Breaking

Sunday, February 8, 2026

Sunday, February 08, 2026

50 லட்சம் பயனா்களைக் கடந்த ‘FASTag வருடாந்திர பாஸ்’ திட்டம்

வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் திட்டம், 6 மாதங்களுக்குள் 50 லட்சம் பயனர்களை கடந்தது

50 லட்சம் பயனா்களைக் கடந்த ‘ஃபாஸ்டேக் FASTag வருடாந்திர பாஸ்’ திட்டம்

தேசிய நெடுஞ்சாலைகளில் தொடா்ச்சியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ்’ திட்டத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் வெறும் 6 மாதங்களில் 50 லட்சம் போ் இணைந்துள்ளனா். இந்தக் குறுகிய காலகட்டத்திலேயே சுமாா் 26.55 கோடி முறை சுங்கச்சாவடி பரிவா்த்தனைகள் இத்திட்டத்தின் மூலம் நடந்துள்ளன.

இத்திட்டத்தின் சிறப்பம்சமான, ஒருமுறை கட்டணமாக ரூ.3,000 மட்டும் செலுத்திவிட்டு, ஆண்டு முழுவதும் அல்லது மொத்தம் 200 முறை சுங்கச்சாவடிகளை எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி கடக்கலாம்.

‘ராஜ்மாா்க்கயாத்ரா’ செயலி அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்எச்ஏஐ) வலைதளம் மூலம் இத்திட்டத்தில் இணையலாம். நாடு முழுவதும் உள்ள சுமாா் 1,150 சுங்கச்சாவடிகளில் இந்த வசதி செல்லுபடியாகும்.

நெடுஞ்சாலைகளில் அவ்வப்போது பயணம் செய்யும் வணிக ரீதியல்லாத சொந்த வாகன உரிமையாளா்களுக்கு இது பெரும் பண சேமிப்பை வழங்குகிறது.

தில்லி-என்சிஆா் பகுதியில் உள்ள பிஜ்வாசன் சுங்கச்சாவடியில் 57 சதவீத வாகனங்கள் இந்தப் பாஸ் மூலமே பயணிப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பழைய ஃபாஸ்டேக் கணக்குடன் இதை இணைக்க முடியும் என்பதால், பொதுமக்களிடையே இதற்கு அதிக வரவேற்பு உள்ளது.

2-ஆம் இடத்தில் Tamilnadu

இந்த வருடாந்திர பாஸ் பயன்பாட்டில் மாநில வாரியான புள்ளிவிவரங்களின்படி, சண்டீகா் 14 சதவீதப் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு 12.3 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், தில்லி 11.5 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
Sunday, February 08, 2026

Income Tax - Marginal Relief மற்றும் CA பற்றிய விழிப்புணர்வு பதிவு

2025-26 நிதியாண்டு வருமான வரி கணக்கிடும்போது Marginal Relief மற்றும் Conveyance Allowance பற்றி விழிப்புடன் இருங்கள்.

இங்கே சொல்லப்படும் விளக்கங்கள் New Regimeக்கு மட்டுமே பொருந்தும்.

Marginal Relief பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இந்த நிதியாண்டில் எனக்கு தெரிந்த ஒருவர் Rs.58000 வருமான வரி கணக்கிட வேண்டிய நிலையில் Rs.71,000 என கணக்கிட்டிருந்தார்.

Conveyance Allowance பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் மற்றொருவர் சென்ற நிதியாண்டில் Rs.75,000 வருமான வரி கட்ட வேண்டிய நிலையில் ரூ.80,000 வருமானவரி கட்டி இருக்கிறார்.

*Salary Income*

12 மாத சம்பளம், DA Arrears, Bonus, EL Surrender மற்றும் இதர நிலுவைத்தொகை ஆகியவைகளின் கூட்டுத்தொகை என்பது Total Salary Income.

*Standard Deduction*

இதில் Standard Deduction 75000 கழிக்க வேண்டும். (Permanant Disabled ஆசிரியர்களாக இருந்தால் அவர்கள் சம்பளத்தில் மாதா மாதம் பெறும்Conveyance Allowance ரூ.2500 மொத்தம் ரூ.30,000 கழிக்கலாம்).

*Taxable Income*

இந்த இரண்டையும் கழித்துவிட்டு வரும் தொகை Taxable Income ஆகும். இந்த தொகைக்கு தான் வருமான வரி கணக்கிடப்படுகிறது.

*Income Tax Slab*

Upto 4,00,000 - Nil Tax

4,00,001 to 8,00,000 – 5% tax (ie) Rs.20,000.

8,00,001 to 12,00,000 – 10% tax (ie) Rs.40,000.

12,00,001 to 16,00,000 – 15% tax (ie) Rs.60,000.

16,00,001 to 20,00,000 – 20% tax (ie) Rs.80,000.

20,00,001 to 24,00,000 – 25% tax (ie) Rs.1,00,000

Exeeding 24,00,000 – 30% tax


*Tax Rebate U/s 87A*

Taxable Income 12,00,000 இருப்பவர்கள் Income Tax Slab இன் படி வருமான வரி ரூ.60,000 வருமான வரி கட்ட வேண்டும். ஆனால் Taxable Income 12,00,000 இருப்பவர்களுக்கு வருமான வரிச் சட்டம் U/s 87A வின் படி முழு வருமானவரி தொகையும் தள்ளுபடி செய்யப்படும். எனவே தான் Taxable Income 12,00,000 இருப்பவர்கள் வருமான வரி கட்ட தேவை இல்லை.

*Marginal Relief*

Taxable Income 12,00,001 முதல் 12,75,000 வரை இருப்பவர்களுக்கு வருமான வரிச் சட்டம் Marginal Relief என்ற சலுகை அளிக்கிறது.

*Example 1*

உதாரணமாக Taxable Income 12,00,200 இருந்தால் Tax Rebate U/s 87A இன் படி வரி தள்ளுபடி கிடையாது.

Income Tax Slab இன் படி இவர்களுக்கு Rs.60,030 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்ட வேண்டி வரும் வரும். ஆனால் இவருக்கு Marginal Relief சலுகை இவருக்கு கிடைக்கிறது. Marginal Relief Rs.59,830 கழித்துவிட்டு இவர் வருமான வரி Rs.200ம் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து வருமான வரி செலுத்தினால் போதும்.

இவர் Marginal Relief பற்றி அறியவில்லை என்றால் Rs.60,030 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, மிகப்பெரிய இழப்பாக அமையும்.

*Example 2*

உதாரணமாக Taxable Income 12,50,00 இருந்தால் Tax Rebate U/s 87A இன் படி வரி தள்ளுபடி கிடையாது.

Income Tax Slab இன் படி இவர்களுக்கு Rs.67,500 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்ட வேண்டி வரும் வரும். ஆனால் Marginal Relief சலுகை இவர்களுக்கு கிடைக்கிறது. இவர் Marginal Relief Rs.17,500 கழித்துவிட்டு வருமான வரி Rs.50,000ம் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து வருமான வரி செலுத்தினால் போதும்.

இவர் Marginal Relief பற்றி அறியவில்லை என்றால் Rs.67,500 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, இழப்பாக அமையும்.

*Conveyance Allowance*

Disabled Persons தம் சம்பளத்தில் பெறும் Conveyance Allowance தொகை முழுதையும் Standard Deduction இல் கழித்துகொள்ளலாம்.

*Example 1*

மாதா மாதம் ரூ.2500 Conveyance Allowance பெறும் ஒருவர் Salary Income ரூ.13,00,000 பெற்றிருந்தால் Standard Deduction இல் ரூ.75000 மற்றும் ரூ.30000 என மொத்தம் ரூ.1,05,000 கழித்துக்கொள்ளலாம். எனவே, அவருடைய Taxable Income Rs.11,95,000. வருமான வரிச் சட்டம் U/s 87A வின் படி இவருக்கு Nil Tax.

இவர் Conveyance Allowance பற்றி அறியவில்லை என்றால் Standard Deduction ரூ.75000 மட்டும் கழித்து Taxable Income Rs.12,25,000 என தவறாக கணக்கீடு செய்து Marginal Relief இன் படி Rs.25,000 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, இழப்பாக அமையும்.

*Example 2*

மாதா மாதம் ரூ.2500 Conveyance Allowance பெறும் ஒருவர் Salary Income ரூ.13,40,000 பெற்றிருந்தால் Standard Deduction இல் ரூ.75000 மற்றும் ரூ.30000 என மொத்தம் ரூ.1,05,000 கழித்துக்கொள்ளலாம். எனவே, அவருடைய Taxable Income Rs.12,35,000. Marginal Relief ன் படி இவருக்கு Tax 35,000 + 4% CESS.

இவர் Conveyance Allowance பற்றி அறியவில்லை என்றால் Standard Deduction ரூ.75000 மட்டும் கழித்து Taxable Income Rs.12,65,000 என தவறாக கணக்கீடு செய்து Marginal Relief இன் படி Rs.65,000 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, இழப்பாக அமையும்.

.*விழிப்புடன் இருக்கவே...*

மீண்டும் சொல்கிறேன்.... Marginal Relief பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இந்த நிதியாண்டில் எனக்கு தெரிந்த ஒருவர் Rs.58000 வருமான வரி கணக்கிட வேண்டிய நிலையில் Rs.71,000 என கணக்கிட்டிருந்தார்.

Conveyance Allowance பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் மற்றொருவர் சென்ற நிதியாண்டில் Rs.75,000 வருமான வரி கட்ட வேண்டிய நிலையில் ரூ.80,000 வருமானவரி கட்டி இருக்கிறார்.

விழிப்புடன் இருங்கள்...
Sunday, February 08, 2026

3ஆவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு (Maternity Leave) - Court Judgment Copy



3ஆவது பிரசவத்திற்கும் விடுப்பு

பெண் ஊழியர்களின் 3ஆவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு.

உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி என்பவர் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு.

அனைத்து துறை செயலாளர்களுக்கும் இந்த உத்தரவு நகலை அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Sunday, February 08, 2026

மே மாதம் 3 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் - தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு.

மே மாதம் 3 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் - தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு.

*நாடு முழுவதும் மே 3ஆம் தேதியன்று இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.

*இன்று முதல் மார்ச் 8ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - தேசிய தேர்வு முகமை.
Sunday, February 08, 2026

PGTRB பணி நியமன கலந்தாய்வுக்குப் பிறகு ஆங்கிலம், வேதியியல் மற்றும் பொருளியல் பாடங்களுக்கான காலிப் பணியிட விவரங்கள்!

PGTRB பணி நியமன கலந்தாய்வுக்குப் பிறகு ஆங்கிலம், வேதியியல் மற்றும் பொருளியல் பாடங்களுக்கான காலிப் பணியிட விவரங்கள்!

PG Vacancies after 07.02.2026.pdf

👇👇👇

Sunday, February 08, 2026

PG TO HSHM Promotion வழக்கின் நிலைப்பாடு என்ன?

BT யிலிருந்து PG ஆக பதவி உயர்வில் சென்றவர்கள் ,PG ஆக பணியேற்ற நாள் முதல் ஒரு வருடத்திற்குள் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவர்கள் தொடர்ந்து அதே உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக தொடர்ந்து பணியாற்ற முடியும்.

ஒரு ஆசிரியர் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளை வகிக்க முடியாது என்றும் BT OR PG ஒன்றில் மட்டுமே தொடர முடியும் என்பதால் PG TO HSHM Promotion ஐ உச்சநீதிமன்ற நீதிபதி ஏற்கவில்லை. 

BT யிலிருந்து PG ஆக பதவி உயர்வில் சென்றவர்கள் தங்களின் தகுதி காண் பருவத்தை முடித்து விட்டால் அவர் PG ஆக மட்டுமே தொடர முடியும் என்பது நீதிபதியின் கருத்தாக அமைந்தது. RULE NUMBER 10(A)(1) பற்றி விவாதிக்கப்பட்டது. PROMOTION RULE ல் ஒருவரை HSHM ஆக பதவி உயர்வு செய்வதில் Feeder category யில் PG இல்லை என்பது நீதி அரசரின் கருத்தாக அமைந்தது. RULE ல் இல்லாதது அரசாணையில் உள்ளது.

காலம் காலமாக பாரம்பரியமாக செல்கிறோம் என்பதை ஏற்க முடியாது. விதிகளில் இருக்க வேண்டும். நீங்கள் BT ஆக ஒருமுறை நேரடியாக நியமிக்கப்பட்டு விட்டீர்கள். பிறகு PG ஆக Recruitment by transfer மூலம் மீண்டும் நியமிக்கப்பட்டு விட்டீர்கள்.

தங்களுக்குரிய ஓராண்டு தகுதி காண் பருவத்தை முடித்து விட்டீர்கள். இன்றைய 40 நிமிட விவாதங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. 

Next hearing - final 11.02.2026
Sunday, February 08, 2026

பிப்ரவரி 17-ம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..


தமிழ்நாடு 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 17-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு, சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள்.

மேலும், 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 17-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30, 2026-2027-ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்.

2026-2027-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் 2025-2026-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியன 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 20-ஆம் நாள், வெள்ளிக்கிழமை அன்று பேரவைக்கு அளிக்கப்பெறும்.
Sunday, February 08, 2026

இனி ரயில்வேயின் அனைத்து சேவைகளுக்கும் Rail one செயலிதான்!

புறநகர் மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுக்க பயன்படும் யு.டி.எஸ் மொபைல் செயலி வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் முழுமையாக நிறுத்தப்பட உள்ளது.

இதற்கு மாற்றாக ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் வழங்கும் ரயில் ஒன் (RailOne) எனும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய செயலியையை ஊக்குவிக்கும் வகையில், அதன் மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3% கட்டணச் சலுகை வழங்கப்படும் என ரயில்வே அறிவிப்பு.
Sunday, February 08, 2026

குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைப்பு.

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அஅறிவிப்பு.

அரும்பாக்கம் மையத்தில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண் இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குளறுபடி எழுந்த நிலையில் TNPSC நடவடிக்கை.

Saturday, February 7, 2026

Saturday, February 07, 2026

CTET : ஆசிரியர் பணி தகுதிக்கான ‘சிடெட்’ தேர்வு இன்று தொடக்கம்

தமிழ், ஆங்​கிலம் உள்​ளிட்ட 20 மொழிகளில் ஆசிரியர் பணிக்​கான ‘சிடெட்’ தேர்வு நாடு முழு​வதும் இன்று தொடங்​கு​கிறது.

மத்​திய அரசின் இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி, ஆசிரியர் பணி​யில் சேரு​வதற்​கு, மத்​திய ஆசிரியர் தகு​தித் தேர்​வில் (சிடெட்) கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும். 2 தாள்​கள் கொண்ட இந்தத்தேர்வை மத்​திய இடைநிலைக்கல்வி வாரி​யம் (சிபிஎஸ்இ) சார்பில் ஆண்​டுதோறும் ஜூலை,டிசம்​பர் என 2 முறை தேர்வு நடத்தி வரு​கிறது.

இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல் தாள் தேர்​வும், பட்​ட​தாரி ஆசிரியர் பணிக்கு 2-ம் தாள் தேர்​வும் நடத்​தப்​படு​கிறது. இந்தத் தேர்​வில் ஒரு​முறை தேர்ச்சி பெற்​றால், அதன்சான்​றிதழ் வாழ்​நாள் முழு​வதும்செல்​லத்​தக்​கதாகும்.

இந்​நிலை​யில், நடப்பு ஆண்​டுக்​கான சிடெட் தேர்வு இன்​றும், நாளை​யும் (பிப்​.7, 8) நடை​பெறுகிறது. மொத்​தம் 150 மதிப்​பெண்​கள். தமிழ், இந்​தி, ஆங்​கிலம் உள்​ளிட்ட 20 மொழிகளில் தேர்வு நடைபெறும்.

தேர்​வர்​களுக்​கான ஹால் டிக்​கெட் கடந்த 5-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. அதன் விவரங்​களை https://ctet.nic.in/ என்ற இணை​யதளத்​தில் அறிய​லாம். தேர்வு மையத்​துக்கு காலை அமர்​வுக்கு 9.30 மணிக்​கும், பிற்பகல் 2.30 மணிக்​கும் முன்​பாக தேர்வர்கள் வந்​து​விட வேண்​டும்.

ஹால் டிக்​கெட்​டில் கூறப்​பட்​டுள்ள விதி​களை முறையாக பின்​பற்றி தேர்​வறை​யில் செயல்பட வேண்​டும். முறை​கேடு​களில் ஈடு​பட்​டால், தேர்ச்சி ரத்து செய்​யப்​படு​வதுடன், எதிர்​காலத் தேர்​வு​களில் பங்​கேற்க தடை​யும்​ விதிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
Saturday, February 07, 2026

அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் பெற முடியாது: ஐகோர்ட்

'அரசு ஊழியர், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்தால், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் பெற தகுதியில்லை' என, சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெளிவுபடுத்தி உள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள் இருவர், தங்களை விருப்ப ஓய்வு பெற்றவர்களாகக் கருதி, ஓய்வூதியம் வழங்க, அரசுக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். பணியை ராஜினாமா செய்த அரசு ஊழியர், ஓய்வூதியம் பெற தகுதி உள்ளதா, இல்லையா என்பது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம், இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், டி.பரத சக்கரவர்த்தி மற்றும் சி.குமரப்பன் அடங்கிய, மூன்று நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: பணி விதிகளில் ஓய்வு, விருப்ப ஓய்வு, கட்டாய ஓய்வு, ராஜினாமா ஆகிய சொற்றொடர்கள், வெவ்வேறு பொருளை உணர்த்துகின்றன.

தமிழக ஓய்வூதிய விதிகள், உடல் அல்லது மன அளவில் பலவீனம் போன்ற மருத்துவ காரணங்கள் அடிப்படையில், ராஜினாமா செய்வோருக்கு மட்டுமே, ஓய்வூதியம் வழங்க வகை செய்கிறது. மற்ற மருத்துவ காரணங்களை கூறி ராஜினாமா செய்தவர், முந்தைய பணிக் காலத்தை இழந்து விடுவதால், ஓய்வூதியப் பலன்களைக் கோர முடியாது. இவ்வாறு நீதிபதிகள், தங்கள் உத்தரவில் தெளிவுப்படுத்தி உள்ளனர்.
Saturday, February 07, 2026

வெல்ல வேண்டியது வீராப்பா? கோரிக்கையா?

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது ஆசிரியர் சமூகத்திற்கு இன்று சாலப் பொருத்தம். பள்ளிக் கல்வித்துறையில் அண்மைக்காலமாக மலிந்து காணப்படும் பல்வேறு குளறுபடிகள், ஊதிய இழப்புகள், நம்பிக்கையின்மை பேச்சுகள், விரக்தி மனநிலைகள், முரட்டுத்தனமான எதிர்ப்புகள், அவதூறுகள், தலைமைக்குக் கட்டுப்படாத தான்தோன்றித்தனங்கள் என இப்படிக் கூறிக்கொண்டே போக முடியும்.

குதிரையை விட்டுவிட்டு லாயத்தைப் பூட்டுவதால் பயனுண்டோ? எல்லாவிதமான செயத் தகா செயல்களை வேண்டுமென்றே செய்து விட்டு கடைசியில் ஆப்பசைத்த குரங்கு போன்று அல்லல் படுவதே வேலையாகிப் போய்விட்டது. இது மிகையல்ல. உண்மை.

இது தேர்தல் காலம். அதேவேளையில் போராட்டக் காலமும் கூட. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விடாப்பிடியான முரண்டு பிடிக்கும் தொடர் போர். எப்படியாவது அன்று ஆட்சியைப் பிடித்தே ஆகவேண்டும் என்ற அரசியல் நெருக்கடியில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத, குறுகிய, தன்னலமிக்க கோரிக்கையை முன்வைத்து போராடிய போராட்டக்காரர்கள் மத்தியில் நியாயத்தின் சாத்தியக்கூறுகள் பற்றி கிஞ்சிற்றும் ஆராயாமல் நேரடியாக ஒவ்வொரு போராட்டக் களத்திற்கும் சென்று வாரியிறைத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வழியின்றி தற்போது விழிபிதுங்கித் தவித்து வருவது கண்கூடு.

இந்நிலையில், இன்றைய முக்கிய எதிர்க்கட்சிகள் எதுவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக எந்தவொரு உறுதிமொழியோ அல்லது பொய்யான போலியான வாக்குறுதி எதையும் தப்பித்தவறி முனகியதாகக் கூட காணக் கிடைக்கவில்லை. அப்படியும் ஓரிரு கட்சிகள் எதிரிக்கு எதிரி நண்பர்கள் என்பது போல நேசக்கரம் நீட்டியதில் யாதொரு பலனும் கிடைக்கப் போவதில்லை. ஏனெனில், அவர்களால் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாத நிலை. அதாவது அத்தைக்கு முதலில் மீசை முளைக்கட்டும் எனக் கருதும் மனோபாவம் உலைக்கு ஒருபோதும் அரிசியாகாது.

ஆற்றிடம் கோபித்துக் கொண்டு அழுக்கைக் கழுவாமல் போனால் யாருக்கு நட்டம் என்பதை உணரும் தருணம் இது. எல்லாவற்றிற்கும் நீதிமன்றம் படியேறுதல் என்பதும் அதன்மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுத்தல் என்பது ஒருநாளும் நல்லதொரு நிறைவேற்றத்தக்க வெற்றிகரமான தீர்வாக அமையாது. நியாயத்திற்கு புறம்பாகப் பெற மற்றும் பெறப்பட்டவற்றிற்கு நியாயம் கேட்பதில் என்னவகை நியாயம் இருக்க முடியும் என்று தெரியவில்லை. முன்வைக்கும் அத்தனைக் கோரிக்கைகளையும் இறுதியாக நிறைவேற்றும் இடத்தில் மக்கள் மன்றம் தான் உள்ளது என்பதை ஆத்திரத்தில் புத்தி மழுங்கி மறந்துவிடக் கூடாது.

அரசிடம் வாதாடிப் பெறுவதைத் தான் முன்னத்தி ஏர்கள் வழக்கமாக்கி வைத்திருந்தார்கள். வேறெந்த துறைகளிலும் இல்லாத அளவிற்கு இங்கு தான் வழக்குகள் குவிந்துள்ளன. அதன் காரணமாக ஆசிரியர் பெருமக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பல சலுகைகள் கிணற்றில் போடப்பட்ட பாறாங்கற்களாகக் கிடக்கின்றன. அவ்வளவு அவசரம். எதுவாக இருப்பினும் அரசு மனம் வைத்தால் தான் எதுவும் இங்கு சாத்தியம். இது சத்தியம். அதைவிடுத்து வீண் முரண்டு பிடிப்பதால் நட்டம் அரசுக்கு இல்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கே!

அதுபோல், இயக்கப் பற்றும் தலைமைக்குக் கட்டுப்படுதல் மற்றும் கீழ்ப்படிதல் என்பன ஒவ்வொரு ஊழியர் கடமையாகும். அது தற்போது காற்றில் பறக்கும் நிலைக்கு ஆளானது வேதனைக்குரியது. அவர்கள் மீதான வரைமுறையற்ற பேச்சுகளும் ஏச்சுகளும் மட்டுமல்லாமல் அநாகரிக, சுடு சொற்களும் அவமரியாதை ஒருமையில் சபிக்கப்படும் வசவுகளும் மலிந்து போனது காலத்தின் கொடுமை! ஒரு மாநில தலைமையை மாடு மேய்க்கும் நபரை விட கீழாக நடத்துதல் என்பது ஏற்க இயலாத ஒன்று. நடக்கும் தவறுகளுக்குக் காரணங்களை ஆராய வேண்டுமேயொழிய நபர்களைப் பலி ஆடுகள் ஆக்குதல் கூடாது.

இயக்கத்தில் தனித்தன்மை; ஒருங்கிணைப்பில் தோழமை என்பது ஓர் இயக்கவாதியின் வெற்றியின் தாரக மந்திரம் ஆகும். இயக்கத்திற்குள் தனிக்குடித்தனமும் தோழமைக்கு மாற்றாக நரித்தனமும் மேலோங்கிக் கோலோச்சும் காலத்தில் எதைச் சாதிக்க இயலும்? தற்கால போராட்டத்தில் பொதுநலம் கானல் நீராக மாறி சுயநலம் காட்டாறாகப் பாயும் சூழலில் எதை வென்றெடுக்க முடியும்? சமூக ஊடகங்கள் முழுவதும் வீர உணர்ச்சிக்கு மாற்றாக ஒரே ஒப்பாரி!

முன்பெல்லாம் போராட்டக் களத்திற்கு செல்லும் போராளிகளின் கைப்பையில் எப்போதும் ஒரு மாற்று உடை இருக்கும். நவீன போராளிகளிடம் நல்ல விலையுயர்ந்த கைப்பேசி மட்டுமே இருப்பது சாபக்கேடு. இயக்கங்களின் ஆகப் பெரும் பின்னடைவிற்கு அதுவே முழுமுதற் காரணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இழப்பதற்கு எதுவுமில்லை என்று கூப்பாடு போட்டுக் கொண்டே இருக்கின்ற சிலவற்றையும் இழப்பது என்பது அறிவுடைமை ஆகாது.

போருக்குப் போகும் ஒவ்வொரு சிறந்த வீரனும் தம் வாளோடு தமக்கான தடுப்புக் கவசத்தையும் கூடவே கட்டாயம் எடுத்துப் போவான். கால் முன்னோக்கி அடி வைத்தாலும் புத்தி பின் விளைவுகள் குறித்து ஆராய்வதும் அதன்படி முன்னேறுவதும் கூடவே நிகழ்வது நல்லது. பேச வாய் இருக்கிறது, தடித்த வார்த்தைகள் இருக்கின்றன என்பதற்காக எதை வேண்டுமானாலும் கொப்பளித்துத் துப்பி விடலாம் என்று எண்ணுவது பேதைமை.

பங்களிப்பு ஓய்வூதியம் இருந்த வரை பழைய ஓய்வூதியம் வேண்டும் என்றார்கள். உறுதியளிப்பு ஓய்வூதியம் அறிவிக்கப்பட்ட பின்னர் பங்களிப்பு ஓய்வூதியமே சிறந்தது என்று கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அதற்காக அரசை வசைபாடுவதும் நன்றி அறிவிப்பை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதும் ஒருபோதும் சரியாகாது. ஆட்சியாளர்களுக்குத் தோல்வியைப் பரிசளித்து வேண்டுமானால் ஓர் ஐந்து ஆண்டுகள் மட்டும் தான் உட்கார வைக்க முடியும். அதேவேளையில், எந்தவொரு கோரிக்கையும் நிறைவேறாமல் பணிநிறைவு காலத்திற்குப் பின்னும் துன்பப்பட போவது யார் என்பதை முடிவு செய்ய வேண்டியதும் அவசியம்.

இரு தரப்புக்கும் இடையே எப்போதும் இணக்கம் இருப்பது என்பது இன்றியமையாதது. அப்போதுதான் புதிய கோரிக்கைகளை வெல்லவோ, பழையவற்றைத் திருத்தியமைக்கவோ, ஒழுங்குபடுத்தவோ இயலும். அவ்வாறின்றி எதிரி மனப்பான்மையோடு வெறுமனே முரண்டு பிடித்துக் கொண்டே இருந்தால் நட்டம் அரசுக்கு அல்ல என்பதை ஆழ நினைவில் கொள்வதும் தேவை. ஒன்றை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியம். இங்கு யாரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஒன்று விடாமல் நிறைவேற்றித் தருவதற்கு அடித்துப் பிடித்துக் கொண்டு நிற்கவில்லை.

இந்த நிலையில் மூத்தோர் சொல்லும் செயலும் முதிர்ச்சியானது என்பதைப் புரிந்து நடப்பது என்பது அவசியமாகிறது. இஃது ஒரு தொடர் ஓட்டம் போன்றது. எப்போதும் முன்னத்தி ஏர்களை மதிப்பதும் அவர்தம் தியாகங்களைப் போற்றுவதும் இன்றியமையாதது என்பதை உணராமல் அவர்களையும் விட்டு வைக்காமல் வசவு பாடுவதும் கடுஞ்சொற்கள் மொழிவதும் தூற்றுவதும் இழிவுபடுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பொய் பரப்புரை செய்ததும் என்பது எதிர்வரும் காலங்களில் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

அரசையும் முதல்வரையும் துறை சார்ந்த அமைச்சர் பெருமக்களையும் மிகவும் துச்சமாக நினைத்துப் பல்வேறு பதிவுகள் பதிவிடுவது என்பது ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக அமையாது. தாம் முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் அதிகாரம் அவர்களுக்கே உண்டு. யார் யாரை இங்கு மிரட்டுவது? வெறுங்கை வீரம் வெற்றியைத் தேடித் தந்து விடுமா என்ன?செயல்படுத்துபவர்களை முழுவதுமாகப் பகைத்துக் கொண்டு கோரிக்கைகளை யாரிடம் போய் கேட்பது? அதிகாரத்தாலும் அவமதிப்பாலும் சரி ஒருக்காலும் ஒரு புல் பூண்டைக் கூட முளைக்க வைக்க முடியாது என்பதை பாதிக்கப்பட்ட தரப்பு இங்கு புரிந்து கொள்வது நல்லது.

நன்றி அறிவிப்பு என்பது கிடைத்தத்தற்கானது மட்டுமல்ல. இனி மேற்கொண்டு கிடைக்கப் போவதற்கும் என்பதைப் புரிந்து கொள்ளல் அவசியம். அதைவிடுத்து குய்யோ முறையோ என்று ஓலமிடுவதும் எகத்தாளமிடுவதும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிப்பதும் கலந்து கொள்வோரை இழிவாக நினைப்பதும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைப் புழுதி வாரித் தூற்றுவதும் என்பன அருவருக்கத்தக்க செய்கைகள் ஆகும். இதனால் ஏற்பட இருக்கும் இழப்புகள் யாருக்கு என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டியது அவசர அவசியமான ஒன்று.

நடந்தவற்றை மறந்தும் கடந்தும் நல்லனவற்றை நினைந்தும் ஒருங்கிணைந்தும் செயல்படுவது ஒன்றே ஆகச் சிறந்ததொரு தீர்வாக அமையும். தாம் வெல்வது முக்கியமா? தம் கோரிக்கைகள் வெல்வது முக்கியமா? என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தாம் முடிவெடுக்க வேண்டும்.

எழுத்தாளர் மணி கணேசன்
Saturday, February 07, 2026

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1. சிறப்பு தட்கல் (Tatkal) முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

2. விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்: வரும் 10 மற்றும் 11-ம் தேதிகள்.

3. விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

4. கட்டண விவரம்: தேர்வு கட்டணத்துடன் சேர்த்து, மேனிலைப் பள்ளிக்கு ரூ.1000-ம், பத்தாம் வகுப்புக்கு ரூ.500-ம் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

5. தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

6. இந்த விவரங்கள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Saturday, February 07, 2026

இன்றைய செய்திகள் 7.02.2026(சனிக்கிழமை)

🌹இதுவரை நடந்ததை யோசிப்பதை விட,இனி எப்படி நடக்கவேண்டும் என யோசிப்பவர்களே வாழத் தெரிந்தவர்கள்.!

🌹🌹வார்த்தைகளால் கொன்று விட்டு பிறகு மன்னிப்பு கேட்டு என்ன பயன்...

வலிகள் குறையப் போவதும் இல்லை... பேசிய வார்த்தைகள் மனதை விட்டு அழியப் போவதும் இல்லை.!!

🌹🌹🌹உண்மையான அன்புக்கும் பொய்யான அன்புக்கும் ஒரு சின்ன வித்தியாசம் தான்...

உண்மையான அன்பு நம்மிடம் பேச நேரத்தை உருவாக்கும்...

பொய்யான அன்பு நம்மிடம் பேசாமல் இருக்க காரணத்தை உருவாக்கும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑️⛑️அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் பெற முடியாது: ஐகோர்ட் (பத்திரிகைச் செய்தி)

⛑️⛑️உலகின் சிறந்த ஆசிரியர் - இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர் தேர்வு - 1 மில்லியன் டாலர் பரிசு.

⛑️⛑️JEE முதன்மைத் தேர்வு - தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு

⛑️⛑️கல்வித்தகுதியை வரிசையாகப் பெறாத ஆசிரியரின் பணி நியமனம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவு.

(நாளிதழ் செய்தி)

⛑️⛑️தேர்வுத்துறை இயக்குநரின் ‘ஸ்கிரைப்’ நியமன சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்

(நாளிதழ் செய்தி)

⛑️⛑️CTET பிப்ரவரி 2026: அனுமதி அட்டை வெளியீடு - தேர்வு வழிமுறைகள் – CBSE

⛑️⛑️சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு.

⛑️⛑️2026ஆம் ஆண்டுக்கான UPSC அறிவிக்கை வெளியீடு ⛑️⛑️பிப்.8-ல் நடைபெற உள்ள NIFT நுழைவுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

⛑️⛑️7.36 லட்சம் பேர் எழுதிய NET தேர்வு முடிவுகள் வெளியீடு.

⛑️⛑️State Government Salary Package (SGSP) - அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் மேலும் 3 வங்கிகள் இணைப்பு - அரசாணை வெளியீடு.

⛑️⛑️பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.

⛑️⛑️TET தேர்வு 2025 - தேர்ச்சி சான்றிதழில் பிழைகள் இருப்பின் சரிசெய்வது தொடர்பாக :-

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் அறிவிப்பு

TET தேர்வு 2025 - பின்வருவனவற்றில் மாற்றத்திற்கான கோரிக்கை:- 👉1. ஆரம்ப மாற்றம் 👉2. பிறந்த தேதி மாற்றம்

👉3. எழுத்து மாற்றம்

👉4. பாலின மாற்றம்

விண்ணப்ப நகல், சான்றுகள் மற்றும் சலான் ரூ.200/-க்கு பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

பணம் செலுத்திய நகலுடன் உங்களது சான்றிதழில் உள்ள பிழையினை குறிப்பிட்டு, சான்றிதழ் நகல் ஒன்றும் இணைத்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்ப வேண்டும்.

⛑️⛑️வெள்ளக்கோவில் ஒன்றியம் செம்மாண்டாம்பாளையம் இடைநிலை ஆசிரியர் திருமதி தேன்மொழி அவர்கள் Mcom.BED க்கு பெற்ற ஊக்க ஊதியத்தை வெள்ளகோவில் வட்டாரக் கல்வி அலுவலர் ந.க.எண் 6475/அ1/2023.தேதி 5.9.23 உத்தரவு மூலம் பிடித்தம் செய்ததை, சென்னை மாண்பமை நீதியரசர் தடை செய்ததோடு, ஏற்கனவே Mcom,Bed க்கு கொடுத்த ஊக்க ஊதியம் செல்லும்.அதை உடனடியாக வழங்க வேண்டும் W.P.NO 6941 / 2024 & W.MP NO 7739/2024 உத்தரவு மூலம் பிறப்பித்து உள்ளார்.

⛑️⛑️10, +1(Arrears) & +2 பொது தேர்வுகள் :தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு தக்கல் முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்ற சிறப்பு வாய்ப்பளித்தல் குறித்து அரசு தேர்வுகள் இயக்குநரின் செய்திக் குறிப்பு வெளியீடு.

👉10, 11, 12 ஆம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய, தனித்தேர்வர்களுக்கு தட்கல் முறையில் மீண்டும் ஒரு வாய்ப்பு.

⛑️⛑️TNPSC Group 4: 2-ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு – பிப்.24, 25 சென்னையில் நடைபெறவுள்ளது.

⛑️⛑️SI தேர்வு முடிவுகள் நீக்கம் சர்ச்சை – தொழில்நுட்ப கோளாறு காரணம் என நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

⛑️⛑️நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பந்தலூர் ஆகிய 2 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அரசாணை வெளியீடு

உதகை ஊராட்சி ஒன்றியத்தில் 38 கிராம ஊராட்சிகள் இருந்த நிலையில், 12 ஊராட்சிகளைப் பிரிந்து குந்தா ஊராட்சி ஒன்றியம் உருவாக்கம்

அதேபோல, கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்த 22 ஊராட்சிகளில், 13 ஊராட்சிகளைப் பிரித்து பந்தலூர் ஒன்றியம் உருவாக்கம் ⛑️⛑️சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க முடியாது - சென்சார் போர்டு

⛑️⛑️புதுச்சேரியில் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.1000 இருந்து ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி

இத்திட்டத்தால் அரசுக்கு ரூ.17.50 கோடி கூடுதல் செலவாகும் என கணிப்பு

⛑️⛑️சிக்கிம் நம்சி பகுதியில் நேற்று அதிகாலை 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.

⛑️⛑️குப்பையை கொட்ட ஆன்லைனில் புக் செய்த பெண்

குப்பை கொட்டுவதற்கு ரேபிடோ பயன்படுத்திய பெண்

பெண்ணின் வீட்டிற்கு சென்ற ரேபிடோ ஓட்டுநர் அவர் கொடுத்த பொருளை வாங்கிவிட்டு டெலிவரி லொகேஷனுக்கு சென்றுள்ளார்.

அங்கு யாரும் இல்லாததால் அப்பெண்ணுக்கு அவர் போன் செய்துள்ளார்.

அதற்கு அப்பெண் குப்பை கொட்டுவதற்கு தான் அழைத்தேன், கிடங்கில் வீசி விடுங்கள் எனக் கூறியதால் அவர் மனவேதனை அடைந்துள்ளார்.

⛑️⛑️வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு

⛑️⛑️விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

⛑️⛑️அனைவரும் கொண்டாடும் வகையில் தேர்தல் அறிக்கை அமையும்" - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

⛑️⛑️பிரதமர் மோடி வருகை தேதி மாற்றம்

மதுரை மண்டேலா நகர் பகுதியில் வரும் 28ம் தேதி நடக்க இருந்த பிரதமர் மோடியின் NDA பொதுக்கூட்டம் மார்ச் 1ம் தேதிக்கு மாற்றம்

⛑️⛑️6 புதிய சமத்துவபுரங்கள் திறப்பு

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.42.40 கோடியில் 6 புதிய சமத்துவபுரங்கள், ரூ.212 கோடியில் அங்கன்வாடி, பள்ளி கட்ட‌டங்கள், பாலங்கள் மற்றும் ரூ.1,238 கோடியில் 9,696 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

⛑️⛑️எங்களுடைய திட்டங்களை காப்பி அடித்துதான் அதிமுக தேர்தல் அறிக்கையாக சொல்கிறது. தேர்தல் அறிக்கை அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய வகையில் இருக்கும்

அதிமுகவால் சொல்லத்தான் முடியும்; ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்தால் தான் செய்ய

முடியும்

-அமைச்சர் தங்கம் தென்னரசு

⛑️⛑️மேல்முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என விஜய் தரப்பு கோரிக்கை!

வருமான வரித்தறை விதித்த அபராத உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை (appellate authority) விஜய் அணுகலாம் என நீதிபதி தெரிவிப்பு!

⛑️⛑️களத்தில் இறங்குங்கள் தாய்மார்களே!”

பெண்களுக்கான எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு வழங்கியிருக்கிறது

அடுத்த இரண்டு மாதத்திற்கு தாய்மார்கள் களப்பணியில் இறங்கி அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்

-துணை முதலமைச்சர் உதயநிதி

⛑️⛑️இனி பாரத் டாக்ஸி

ஓலா, ஊபர், ராபிடோ உள்ளிட்ட டாக்ஸி நிறுவனங்களைப் போல பாரத் டாக்ஸி என்ற புதிய செயலியை அறிமுகம் செய்தது மத்திய அரசு

⛑️⛑️ஊழல் செய்ய மாட்டேன் என விஜய் சொல்லி வருகிறார், இப்போதுதான் விஜய்க்கு எதிராக விசில் அடிக்க தொடங்கியுள்ளது. இனி நாங்கள் ஒன்று சேர்ந்து விஜயை எதிர்த்து ட்ரம் அடிப்போம்"

-பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

⛑️⛑️மாம்பழம் சின்னம்

எங்களுக்கு தான்"

"மாம்பழம் சின்னம் எங்களுக்கு தான் சொந்தம், நீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகும்

கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, விரைவில் நல்ல செய்தி வரும்"

-பாமக நிறுவனர் ராமதாஸ்

⛑️⛑️அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை

⛑️⛑️சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பிப்.17-க்கு முன் அறிவிக்கிறது தேமுதிக

இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்படும் முன்பு கூட்டணியை அறிவிப்போம்

⛑️⛑️விருதுநகரில் இன்று நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

⛑️⛑️குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் - எச்சரிக்கை வாசகங்களை அச்சடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

⛑️⛑️11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

⛑️⛑️இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 காசுகள் சரிந்து ரூ.90.70 ஆக நிர்ணயம்

⛑️⛑️மனித வெடிகுண்டு தாக்குதல் - 31 பேர் பலி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்வு

மசூதியில் தொழுகையின்போது நடந்த தாக்குதலில் 169 பேர் படுகாயம்

⛑️⛑️பாஜக மாநில குழு அமைப்பு

சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணிக்கு வலுசேர்த்திட பாஜக சார்பில் மாநில குழு அமைப்பு

தலைவராக துரைசாமியையும் துணை தலைவராக பாலச்சந்திரனையும் நியமித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

Friday, February 6, 2026

Friday, February 06, 2026

உலகின் சிறந்த ஆசிரியர் - இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர் தேர்வு - 1 மில்லியன் டாலர் பரிசு!

இந்தியாவை சேர்ந்த ரூபிள் நாகி என்பவர், இந்த ஆண்டின் சிறந்த ஆசிரியர் பரிசிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இவருக்கு, 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையைத் துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வழங்கியுள்ளார்.

உலக அரசாங்க உச்சி மாநாடு துபாயில், நவம்பர் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில், ஆசிரியர்களுக்கான மிக உயரிய விருதாக கருதப்படும் “உலகின் சிறந்த ஆசிரியர் பரிசு” இந்தியாவைச் சேர்ந்த ரூபிள் நாகி என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பரிசை துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வழங்கினார். முன்னதாக, உலகின் சிறந்த ஆசிரியருக்கான பரிசு (Global Teachers Prize) 2015 ஆம் ஆண்டு முதல் லண்டனை தலைமையகமாகக் கொண்ட வர்க்கி அறக்கட்டளை நிறுவனத்தால் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கல்விக்கு சிறந்த சேவை ஆற்றும் ஆசிரியர்கள் இப்பரிசிற்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கும் 1 மில்லியர் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும்.

அந்த வகையில் இந்தாண்டு, நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் வாழும் குழந்தைகளிடையே கல்வி அணுகலை மாற்றியமைத்ததற்காக இந்தியாவைச் சேர்ந்த ரூபிள் நாகி என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, 139 நாடுகளிலிருந்து வந்த 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ரூபிள் நாகி தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ரூபிள் நாகி?

ஜம்மு காஷ்மீரில் பிறந்த ரூபிள் நாகி, லண்டனில் உள்ள 'ஸ்லேட் ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்' கல்லூரியில் பயின்றவர். மேலும், இவர் ஒரு சர்வதேச அளவிலான புகழ்பெற்ற கலைஞர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர் ஆவார். இவர், இந்தியாவின் குடிசைப் பகுதிகளில் உள்ள பாழடைந்த சுவர்களில் கல்வி சார்ந்த சித்திரங்களை வரைந்து, அவற்றைத் திறந்தவெளி வகுப்பறைகளாக மாற்றினார். இதன் மூலம், எளிய முறையில் வாசிப்பு, எழுதுதல் மற்றும் கணித அறிவை குழந்தைகளுக்குக் கொண்டு சென்றார்.

உலகின் சிறந்த ஆசிரியர் பரிசு

மேலும், 'ரூபிள் நாகி கலை அறக்கட்டளை' மூலம் இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கற்றல் மையங்களை உருவாக்கியுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் 1,50,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வண்ணம் பூசிச் சீரமைத்ததோடு, 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்குக் கலை சார்ந்த கல்வியை வழங்கியுள்ளார். இவரது புதுமையான கற்பித்தல் முறையால், பின்தங்கிய பகுதிகளில் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது.


பரிசுத் தொகையின் திட்டம்:

இந்த பரிசுத் தொகை பெற்ற ரூபிள் நாகி பேசுகையில், தனக்குக் கிடைத்துள்ள 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை முழுவதுமாக, ஏழை எளிய இளைஞர்களுக்கு இலவசத் தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு வழங்கும் கல்வி நிறுவனத்தை உருவாக்கப் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். "கல்வி, கருணை மற்றும் தொடர் உழைப்பு ஆகியவை எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த விருது ஒரு சான்று."
Friday, February 06, 2026

TAPS ஆடும் மங்காத்தா! - செல்வ.ரஞ்சித் குமார்


TAPS ஆடும் மங்காத்தா! _✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

TAPS எனும் Tamilnadu Assured Pension Scheme அறிவிப்பு வெளியான நாள் தொடங்கி அதற்குண்டான சங்கத் தலைமைகளின் வரவேற்புகள் தாண்டி பெரும்பான்மை ஊழியர்கள் மத்தியில் ஐயங்களும், கேள்விகளும், எதிர்ப்புகளும் எழுந்த வண்ணமே உள்ளன. TAPSஐ முன் வைத்து உள்ளே - வெளியே என்று ஒரு மங்காத்தா ஆட்டமே நடைபெற்று வருகிறது.

TAPSற்கு வெளியே, பெரும்பான்மை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் விகற்பமாகக் கருதுவது சங்கங்களின் போக்கைத்தான். பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய உரிமைக்காகக் களம் கண்ட சங்கத் தலைமைகள், அவ்வுரிமையைத் தவிர்த்துவிட்டு, ஊதியம் & பணிக்காலத்தில் பல்வேறு படி நிலைகளில் உள்ள இலட்சக்கணக்கான ஊழியர்களுக்கான ஒரு புத்தம்புதிய திட்டமான TAPS என்ற திட்டத்தை அறிவித்தமாத்திரத்தில், அதன் சாதகபாதகங்கள் குறித்து கூட்டமைப்பாகக் கலந்து ஆராயும் நேரங்கூட ஒதுக்காது தங்களது அளவுகடந்த மகிழ்ச்சியை இனிப்பைப் பகிர்ந்து வெளிப்படுத்தினர். ஒருசில நிமிடங்களில் TAPSஐ பகுப்பாய்வு செய்யும் தொழிற்நுட்ப வல்லமை அப்போது அவர்களிடம் இருந்தது என்றால், அந்நிகழ்வில் பங்கேற்ற தலைமைச் செயலக சங்கம் பின்னர் வெளியிட்ட தனது அறிக்கையில் TAPS ஒரு சவலைக்குழந்தை (தாய்ப்பால் எனும் அடிப்படை உணவூட்டமே இல்லாது மெலிந்த குழந்தை) என்று குறிப்பிடவேண்டிய தேவை என்ன? என்ற கேள்வியும் ஊழியர்கள் மத்தியில் தொக்கி நிற்கிறது. தலைமைச் செயலக சங்க சுட்டிக்காட்டலைத் தொழிற்சங்கப் பார்வையோடே பார்ப்போமெனில், பறிக்கப்பட்ட முழுமையான ஓய்வூதிய உரிமையைக் கேட்டுப் போராடிய களத்தில், ஊட்டமே இல்லாத ஒரு திட்டத்திற்காகக் கொண்டாடவேண்டிய தேவையே இல்லையே.

எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன / ஆளும்கட்சிகள் அறிவித்துவிட்டன என்ற காரணத்திற்காக தமது உறுப்பினர்கள் சார்ந்த எந்தவொரு அறிவிப்பையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதோ / எதிர்ப்பதோ தொழிற்சங்க இலக்கணமாகாது. கோரிக்கையை வடிவமைத்துக் களம் காண்பது சங்கங்களே அன்றி கட்சிகள் அல்ல.

ஆயிரம் விமர்சனங்கள் எழுந்தாலும் அதைத் தர்க்கரீதியாக ஆதாரத்துடன் மறுத்துத் தமது உறுப்பினர்களைத் தெளிவிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள சங்கங்கள், TAPS குறித்த மாற்றுச் சிந்தைக்குள்ளாகச் செல்ல வேண்டாம், எதிர்க்கருத்துகளுக்குச் செவிமடுக்க வேண்டாம், இதை எதிர்ப்போரெல்லாம் சமூகவிரோதிகள், TAPSஐ விமர்சிக்க வேண்டாம், விமர்சனங்களை அனுமதிக்கவும் வேண்டாமென அறிவுறுத்தி வருவதெல்லாம் தொழிற்சங்க இலக்கணத்திலேயே இல்லாத புதுவித நடைமுறையாக இருக்கிறது.

இவையெல்லாம், உறுப்பினர்களால் உறுப்பினர்களுக்காக உறுப்பினர்களே இயக்கும் சங்கங்கள் அதிகாரத்தின் பக்கம் சாய்க்கப்பட்டுவிட்டனவோ என்ற ஐயத்தை மிக வலுவாக அடிப்படை உறுப்பினர்கள் மத்தியில் எழுப்பியுள்ளதால் TAPS அதன் அறிமுக நிலையிலேயே தொழிற்சங்க நடைமுறைகளுக்கு உள்ளே 100% பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, TAPS குறித்த எந்தவித விதிமுறைகளும் தற்போதுவரை வெளியாகாத நிலையில், விதிமுறைகளே இல்லாத / வெளியிடப்படாத TAPS ஊழியர்களுக்குச் சாதகமானதுதான் என்று அறிக்கைக்கம்புகள் சுற்றிவரும் சூழலில் TAPS குறித்த ஐயங்களை ஊழியர்களின் எதிர்கால நலனை முன்வைத்து விவாதித்துத் தெளிய வேண்டியது TAPSஐ எதிர்கொள்ளப் போகும் ஒவ்வொருவருக்குமான தேவையாக உள்ளது.

பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் இரண்டும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறு ஊழியர் உரிமைகள் - சட்டங்கள். தமிழ்நாட்டில் NPSஐ முன்வைத்து 2003ல் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டு CPS அறிவிக்கப்பட்டபோது பணிக்கொடையும் எவ்வித சட்டப்பூர்வ அறிவிப்புமின்றி உடன் பறிக்கப்பட்டுவிட்டது. அதே நேரம், NPSல் உள்ளோருக்கு அன்று முதல் இன்று வரை பணிக்கொடை வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வூதியமும் பணிக்கொடையும் வெவ்வேறானது என்பதை அதைப் பறிகொடுத்து 23 ஆண்டுகள் ஆகியும் நாம் உணரவேயில்லை என்பதும், இப்போதும் அதை உறுப்பினர்களுக்கு உணர்த்த சங்கங்கள் விரும்பவேயில்லை என்பதும் பெருங்கொடுமைதான்.

ஆம். ஊழியரது 10% சொந்தப் பணத்தை பணிக்கொடைக்கு ஈடாகக் கருதி TAPSல் பெற்றுக்கொள்ளலாம் என்றெல்லாம் சில மாமேதைகள் உருட்டி வருவது தொழிற்சங்கம் வலியுறுத்தும் ஊழியர் நலனிற்கு 100% எதிரான முரட்டு முடக்குவாதமே அன்றி வேறென்ன!?

பணிக்கொடைச் சட்டம் 1972ன் படியான கணக்கீட்டுகளின் அடிப்படையில் பார்த்தோமெனில், ரூ.25 இலட்சம் பணிக்கொடை என்பது அனைவருக்கும் கிடைக்கக்கூடியது அல்ல. தனிப்பட்ட ஊழியரின் பணிக்காலம் & அடிப்படை ஊதியம் சார்ந்தது. எனவே ரூ.25 இலட்சம் என்பது 90% ஊழியருக்கு ஒரு மாய எண் தான். மேலும், இந்த பணிக்கொடைச் சட்டம் குறித்து TAPS அரசாணையின் பார்வையில் மேற்கோள் காட்டப்படாததால், எந்த விதிமுறைகளின் அடிப்படையில் பணிக்கொடை நிர்ணயம் செய்யப்படப்போகிறது என்பது தற்போதுவரை உறுதியாகவில்லை.

TAPSல் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் அவர்களது 10% பிடித்தத்தில் இருந்துதான் வழங்கப்படும் என்றும் கூடுதல் தொகையை அரசு ஓய்வூதிய நிதியத்திற்கு வழங்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இதுவரையிலான CPS பிடித்தத்தொகை சுமார் ரூ.1,00,000 கோடி குறித்தோ அதன் எதிர்கால நிலை குறித்தோ எந்தவித குறிப்பும் அரசாணையில் இல்லை. மேலும், இந்திய ஓய்வூதியச் சட்டம் குறித்த பார்வையோ மேற்கோளோ அரசாணையில் இல்லை என்பதால், எந்தவிதமான கணக்கீடுகளின் அடிப்படையில் ஓய்வூதியம் நிர்ணயம் செய்யப்படப்போகிறது என்பதும் இன்றைய சூழலில் விடை தெரிந்தாக வேண்டிய வினாவே.

இவற்றையெல்லாம்விட ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பு ஓய்வூதிய நிதியத்திடம் இருக்குமென்றே அரசாணையின் வழி அறிய முடிகிறது என்பதால் அரசின் ஓய்வூதியப் பொறுப்பில் இருந்து தன்னைத் தளர்த்திக்கொள்ள வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதிய நிதியத்தில் யார் யார் எல்லாம் இடம் பெறுவர் என்ற எந்தவிதக் குறிப்பும் அரசாணையில் இல்லை. நடைமுறையில் போக்குவரத்து & கூட்டுறவுத் துறைகளுக்கு இதே போன்ற ஓய்வூதிய நிதியங்கள் உள்ளன. இந்த ஓய்வூதிய நிதிய நடைமுறைகள் என்பது இந்திய ஓய்வூதியச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவையே. அதாவது ஓய்வூதியத்தை நிறுத்திவைக்கவோ தாமதப்படுத்தவோ ஓய்வூதிய நிதியத்தால் முடியும். உதாரணமாக பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒத்த ஓய்வூதியம் பெறத் தகுதியுள்ள போக்குவரத்து ஊழியர்களுக்குக்கூட பணி ஓய்வின் போது முழுமையான ஓய்வூதியமோ பணிக்கொடையோ வழங்காது, பல கட்ட தவணைகளிலும், காலம் தாழ்த்தியும் வழங்கி வருவதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். நாளை இதே நிலை TAPSஐக் கையாளவுள்ள ஓய்வூதிய நிதியத்திற்கும் வராது என்று எவராலும் உறுதியளிக்க இயலாது.

ஊழியர்களின் 10% பிடித்தமானது பணிக்கொடை & ஓய்வூதியம் வழங்கப் போதுமானதாக இல்லாத சூழலில் கூடுதல் தொகையை அரசு ஓய்வூதிய நிதியத்திற்கு வழங்கும் என்பதும் அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதே. வரும் காலங்களில் ஆட்சியாளர்களின் அவ்வப்போதைய முடிவைப் பொறுத்து மாறும் அபாயம் உள்ளது. மேலும், ஓய்வூதிய நிதியம் ஊழியர்களின் பங்களிப்பை என்ன செய்யப்போகிறது என்பதும் இதுவரை தெளிவுபடுத்தப்படப்படவில்லை.

போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதியம் ஓய்வூதியத்திற்கு என ஒதுக்கப்பட்ட நிதியான சுமார் 9000 கோடியை மாற்றுப் பணிகளுக்குப் பயன்படுத்தி மடைமாற்றிக்கொண்டதே ஊழியர்களுக்கு உரிய காலத்தில் ஓய்வூதியம் வழங்கப்படாததற்கான காரணமாகத் தொழிற்சங்கங்களால் கூறப்பட்டு வருகிறது. ஓய்வுதிய நிதியத்திற்கு என போக்குவரத்துக் கழகங்கள் ஒதுக்கிக் கொள்ளும் நிதியே இவ்வாறு இருக்கும் சூழலில் ஊழியர்களின் 10% பிடித்தத்தை வைத்துப் பராமரிக்கப்போகிற TAPSன் ஓய்வூதிய நிதியம் குறித்ததோ, அந்நிதி எவ்வாறு கையாளப்படப்போகிறது என்பது குறித்தோ எவ்வித ஆக்கப்பூர்வ கேள்விகளும் சங்கங்களிடம் இருந்து எழுப்பப்படாமல் இருப்பது பெரும் வியப்பாகத்தான் உள்ளது.

மேலும், 23 ஆண்டுகளாக எதிர்த்த CPSம் தற்போது அறிவித்த TAPSம் விருப்பத் தேர்வாக பணியிலுள்ள CPS பாதிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதில் இருந்தே இந்த இரு திட்டங்களும் எந்த அளவில் ஒப்புநோக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்பட்டுள்ளது. இத்தகைய விருப்பத் தேர்வுமுறை மத்திய அரசுப்பணிகளில் NPS & UPS இடையே உள்ளதையும், NPSஐவிட மேலானது என்று மலர்தூவப்பட்ட UPSற்கு ஊழியர்களில் 80%ற்கும் மேல் விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. தொழிற்சங்கங்களின் 23 ஆண்டுகால ஓய்வூதிய உரிமை மீட்புப் போராட்டப் பயணம் என்பது 10% பிடித்தமற்ற - ஊழியர்களின் உழைப்பிற்கேற்ற கொடுபடா ஊதியமான - ஓய்வூதியச் சட்டப்பாதுகாப்புள்ள 'பழைய ஓய்வூதியத் திட்டம்' வேண்டித்தானே அன்றி ஊழியர்களிடமிருந்தே பிடித்து ஊழியர்களுக்குக் கொடுக்கும் திட்டங்களுக்காக அல்ல என்பதைத்தான் UPS விருப்பத் தேர்வின் தோல்வி வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

2003ல் நடைமுறைக்கு வந்த CPSல் Settlementற்கான விதிமுறைகளையே இடதுசாரி தொழிற்சங்கங்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தி 2016ல் தான் பெற முடிந்தது. TAPSற்கான விதிமுறைகள் எப்போது வருமெனத் தெரியவில்லை. நாளையே கூட வெளிவரலாம். வெளிவரட்டும் அதன் பின்பு அது குறித்தத் தீர்க்கமான சாதகபாதகங்களைப் பொதுவெளியில் விவாதித்துத் தெளிவோம். சாதகமெனில் தாராளமாக மகிழ்வோம்.

அதுவரையில் உறுப்பினர்கள் உள்ளத்தில் எழுந்த ஐயங்களைக் கேள்வியாக அரசிடம் முன்வைப்பதே சங்கங்களுக்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கையாக இருக்க வேண்டுமே அன்றி, சொல்லாத விதிகளை கற்பனை செய்து ஊழியர்களைச் சமரசம் செய்துகொள்ள நிர்பந்திப்பது அல்ல. ஒருவேளை பின்னாளில் வெளிவரும் விதிமுறைகளில் அநேக பாதகங்கள் இருக்கும் சூழலில் சங்கங்களின் மீதான மிச்ச சொச்ச நம்பிக்கையும் அற்றுப்போய்விடும் அபாயம் உள்ளது.

TETOJAC போராட்டத்தின் போது 2010ல் தரப்பட்ட 750 தனி ஊதியத்தோடே (PP) 99% சங்கங்கள் தங்களைச் சமரசம் செய்து கொண்டதன் விளைவு 16 ஆண்டுகள் கடந்தும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினை பேசுபொருளாக மட்டுமே நீடித்துக்கொண்டிருக்கிறது. மற்றொரு புறம் கொடுத்த அந்த PPயும் Incrementற்கு இல்லாது, Promotion Fixationக்கு இல்லாது, EL Surrenderக்கு இல்லாது, 'PP இருக்கு ஆனா அது POயா இல்ல' என்று மாற்றப்பட்டுவிட்டது. இதைக் கேட்கக்கூட நாதியத்துக் கிடக்கிறது இடைநிலை ஆசிரிய இனம்.

இன்று இதை விடக் கொடுமையாக TAPSன் வகைதொகை தெரியாத போதே கட்டவுட்டிற்கு பாக்கெட் பால் பீச்சும் ரசிக மனநிலைக்குள்ளாக தொழிற்சங்கங்க மூளைகள் ஆணியடிக்கப்பட்டுவிட்டன. ஓரிரு சங்கங்கள் மாத்திரமே எதிர்ப்பை / மாற்றத்தை வலியுறுத்தித் தங்களது உறுப்பினர்களுக்கு உண்மையாக இருக்க முன்வந்துள்ளன. வேறு சில விழுங்கவும் முடியாது துப்பவும் முடியாது வாயடைத்துக் கிடக்கின்றன. 750PPயைவிட மிகக் கொடிய வரலாற்றை எழுதிவிடாதபடி சங்கங்களின் கரங்களைத் தடுக்கப் போவது யாரோ!?

ரிலீஸ் ஆகாத படங்களுக்கு விருது கொடுப்பதும், வெளியிடப்படாத விதிகளுக்கு நன்றிக் கூடுகைகள் நடத்துவதும் தேவையற்ற வகையில் - வலிந்து ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தியை உருவாக்கிவிட்டுள்ளன என்பதை இதில் ஈடுபட்டுள்ளோர் உணர்ந்தாலும் உணர்த்த வேண்டிய இடத்தில் உரைக்காது சாலையில் சேலைகட்டி சோலைத் தீயை மறைக்கப் பார்க்கின்றனர். இத்தகைய அதீத மதிநுட்பம் சோலை, சேலை, சாலை, சாலையில் பயணிப்போர் என அனைவருக்கும் தீங்கைத்தான் விளைவிக்கும்.

10 இலட்சம் குடும்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் TAPS, தனது மங்காத்தாவை சங்கங்களைத் தாண்டி சபையிலும் விளையாடும் வல்லமை மிக்கது. அவையோர் இக்கள எதார்த்தத்தை உணர்ந்து காலத்தே செயல்பட முன்வந்தால் மட்டுமே யாவருக்கும் நன்மை தொடரும்.
Friday, February 06, 2026

நிரந்தரப் பணியிடங்கள் ஆசிரியர்கள் தேவை!

நிரந்தர ஆசிரியர் தேவை

எமது பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) பணி இடத்திற்கு தகுதி பெற்றவர்கள் 06.02.2026 க்குள் உரிய ஜாதி சான்றிதழுடன் பள்ளி செயலருக்கு விண்ணப்பிக்கவும்.

முதுகலை ஆசிரியர் ஆங்கிலம் SCA (அருந்ததியர்)

கல்வித் தகுதி : BA., (Eng), MA., (Eng) B.Ed.,

ஊதியம் / வயது வரம்பு அரசு விதிகளின்படி

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

செயலர், சீனிவாசா மேல்நிலைப்பள்ளி மேலையூர், பூம்புகார்-609107,சீர்காழி தாலுக்கா மயிலாடுதுறை மாவட்டம்.
Friday, February 06, 2026

கல்லூரி மாணவர்களை ‘ஸ்கிரைப்’ ஆக நியமிக்கும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம்: பிளஸ் 2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, அவர்கள் சொல்வதைக் கேட்டு எழுதுவதற்காக இதுவரை ஆசிரியர்களும், கல்வியாளர்களுமே ஸ்கிரைப்பாக நியமிக்கப்பட்டு வந்தனர்.

ஆனால், இந்தஆண்டு பொதுத்தேர்வு,திருப்புதல் தேர்வுகளில், கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை இப்பணியில் ஈடுபடுத்த அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

முறையான பயிற்சி இல்லாத நபர்களை தேர்வு எழுத்தர்களாக நியமிப்பது மாற்றுத் திறனாளி மாணவர்களின் மதிப்பெண் குறைந்து அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

எனவே, தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து விட்டு, பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
Friday, February 06, 2026

State Government Salary Package (SGSP) - அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் மேலும் 3 வங்கிகள் இணைப்பு - அரசாணை வெளியீடு!

State Government Salary Package (SGSP) - அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் மேலும் 3 வங்கிகள் இணைப்பு - அரசாணை வெளியீடு!

G.O.(Ms).No.29, SGSP - 3 Banks.pdf

👇👇👇👇