்பாவும் அம்மாவும் இவனை பக்கத்து ஊர் கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை அடித்துக் கொண்டு வந்தனர். ரகு பத்தாவது பாஸ் செய்தால் மொட்டை போடுவதாக பிரார்த்தனையாம்.

ரகு உண்மையைச் சொல்ல முடியாமல் திண்டாடினான். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று பயந்தான்.

அடுத்த நாள் இவன் பயந்தது போலவே இன்னொரு விஷயம் நடந்தது. பாண்டியன் கறவை மாட்டை கன்றுடன் சந்தையில் விற்றுவிட்டு வந்தார். இவனை காலேஜில் சேர்ப்பதற்கான ஏற்பாடாம்.

பாண்டியன் வசதியானவர் என்று சொல்ல முடியாது. இவனை காலேஜில் படிக்க வைக்கக் கூட நிலத்தை விற்றுத்தான் செலவு செய்ய திட்டமிட்டிருந்தார். ரகுவின் அம்மா ஒரு பக்கம் தன் மகன் காலேஜில் படிக்கப் போவது பற்றி ஊர்ப் பெண்களிடம் எல்லாம் முறை வைத்துப் பேசினாள்.

இனிமேலும் தான் உண்மையை மூடி மறைப்பது சரியல்ல என்று உணர்ந்து விட்டான் ரகு. அன்று இரவு தன் அப்பா அம்மா இருவரையும் அழைத்தான். இருவரையும் ஒருசேர நிற்கவைத்தான். இருவரின் கால்களிலும் விழுந்தான் ரகு.

“என்ன என்ன?” என்று பதட்டம் அடைந்தார் பாண்டியன். “நான் உங்களிடம் பொய் சொல்லி விட்டேன். நான் தேர்வில் தவறிய உண்மையை மறைத்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று சொல்லி குலுங்கிக் குலுங்கி அழுதான்.

ரகுவின் அப்பாவும் அம்மாவும் ஒரு கணம் செய்வது அறியாமல் மலைத்து நின்றனர். பின்னர் பாண்டியன் அவனை தூக்கி மார்புடன் தழுவிக் கொண்டார்.

“பாண்டியன் மகன் காலேஜில் படிக்கிறான் என்று செல்வதை விட அவன் பொய் செல்ல மாட்டான் என்று சொல்வதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்றார்.

“இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன்” என்று தந்தையின் கையில் அடித்து உறுதி சொன்னான் ரகு.

பாண்டியனுக்குப் பெருமையாக இருந்தது.

அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

இன்றைய செய்திகள்

18.03.2026

⭐நிலவில் இருந்து 13,000 டெராவாட் மின்சாரம்... 11000 கி.மீ. நீள சோலார் பெல்ட் அமைக்கும் ஜப்பானிய நிறுவனம்!
உலகிற்கே தடையற்ற மின்சாரம் வழங்க நிலவைச் சுற்றி 11,000 கி.மீ நீளத்திற்கு சோலார் வளையத்தை உருவாக்கும் ஜப்பானின் பிரம்மாண்ட 'லூனா ரிங்' திட்டம்.

⭐மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஈரான் போர், இந்தியாவின் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என (GJEPC) எச்சரித்துள்ளது.

⭐ஈரானிய எண்ணெய் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதித்து வருகிறோம் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஸ்காட் பெசென்ட் பேசியுள்ளார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக மீண்டும் விராட் கோலி களமிறங்க உள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்த அவர், வரும் ஐபிஎல் தொடரில் அந்த கோப்பையை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் களமிறங்க உள்ளார்.

Today's Headlines

⭐ A Japanese company has proposed a massive “Luna Ring” project to generate 13,000 terawatts of electricity from the Moon. The plan involves building an 11,000 km-long solar belt around the Moon to provide uninterrupted power to the entire world.

⭐ The ongoing Israel–Iran conflict in the Middle East is expected to significantly impact India’s $2 billion gem and jewellery exports, according to the Gem & Jewellery Export Promotion Council (GJEPC).

⭐ The United States Commerce Secretary Scott Bessent has stated that Iranian oil tankers are being allowed to pass through the Strait of Hormuz.

*SPORTS NEWS*

🏀 In the IPL tournament, Virat Kohli is set to return to play for Royal Challengers Bangalore. After playing a key role in helping the team win their first-ever title last season, he will aim to defend the championship in the upcoming IPL season.

Covai women ICT_போதிமரம்

Tuesday, March 17, 2026

Tuesday, March 17, 2026

MSHM TO BEO பதவி உயர்வு வழக்கு

MSHM TO BEO பதவி உயர்வு ஆனது,ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II முடித்த MSHM களை வைத்து தான் நடத்த வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 786/11/2026 நாள் 26.02.2026 Challenge செய்யப்பட்டுள்ளது. வழக்கு எதிர்வாதவுரை தாக்கல் செய்ய ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. வழக்கில் தடை ஆணை வழங்கப்படவில்லை .

Tuesday, March 17, 2026

தேர்தல் பணி விலக்கு யாருக்கெல்லாம்?

தேர்தல் பணி விலக்கு

அனைவருக்கும் வணக்கம். அனைத்து தலைமை ஆசிரயர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. தேர்தல் பணி சார்ந்து படிவங்கள் பூர்த்தி செய்து மாவட்ட க் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் / பணியாளர்களில் கீழ்க்குறித்த பிரிவின் கீழ் உள்ள பணியாளர்களுக்கு மட்டும் தேர்தல் பணியிலிருந்து விலக்கு பெறும் பொருட்டு உரிய ஆவணங்களுடன் 17.03.2026 பிற்பகல் 3 மணி முதல் 5 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவு உதவியாளரிடம் நேரில் தவறாமல் சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் தேர்தல் பணியிலிருந்து விலக்கு பெற இயலாது என கண்டிப்பாக தெரிவிக்கப்படுகிறது.

1. நீகன் (முழு குருட்டு 70% மேலே மட்டும்)

2. மகப்பேறு விடுப்பு (விடுப்பு அனுமதி ஆணை நகல் தலைமை ஆசிரியர் மூலம்)

3.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (டயாலிசிஸ்)

4.புற்றுநோய்

5.கன்னியாஸ்திரிகள்

6.31.03.2026 இல் பணி ஓய்வு பெற உள்ளோர்

மேற்காண் பிரிவில் தேர்தல் அலுவலகத்திற்கு வரவேண்டும்.
Tuesday, March 17, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.03.2026


சாய்னா நேவால்


திருக்குறள்: 

அதிகாரம் 57 / CHAPTER 57 – 

வெருவந்த செய்யாமை 

குறள் 561: 

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் 
ஒத்தாங் கொறுப்பது வேந்து.            

விளக்க உரை: 

செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

பழமொழி :

Hear more,but talk less.       

அதிகமாக கேள்,குறைவாக பேசு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி : 

வெற்றியோ, தோல்வியோ எது வரினும் நம் கடமையை செய்வோம். பிறர் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம் - அண்ணல் அம்பேத்கர்

பொது அறிவு : 

01.உலகின் மிக அதிகமான எரிமலைகள்எந்த பெருங்கடலில்  உள்ளது?

பசிபிக் பெருங்கடல் 

Pacific Ocean

02.மரபியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

கிரிகோர் மெண்டல் -Gregor Mendel

English words :

Election-

The process where people vote to choose their representatives or leaders.

Candidate-

A person who contests in an election to win a position.

தமிழ் இலக்கணம்: 

முன்னாள் அமைச்சர்

முந்நாள் அமைச்சர் 

முன்னால் அமைச்சர் 

இவற்றில் எது சரி ?

எல்லாமே சரி தான். நாம் உபயோகப் படுத்தும் இடத்தைப் பொறுத்து அமையும்.

முன்னாள் அமைச்சர் என்றால் இதற்கு முன்பு அமைச்சராக இருந்தவர் என்று பொருள்

முந்நாள் அமைச்சர் என்றால் மூன்று நாட்கள் மட்டும் அமைச்சராக இருந்தவர் என்று பொருள்

முன்னால் அமைச்சர் என்றால் நமக்கு முன்னால் அமைச்சர் இருக்கிறார் என்று பொருள்.

ஆக மூன்று வார்த்தைகளும் சரியே

அறிவியல் களஞ்சியம் :

சூரிய ஒளி பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.

மார்ச் 17

சாய்னா நேவால் அவர்களின் பிறந்தநாள்


சாய்னா நேவால் (Saina Nehwal, பிறப்பு: 17 மார்ச் 1990) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகத் தரவரிசையில் முதலாவதாக உள்ளார்,[3][4] உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே.[5] 2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.[6] பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலகத் தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே. சூன் 21, 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.

நீதிக்கதை

ஆசை

மணிவண்ணனுக்கு சந்தோஷமாக இருந்தது. மதுரையிலிருந்து வந்த அவன் மாமா அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மணிவண்ணன் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது கூட கிடையாது.

இவன் வகுப்பில் படிக்கும் எம்.எல்.ஏ. மகனிடம் கூட இப்படிப் பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபள வென்றிருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டினான். மாமா இவன் மீது மிகவும் அன்பு வைத்திருந்தார்.

வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய மணிவண்ணனை உற்சாகப்படுத்த விரும்பினார் அவன் மாமா. “நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய்” என்று கேட்டார் அவன் மாமா. “நான் படித்து கலெக்டராக வருவேன்” என்றான் மணிவண்ணன்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் அப்பா “தம்பி விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயியின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும்” என்றார். மணிவண்ணனின் சந்தோஷம் மணலில் பாய்ந்த தண்ணீராய் மறைந்து போனது.

“ஒரு ஏழையின் மகன் கலெக்டராக வர ஆசைப்படுவது பேராசையா?” என்று நினைத்தான். வகுப்பில் மணிவண்ணன் உற்சாகமின்றி உட்கார்ந்திருந்தான். பாடங்களில் அவன் மனம் கவனம் செல்லவில்லை. வகுப்பு ஆசிரியர் அவனை கவனித்து விட்டார். ஆசிரியர் அவனை தனியாக அழைத்து விசாரித்தார்.

“ஒரு ஏழையின் மகன் கலெக்டராக ஆசைப்படுவது பேராசையா” என்றான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் கலகலவென்று சிரித்தார். “இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய்” என்றார்.

அன்று மாலை பள்ளியின ஆண்டு விழா நடைபெற்றது. ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் போது மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.

கூட்டத்தில் உட்கார்ந்திருந்த மணிவண்ணனிடம் வந்த ஆசிரியர், “உன் சந்தேகத்தை அவரிடமே கேள்” என்றார். முதலில் தயங்கிய மணிவண்ணன் தைரியமாக எழுந்து கலெக்டரிடம் கேட்டான். “ஒரு ஏழை விவசாயியின் மகன் கலெக்ட்டராக வர ஆசைப்படுவது பேராசையா?

“நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக் கூட வாங்க ஆசைப்படுவதில் தவறு இல்லை” என்று பளிச்சென்று கூறினார் கலெக்டர். “நானும் ஒரு சாதாரண ஏழை விவசாயியின் மகன் தான்”. “உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது” என்று பேசி முடித்தார் கலெக்டர்.

இருபது ஆண்டுகள் கழிந்தன.

அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மணிவண்ணன் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார்.

“நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலெக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது” என்று கலெக்டர் மணிவண்ணன் சொன்ன போது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

இன்றைய செய்திகள்


⭐அசாம் & புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு ஏப்ரல் 9ம்தேதி நடைபெறவுள்ளது.


⭐ எழுத்தாளர் தமிழ் செல்வன் அவர்களுக்கு சாகித்திய அகாடமி 2025- விருது அறிவிப்பு


⭐ போதுமான அளவு பெட்ரோல் எரிபொருள் கையிருப்பு உள்ளது என மத்திய  பெட்ரோலியத் துறை தகவல் 


 *விளையாட்டு செய்திகள்* 

🏀நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்திடம் தென்னாப்பிரிக்கா  வெற்றி பெற்றது.

Today's Headlines

⭐ Voting for the Assam & Puducherry Legislative Assembly elections will be held on April 9.

⭐ Writer Tamil Selvan has been announced as the recipient of the Sahitya Akademi Award 2025.

⭐ The Union Petroleum Ministry has stated that there is sufficient stock of petrol fuel available.

Sports News

🏀 The South African team, which is touring New Zealand, is playing a 5-match T20 series. In the first T20 match, South Africa defeated New Zealand.

Covai women ICT_போதிமரம்

Monday, March 16, 2026

Monday, March 16, 2026

பொதுத்தேர்வில் ChatGPT - 81 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் - 17 ஆசிரியர்கள் மீது FIR பதிவு

பொதுத்தேர்வில் ChatGPT மூலம் மோசடி.. 81 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்..

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின்போது ChatGPT பயன்படுத்தி மாணவர்கள் காப்பியடிக்க உதவியதாக குற்றச்சாட்டு.

சோதனையில் பீட் பகுதியில் அதிகளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிப்பு..

இதனைத் தொடர்ந்து 81 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், முதற்கட்டமாக 17 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு

மகாராஷ்டிராவில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது மாணவர்கள் காப்பியடிக்க உதவியதாக 81 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை மாநில வாரியத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையின்படி, இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 81 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கற்பித்தல் கருவிகள்

மாணவர்கள் ChatGPT -ஐ பயன்படுத்தி தேர்வில் முறைகேடு செய்ததாகவும், அதற்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 5க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இதுபோன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக பீடு மாவட்டத்தில் அதிக அளவில் இத்தகைய முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. தேர்வு தொடங்கியவுடன் வினாத்தாள்களை செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து வெளியே இருப்பவர்களுக்கு அனுப்பியுள்ளனர். அந்த வினாக்களை ChatGPT போன்ற AI தொழில்நுட்பத்தில் பதிவேற்றி, அதற்கான விடைகளை பெற்றுள்ளனர்

பெறப்பட்ட விடைகளை பள்ளியின் பிரிண்டரில் அச்சிட்டு, பின்னர் சிறிய துண்டுகளாக மாற்றி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர். சௌசாலா போன்ற பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் நேரடி கண்காணிப்பு செய்யப்பட்டது. இதில் 16 தேர்வு அறைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவுவது உறுதி செய்யப்பட்டது.

தேர்வு மையங்களில் நடந்த இந்த முறைகேடுகள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Monday, March 16, 2026

தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை: 6,695 மாணவா்கள் தோ்வு!

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட பயனாளிகளை தோ்வு செய்வதற்கான தோ்வில் இறுதியாக 6,695 பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளதாக தமிழக அரசுத் தோ்வுகள் இயக்ககம் இறுதிப் பட்டிலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8- ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை (என்எம்எம்எஸ்) வழங்கப்படுகிறது.

இதில் 2025-2026- ஆம் கல்வியாண்டுக்கு இந்த என்எம்எம்எஸ் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை வழங்க அரசு தோ்வு இயக்ககத்தால் கடந்த ஜன. 10- இல் தோ்வு நடத்தப்பட்டது.

இத்தோ்வில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் கடந்த பிப். 18 - ஆம் தேதி வெளியிடப்பட்டது. இருப்பினும், மாணவா்களின் பிறந்த தேதி, இனப்பிரிவு உள்ளிட்ட திருத்தங்களுக்கு கடந்த பிப். 18 முதல் 24- ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்தத் திருத்தங்கள் நிறைவு பெற்று தற்போது தோ்வானவா்கள் இறுதிப் பெயா் பட்டியல் பள்ளிகளின் பெயா்களோடு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் 6,695 மாணவா்கள் தகுதி பெற்று தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த ஊக்கத்தொகைக்கான தெரிவுப்பட்டியலை இணையதளத்தில் (மற்ற தோ்வுகள் பிரிவில்) தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தோ்வு முடிவுகள் என்ற பக்கத்தில் காணலாம்.

மேலும், இந்தப் பட்டியல் பள்ளிக் கல்வி இயக்ககத்தால் பிற தகுதிகள் சாா்ந்த பரிசீலனைக்கும் உள்பட்டதாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Monday, March 16, 2026

“ஆரம்பக் கல்வியில் மனப்பாட முறைக்குக் பதிலாக பின்லாந்து மாடல்” - அன்பில் மகேஸ் சிறப்பு பேட்டி

தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் 2026-27-ம் கல்வியாண்டு முதல் அமலாகிறது. இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ், பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார்.

புதிய பாடத் திட்டம் குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் கூறியதாவது:

Q

மாணவர்களுக்கு 1, 2-ம் வகுப்புகளில் எழுத்துகளை திணிக்காமல் பின்லாந்து போல், நிதானமான கற்றல்முறையைக் கொண்டு வருகிறீர்கள். ‘என் பிள்ளை உடனே ஆங்கிலம் பேச, எழுத வேண்டும்’ என துடிக்கும் பெற்றோர் மனநிலையை எப்படி மாற்றப் போகிறீர்கள்?

A

மொழிக் கற்றலில் முதலில் கேட்டல், பேசுதல் திறன்களும், பின்னரே வாசித்தல், எழுதுதல் திறன்களும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஆரம்ப வகுப்புகளில் அடித்தளம் உறுதியானால் அனைத்து பாடங்களையும் புரிந்து கற்கும் திறன் வளரும். பிள்ளைகள் ஆங்கிலத்தை எளிதாக பேசவும், எழுதவும் உரிய பயிற்சிகள் தரப்படும் என்பதை பெற்றோருக்குப் புரியவைப்போம்.

Q

புதிய பாடத்திட்டம் சமூக நீதி, சமத்துவத்தை எப்படி பிரதிபலிக்கிறது? விளிம்பு நிலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்த என்ன அம்சங்கள் உள்ளன?

A

புதிய பாடத்திட்டம் சமூக நீதி, சமத்துவக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. செயல்பாடுகள் அடிப்படையிலான கற்பித்தல், குழுகற்றல் போன்ற வழிமுறைகள் மூலமாக சமமான கற்றல் உறுதிசெய்யப்படுகிறது. விளிம்புநிலை மாணவர்களின் கற்றல் அடைவு கண்காணிக்கப்பட்டு, கூடுதல் கவனம் தேவைப்படுவோருக்கு உடனடி குறைதீர் கற்றல் வழங்கப்படும்.

Q

மனப்பாடத் தேர்வு முறைக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட உள்ள திறன்சார் மதிப்பீடு எவ்வாறு அளவிடப்படும்?

A

மனப்பாடம் மாணவர்களுக்கு அழுத்தத்தைத் தருவதுடன், உண்மையான புரிதலை அளவிட உதவாது. எனவே, புதிய சூழலில் சிந்தித்து செயல்படுதல், பிரச்சினை தீர்க்கும் திறன், படைப்பாற்றல் போன்ற வாழ்வியல் திறன்களைக் கொண்டே மதிப்பீடு செய்யப்படும்.

Q

புதிய பாடத்திட்டத்தில், புத்தகவாசிப்புக்கும், டிஜிட்டல் திரைக்கல்விக்கும் இடையே சமநிலை எப்படி பேணப்படும்? கிராமப்புறங்களில் இணையவசதி சிக்கல்களுக்கு இடையே இதைச் சாத்தியப்படுத்து வது எப்படி?

A

வாசிப்பு மற்றும் எழுதுதல் அடிப்படை திறன்களாகும். அவை பாடப்புத்தகங்கள் வழியே உறுதிசெய்யப்படும். டிஜிட்டல் தளங்கள் கற்றலை மேம்படுத்தும் துணைக் கருவியாக இருக்கும். நேரில் காண முடியாத கடினமான கருத்துகளை விளக்க மட்டுமே அவை பயன்படுத்தப்படும். இணைய வசதி கிடைக்காத கிராமப்புறங்களிலும், ஆசிரியர் கையேடுகளில் வழங்கப்பட்ட கற்பித்தல் வளங்களை பயன்படுத்தி கற்றல் தொடரப்படும்.


Q

சிபிஎஸ்இயுடன் ஒப்பிடும்போது, இந்த புதிய பாடத்திட்டம் மென்மையாக இருக்கிறது. இதனால் நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்களின் பின்தங்கவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறதே?

A

நமது பாடத்திட்டம் சர்வதேச தரத்துக்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மனப்பாடம் இன்றி திறன் அடிப்படையில் புரிந்து கற்பதால், நீட் உட்பட எந்தவொரு போட்டித் தேர்வையும் தமிழக மாணவர்கள் தன்னம்பிக்கை யுடன் எதிர்கொள்வார்கள். இவற்றை அமல்படுத்தவும், வகுப்பறை செயல்பாடுகளை கட்டமைக்கவும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

Q

தற்போதைய சூழலில் பாலியல் கல்விக்கான தேவையுள்ளது. மாணவர்களுக்கு ‘குட் டச்’, ‘பேடுடச்’ விழிப்புணர்வுடன், வயதுக்கேற்ற அறிவியல்பூர்வமான பாலியல் கல்வி வழங்கப்படுமா?

A

தொடக்க வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு வயதுக்கேற்ற விழிப்புணர்வு படிப்படியாக வழங்கப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தில் குழந்தைகள் தங்களைப் பற்றி நேர்மறையாக எண்ணவும், பாதுகாப்பு உணர்வு பெறவும் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் வளரிளம் பருவத்தினருக்கு உடல் மாற்றங்கள், பாலின சமத்துவம்,உணர்வு மேலாண்மை போன்றவை குறித்து செயல்பாடுகள் மற்றும் கலைகள் மூலமாக கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேகபயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.

Q

பழைய பாடத்திட்டத்தில் 3-ம் வகுப்பு முடித்து, புதிய பாடத்திட்டத்தில் 4-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு முன்கள நடவடிக்கை என்ன? 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டப் பணிகள் எந்த நிலையில் உள்ளன?

A

மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்படாதவாறு இரு பாடத்திட்டங்களை இணைக்கும் பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சி அளிக்கப்படும். 6 முதல் 12-ம் வகுப்புக்கான பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Q

புதிய பாடத்திட்டம் முழுவதும் மாநிலக் கல்விக் கொள்கையை மட்டுமே சார்ந்ததா? அல்லது மத்திய அரசின் நிதியைப் பெறுவதற்காக தேசிய கல்விக் கொள்கையின் சில அம்சங்களையும் ஏற்றுள்ளீர்களா?

A

மாநில கல்விக் கொள்கை-2025 அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இருமொழிக் கொள்கை, சமத்துவம், பண்பாடு, சமூக மற்றும் எதிர்கால தேவைகளை இலக்காக கொண்டு நமது மாநிலத்தின் சூழலுக்கேற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Q

பாடத்திட்டம் அமலுக்கு வந்தபின்மதிப்பாய்வு நடத்தப்பட்டு, மாவட்டவாரியான தரவுகள் பொதுமக்களுக்கு வெளியிடப்படுமா?

A

மாணவர்களின் கற்றல் அடைவு குறித்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில அளவிலான ஆய்வு நடத்தப்படும். இதன் முடிவுகள் பொதுமக்கள் பார்வைக்காக இணையளத்தில் பதிவேற்றப்படும். மேலும், அந்தத்தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு கற்றல் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.