15. தன்மேம்பாட்டுரை அணி
தன்னைத்
தானே புகழ்ந்துரைப்பது தன்மேம்பாட்டுரை அணி எனப்படும்.
தான்தற் புகழ்வது தன்மேம் பாட்டுரை. - தண்டியலங்காரம், 71
(எ.கா.)
எஞ்சினார் இல்லை எனக்கெதிரா இன்னுயிர்கொண்டு
அஞ்சினார் அஞ்சாது போயகல்க - வெஞ்சமத்துப்
பேராதவர் ஆகத் தன்றிப் பிறர்முதுகில்
சாராஎன் கையில் சரம். -(தண்டியலங்கார மேற்கோள்)
பாடலின்பொருள்:
வீரன் ஒருவன் தன் ஆற்றலையும் வீரப்பண்பையும் வெளிப்படுத்தி உரைக்கிறான். போரில் எனக்கெதிராக நின்று போரிட்டு உயிருடன் திரும்பியோர் எவருமில்லை; ஆகவே எனக்கு அஞ்சியவர்கள் அச்சமில்லாமல் திரும்பிப் போய்விடலாம். நான் எய்யும் அம்புகள் போரில் எதிர்த்து நிற்பவர்கள் மார்பில் பாயுமே தவிரப் புறங்காட்டிச் செல்வோர் முதுகுகளில் பாயமாட்டா. இப்பாடலில் தன்னைத்தானே வீரன் புகழ்ந்து கொள்வது வெளிப்படுகிறது.