Monday, July 18, 2016

வாழ்த்தணி

30. வாழ்த்தணி

வாழ்த்தணி என்பது இன்ன தன்மையை உடையார்க்கு இன்னது நிகழ்க என்று கவிகள் தாம் கருதியதனை விதிப்பது , வாழ்த்து என்னும் அலங்காரம் என்று சொல்லுவர் புலவர்.
                இன்னார்க்(கு) இன்ன(து) இயைக வென்றுதாம்
                முன்னியது கிளத்தல் வாழ்த்தென மொழிப  --(தண்டியலங்காரம், 33)
.கா.
                மூவாத் தமிழ்பயந்த முன்னூல் முனிவாழி !
                ஆவாழி ! வாழி அருமறையோர் ! - காவிரிநாட்(டு)
                அண்ணல் அணபாயன் வாழி ! அவன்குடைக்கீழ்
                மண்ணுலகில் வாழி மழை  --முன்னூல் முனி - அகத்தியன்

பாடல்பொருள்:
அழியாத தமிழைத்தோற்றுவித்த பழைய நூல்களையுணர்ந்த அகத்திய முனிவன் வாழ்க ; ஆனிரைகள் வாழ்க ; அரிய வேதங்களை யுணர்ந்த அந்தணர்கள் வாழ்க ; காவிரி சூழ்ந்த சோழ நாட்டின் தலைவனான அனபாயன் வாழ்க ; அவனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நிலவுலகில் மழையானது என்றும் பொய்யாது வாழ்க என்பதாம் .

இப்பாடற்கண் அனபாயனுக்கும் அவனுடைய நாட்டிற்கும் இன்றியமையாதனவாயுள்ள மொழி , மழை , சான்றோர்கள் ஆகிய அனைத்தும் வாழ்க என வாழ்த்தியுள்ளமையின் , இது வாழ்த்தணியாயிற்று .

முன்னியது - கருதியது ; 'முன்னியவள் நமக்குமுன் சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழை யேலோர் எம்பாவாய் ' என்றவிடத்தும் இது இப்பொருள்படுதல் காண்க.

Popular Feed

Recent Story

Featured News