வாழ்த்து மடல்
இரண்டுமனம் இணைந்து அன்பில் கலப்பது திருமணம்
வறண்டநிலம் புதுமழையால் செழித்திடும் தினந்தினம்
இரண்டுஇல்லம் ஒன்றாகி புதுஉறவைத் தொடர்ந்திடும்
உறவுகளில் கூட்டமைப்பில் இல்வாழ்க்கை வளர்ந்திடும்
இருவழிகள் ஒருகாட்சி ஆவதுபோல் மணமக்கள்
இருவரையும் ஒருவராக இணைத்துவைக்கும் நன்னாளில்
உறவென்று இருந்தவளை ஒருமனதாய் மனம்உவந்து
ஒருமரத்தின் கிளைஎடுத்து வேறிடத்தில் நடுவதுபோல்
பெற்றவர்கள் மணப்பெண்ணை மற்றவருக்குக் கொடுத்திடுவர்
உரிமையென்று இருந்தவளை ஒருமனதாய் மனம்உவந்து
ஓரிடத்து நாற்றெடுத்து வேறிடத்தில் நடுவதுபோல்
பெற்றவளை மணம்முடிக்க மற்றவர்க்குக் கொடுத்திடுவர்
உயிரென்று இருந்தவளை ஒருமனதாய் மனம்உவந்து
ஒருவரது உடலுறுப்பை அடுத்தவருக்கு தருவதுபோல்
பெற்றெடுத்த தன்மகளை மற்றவர்க்குக் கொடுத்திடுவர்
மணமக்களே!
இல்லமென்ற கோவிலிலே தெய்வமென வாழ்ந்திடுவீர்
இல்லறத்து வாழ்க்கையிலே வெற்றிவாகை சூடிடுவீர்
பெற்றவரும் மற்றவரும் உற்றவரும் போற்றிடவே
பேறுபெற்று வாழ்ந்திடு வீர்.
No comments:
Post a Comment