Thursday, July 13, 2017

காமராஜர் வாழ்க்கை வரலாறும் ,சாதனைகளும்

1.காமராஜர் வரலாறு

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.

காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். – இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.


1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.

கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.

தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.

காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.

காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.

”தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.

காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..

தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.

1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.

1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.

இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.

அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.

1957 – ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.

ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.

பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.

”காமராஜரின் சாதனைகள்” என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.

பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.

விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள். அவைகள் யாவை?

2. கல்வி நிலை

பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பொழுது கல்வி நிலை எவ்வாறு இருந்தது என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்கத்தான் வேண்டும்.

எங்கும் கல்விக் கூடங்கள். எல்லோர்க்கும் கல்வி. இலவசக் கல்வி. இலவச மதிய உணவு என்றெல்லாமா இருந்தன? இல்லவே இல்லை. வசதியுள்ளவர்களுக்கே கல்வி கற்கும் வாய்ப்புக்கள் இருந்தன. ஏழை, எளியவர்களுக்குக் கல்வி கற்பது என்பது எட்டாக் கனியாகவே இருந்தது.

தனியார் பள்ளிகளில் மட்டுமின்றி, அரசினர் பள்ளிகளும் அன்று கல்விகற்கக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. ஐந்தாம் வகுப்புவரைதான் கட்டணம் இல்லை. ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாவது வகுப்புவரை படிக்கும் ஏழை மாணவர்கள், தாங்கள் ஏழைகள்தான் என்பதற்கான வருமான அத்தாட்சியைத் தாசில்தார்களிடமிருந்து வாங்கிக் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுத்தால்தான் இலவசக்கல்வி- இல்லையேல் கட்டணம் கட்டவேண்டும்.

ஒன்பதாம் வகுப்பிலிருந்து எல்லா வகுப்புக்களுக்கும், எல்லோரும் கட்டாயமாகச் சம்பளம் கட்டியே தீரவேண்டும். பள்ளி இறுதிப் படிப்பாக இருந்தாலும் சரி, அல்லது பட்டப்படிப்பாக இருந்தாலும் சரி. எல்லாவற்றிற்கும் படிக்கப் பணம் கட்டவேண்டிய நிலைதான் தமிழ்நாட்டில் நீடித்து இருந்து வந்தது.

பள்ளிக்கூடங்களில் பற்றாக்குறை ஒரு புறம். ஒரு ஊரிலிருந்து மறுஊருக்குப் பாதயாத்திரையாகவோ, பஸ் அல்லது சைக்கிள்கள் மூலமாகவோ சென்றுதான் ஆறாம் வகுப்புக்குமேல் படிக்கவேண்டிய சூழ்நிலை இருந்தது. அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆரம்பப்பள்ளிகள் இருந்தன. அதுகூட இல்லாத கிராமங்களின் எண்ணிக்கைகளோ கணக்கிலடங்காதவைகளாகும்.

”ஏதோ… நாலு எழுத்து எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் – கையெழுத்துப் போட பிள்ளைகள் கற்றுக்கொண்டால் போதும்” என்றே அந்தக் காலத்துப் பெற்றோர்கள் கருதினார்கள். பிள்ளைகள் தங்கள் தொழிலுக்குத் துணையாக இருந்து வேலைகள் செய்வதையே அவர்கள் விரும்பினார்கள்.

”ஏன் ஐந்தாம் வகுப்போடு பையன் படிப்பை நிறுத்திவிட்டீர்கள்?” என்று கேட்டால்.

”அதுபோதுங்க… அதுக்குமேலே படிச்சுப் பையன் என்ன கலெக்டர் ஆகப் போகிறானா? இல்லை தாசில்தார் ஆகப் போகிறானா?” என்று பதில் கூறுவார்கள். ஆண் பிள்ளைகளுக்கே கல்வி கற்பதில் இந்தப் பரிதாப நிலை.

தபால் போக்குவரத்துக்கள் கூடக் கிராமங்களுக்குச் சரிவர இல்லாத காலமாய் இருந்தது. ஏழெட்டுக் கிராமங்களுக்கு நடுவில் உள்ள ஒரு பேரூரிலே ஒரு தபால் ஆபீஸ் இருக்கும். மூன்று, நான்கு கிராமங்களுக்கு ஒரு தபால்காரர் என்று அவர்கள் சைக்கிள்களில்தான் சென்று, மணியார்டர், மற்றும் தபால்களைப் பட்டுவாடா செய்து வருவார்கள்.

ஒரு தபால்கார்ர ஒரு கிராமத்துக்குத் தபால் மற்றும் வந்த மணியார்டரை எடுத்துக் கொண்டு சென்றார். அது ஒரு குக்கிராமம். ஏறத்தாழ எல்லோரும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்தான் ஒன்றிரண்டு பிள்ளைகள் படித்தவர்களாக இருந்தாலும், தபால்காரர் செல்லும்போது அவர்கள் பள்ளிக்கூடம் சென்றிருப்பார்கள்.

மருதாயி என்ற பெண்ணுக்குப் பட்டாளத்தில் இருந்த அவளது கணவன் ஏழுமலை 500 ரூபாய் மணியார்டர் செய்து இருந்தார். ஒரு கடிதமும் போட்டிருந்தார். சைக்கிளில் அந்தக் கிராமத்துக்குச் சென்ற தபால்காரர் எப்படியோ வீட்டு விலாசத்தை விசாரித்துக்கொண்டு, மருதாயி வீட்டுக்குப் போனார். வீடு பூட்டிக் கிடந்தது. பக்கத்து வீடுகளில் விசாரித்தார். அந்தப் பெண் வயலில் கூலி வேலைக்குப் போயிருப்பதாகவும், சாயந்திரம் தான் வருவாள் என்றும் கூறினர். தபால்காரர் மணியார்டர் வந்திருக்கும் சமாச்சாரத்தைச் சொல்லி யாராவது சென்று அவளைக் கூட்டிக்கிட்டு வரச்சொன்னார்.

ஒரு பெண்மணி வயல் பக்கம் ஓடினாள். தபால்காரர் சைக்கிளை வைத்துக்கொண்டு அந்தக் குடிசை வீட்டுக்கருகே வேப்பமரத்தடியில் காத்துக் கிடந்தார்.

அவர் காத்து இருந்ததற்கும் ஒரு காரணம் இருந்தது. மணியார்டரைப் பட்டுவாடா செய்துவிட்டால், ஐந்தோ பத்தோ பணம் தருவார்கள். அவருக்கு இது நிகர வருமானம்தானே.

வயல் பக்கம் போன பெண் அந்த மருதாயியைக் கையோடு கூட்டிக் கொண்டுவந்தாள்.

”சாமி! கும்புடுறேனுங்க” – என்றாள் மருதாயி.

”ஆமா ! உன் பேருதானே மருதாயி. உனக்குப் பட்டாளத்திலே இருந்து பணம் வந்திருக்கு ” என்றார் தபால்காரர்.

”அப்படிங்களாசாமீ! எம்புட்டுப் பணம் அனுப்பியிருக்காக?” என்றாள்.

”ஐநூறு ரூபாய்” என்றார் தபால்காரர்.

”ஐயோ! அவ்வளவு பணமா அனுப்பியிருக்காக” என்று அவள் ஆச்சர்யப்பட்டாள்.

”உன்னோட புருஷன் பேரு என்னம்மா?”

”அதெல்லாம் நாங்க சொல்லறது பழக்கமில்லேங்க.”

”பழைய பயித்தியமா இருக்கிறியே! புருஷன் பேரை எல்லாம் அந்தக் காலத்திலேயும் சரி, இந்தக் காலத்திலேயும் சரி யார்மா சொல்லாமே இருக்காங்க? கற்புக்கரசி கண்ணகிகூட அந்தக் காலத்திலே பாண்டிய மன்னன் கேட்டபோது,

”ஏசாச்சிரிப்பின் இசையிடம் பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனேயாகி
என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி
நின்பார் கொலைக்கலம்பட்ட
கோவலன் மனைவி
கண்ணகியென்ப தென் பெயரே” என்று, புருஷன் பேரு மட்டுமல்ல, மாமனார் பேரையும் சேர்த்தே சொல்லியிருக்கார்” என்று சொல்லித் தான் ஒரு படிப்பாளி என்பதைக் காட்டிக் கொண்டு நின்றார் தபால்காரர்.

”அவுங்க பேர்தானே வேணும்? சொல்லுகிறேன். ஒண்ணு ரெண்டு எண்ணுகிறேன். ஆறுக்கு அப்புறம் என்னங்க?”

”ஏழு… ஏன் அதற்கென்ன?”

”முருகன் ஏறி நிற்கிற எடம் எதுங்க?”

”ஓ… அதுவா? மலைதான்.”

” அந்த ஏழோட இதைச் சேர்த்துக்கங்க.”

”அடடே… ஏழுமலை. உன் புருஷன்பேரு ஏழுமலைதான். சரிதான்போ இந்தா இதிலே கையெழுத்துப் போடு.”

இடது கை கட்டைவிரலை நீட்டினால் மருதாயி. தபால்காரர் விரலைப் பிடித்து மை ஒட்டி மணியார்டர் பாரத்தில் அழுத்தி எடுத்துவிட்டு அவள் விரலை விட்டு விட்டார். பின்னர் பணத்தை எண்ணிக் கொடுத்தார்.கூட நின்ற பெண்களிடம் கொடுத்து மருதாயி எண்ணிப் பார்க்கச் சொன்னாள். எல்லாம் நூறு ரூபாய் நோட்டுக்கள். ஐந்துதானே. எண்ணிப் பார்த்துச் சரியா இருக்கிறதென்றாள்.

”சரிம்மா! இந்தா ஒம்புருஷன் போட்டிருக்கும் தபால்” என்று கடித்த்தையும் கொடுத்தார்.

” நான் வர்றேம்மா இன்னும் மூணு ஊர்களுக்கு போகணும்.” என்று சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பலானார் தபால்காரர்.

”கொஞ்சம் இருங்க சாமி” என்று மருதாயி தன் குடிசை வீட்டின் பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனாள். கூலிப் பணம் வாங்கிப் பானையில் போட்டுவைத்திருந்தாள். பத்து ரூபாய் பணம் எடுத்து வந்து தபால்காரனிடம் கொடுத்தார்.

”ரொம்ப நன்றிம்மா” என்று சொல்லிக்கொண்டே தபால்கார்ர் தன் சைக்கிளில் பறந்தார்.

கடுதாசியைப் படிச்சுக்காட்டாமப் போயிட்டாரே என்று மருதாயித் தவித்தாள். இவளைப் போலத்தான் கிரமத்துப் பெண்கள்.

கிராமங்களில் வாழ்ந்திருந்த பெண்பிள்ளைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பெண்கல்வி புறக்கணிக்கப்பட்டிருந்த காலம் அது. ” அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?” என்று பெற்றோர்களே வாதிட்டுக் கொண்டுருந்த காலமாக அன்றிருந்தது. கல்வி கற்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்த நிலை நீடித்ததால் பெண்கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது.

பணம் கட்டிப் படிக்கும் நிலை. பள்ளிக் கூடங்களின் பற்றாக்குறைகள். கல்வி என்பது ஏழை, எளியோர்களுக்கு இல்லை- என்பன எல்லாம் தமிழ்நாட்டில் எப்படி நீக்குவது? கர்ம வீரர் காமராஜர், முதலமைச்சர் காமராஜர் சிந்தித்தார். திட்டங்கள் தீட்டினார்.அமுல் படுத்தினார்.

முதல் வகுப்பில் இருந்து பள்ளி இறுதி வகுப்புவரை எல்லா மாணவர்களுக்கும் கட்டணம் இல்லை என்று அறிவித்தார். கிராமத்துச் சிறுமியர்கள் கல்வி கற்கப் பல மீட்டர்கள் தூரம் நடந்து சென்றுவர வேண்டி இருந்தது. இந்த நிலையைப் போக்கி, கிராமங்கள் தோறும் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் செய்தார்.

”கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகு எலும்பு” என்றார் மாகத்மாகாந்தி. கிராமங்கள் முன்னேறாமல் இந்தியா முன்னேற்றம் அடையமுடியாது என்று கருதினார் பண்டித நேரு. அவர்களது பாதையில் பயணம் துவங்கிய பணிகள் புரிய, அடி எடுத்து வைத்த காமராஜர் கிராமங்களின் முன்னேற்றத்திற்கு என்னென்ன செய்யமுடியுமோ, அவைகளை எல்லாம் தான் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் செம்மையாகச் செய்தார். செழிப்படையச் வைத்தார்.

காமராஜர் அவரகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த போதே, தமிழகத்தில் உள்ள எல்லாப் பட்டி தொட்டிகளுக்கும், கட்சிப் பணிகளுக்காகச் சென்றிருக்கிறார். அவரது கால்கள் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவர் சுற்றுப் பயணங்கள் செய்திருக்கிறார்.

எந்தக் கிராமத்துக்கு என்னென்ன தேவைப் பள்ளிக் கூடமா? சாலை வசதியா? குடிநீரா? மின்சார வசதியா? எங்கெங்கே எவையெவை தேவை என்பதெல்லாம் கண்டறிந்து வைத்திருந்தார் காமராஜர். கட்சிப் பணிக்காக அவர் எடுத்த கணிப்பு (சர்வே) ஆட்சிப் பணியில் இருக்கும்போது அவருக்குப் பெரிதும் உதவியது. துரித நடவடிக்கைகள் எடுக்க அவரைத் தூண்டியது எனலாம்.

தமழக முதலவரான பின்னர், அவர் சுற்றுப் பயணம் போனார். அப்படிப் போகும்போது அவரது கார் கிராமத்துச் சாலைகள் வழியே போகிறது.

காலை நேரம். கிராமத்துச் சிறுவர் – சிறுமிகள், ஆடு – மாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்க்கச் சென்று கொண்டுத இருக்கிறார்கள். இதைக் கண்ட காமராஜர், காரை நிறுத்தச் சொன்னார். ஆடு, மாடுகளை ஓட்டிச் சென்று கொண்டிருந்த சிறுவர்களிடம் சென்றார்.

”என்னப்பா… தம்பிகளா! பள்ளிக்கூடம் போகாமல், படிக்காமல், இந்தக் காலைநேரத்தில் ஆடு மாடு மேய்க்க போகிறீர்களே. பள்ளிக்கூடம் போகலையா?” என்றார்.

”எங்க ஊரிலே பள்ளிக்கூடம் இல்லையே” என்றார்கள்.

”பள்ளிக்கூடம் இருந்தால் படிக்கப் போவீங்களா?” என்றார் காமராஜர்.

”பள்ளிக்கூடம் படிக்கப் போனா எங்களுக்கு மத்தியானச் சோறு யார் போடுவாங்க? இப்படி ஆடு மாடு மேச்சாலாவது கூழோ, கஞ்சியோ கிடைக்குது.” என்றார்கள். பின்னர் அந்தச் சிறுவர்கள் ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு போய்விட்டார்கள்.

காமராஜர் சற்று நேரம் அந்தச் சிறுவர்கள் போவதைப் பார்த்துக்கொண்டே நின்றார். பின்னர் வந்து காரிலே ஏறி தனது பயணத்தை தொடர்ந்தார்.

காரிலே செல்லும்போதே, அவரது சிந்தனை பலமாக இருந்தது. எதைப் பற்றி? கிராமங்கள் தோறும் கல்விக்கூடங்கள் நிறுவப்படவேண்டும் என்பது ஒன்று. அப்படிப் பள்ளிக்கூடம் வைத்தாலும் மதிய உணவுகள் மாணவ – மாணவிகளுக்கு இலவசமாகப் போடவேண்டும். என்பது மற்றொன்று.

செய்தித்தாளில் ”ஒரு பள்ளிச்சிறுமி மதிய வேளையில் மயங்கி விழுந்து விட்டாள். காரணம் பசியே ஆனது.” – என்பதனைப் படித்து இருந்தார் காமராஜர்.

வயிற்றிலே பசியைவைத்துக்கொண்டு, கல்வியிலே எப்படிப் பிள்ளைகளால் கவனம் செலுத்தமுடியும் என்று யோசித்தார் காமராஜர்.

கிராமங்கள் தோறும் ஆரம்பப் பள்ளிகளாக ஓராசிரியர் பள்ளிகள் திறக்கப்பட்டன. இலவச மதிய உணவுகள் பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டன. உடுத்தும் உடைகளால் கூட, ஏழை, பணக்காரப் பிள்ளைகள் என்ற வேறுபாடுகள் இருந்தன. இந்த நிலையைப் போக்க எல்லாப் பிள்ளைகளுக்கும் சீர் உடைகள் கட்டாயமாக்கப்பட்டன. இவைகள் எப்படி ஏற்பட்டன.

3. கல்விச் சாதனைகள்

கல்வி என்பது, உயர் குடிப் பிறந்தோர்கள் மற்றும் பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டும்தான் என்ற நிலைமை மாறிற்று. கல்வி கற்பது எளிதாக்கப்பட்டது. ஏழை, எளியவர்களுக்கும் கல்வி. இலவசக் கலவி என்றானது.

எங்கும் கல்விக் கூடங்கள் திறக்கப்பட்டன. எல்லோருக்கும் இலவசக்கல்வி. மதிய உணவு – சீருடைகள் – என்றெல்லாம் திட்டங்கள் போட்டுச் செயல்படுத்தினார் முதலமைச்சர் காமராஜர். கல்வி நிலை உயர்ந்தது. எட்டாக்கனியாக இருந்த கல்வி, ஏழை, எளியவர்களுக்கும் எட்டியது. இதனால் ”கல்விக் கண் திறந்தவர்” என்று காமராஜரைப் பல்லோரும் பாராட்டினார்கள்.

”ஏட்டையும் பெண்கள் படிப்பது தீதென்று
எண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்.
வீட்டிற்குள்ளே பெண்ணைப்
பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகுவிந்தார்”

— என்றார் மகாகவி பாரதி. அந்த நிலையை தமிழகத்திலே உண்டாக்கிக் காட்டியவர் பெருந்தலைவர் காமராஜரே ஆவார்.

பெண்கல்வி பெருகியது. கிராமங்களில் கூடப் பெண் பிள்ளைகள் கல்வி கற்க முற்பட்டார்கள். கையெழுத்துப் போடு என்று காட்டினால், இடது கைக் கட்டை விரலை நீட்டுகிறவர்கள் தான் அந்தக் காலத்தில் ஆண்களிலும், பெண்களிலும் அதிகமாக இருந்தார்கள். இந்த நிலை மாற இளைய தலைமுறையினர் காமராஜர் ஆட்சியால் கல்வி நலம் பெற்றார்கள்.

சீருடைத் திட்டத்தினால் பள்ளிகளில் ஏழை, பணக்காரன் பிள்ளைகள் என்கிற பாகுபாடுகள் நீங்கின. மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வுகள் மேலோங்கின.இந்த மாற்றம் சமுதாயத்தில் காமராஜர் நிகழ்த்திக்காட்டிய பெரிய மாற்றமல்லவா?

இதைப் போலவேதான் இலவச மதிய உணவுத் திட்டமும் – பள்ளிக்குப் படிக்கச் செல்லும் குழந்தைகள் கட்டுச்சோற்று மூட்டைகளையும், புத்தக மூட்டைகளோடு சுமந்து சென்று கொண்டு இருந்த நிலைமை மாறிற்று. இதனால் மிகவும் பின் தங்கிய சமுதாயத்தினர்களும், ஏழை, எளியவர்களும் கூடத் தங்களது பிள்ளைகளைப் பள்ளிகளுக்குத் தயங்காது அனுப்பி வைத்தார்கள். ”வீட்டில் இருந்தால்தான் பசி, பட்டினி – பிள்ளை பள்ளிக்கூடம் சென்றாலாவது நாலு எழுத்துக் கற்றுக்கொள்ளும் – மதியமும் வயிறாரச் சாப்பிட்டுக்கொள்ளும்” என்று நினைத்துத் தங்களது பிள்ளைகளைத் தயங்காது பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.

எங்கும் தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் எல்லோருக்கும் இலவசக்கல்வி – இலவச்ச் சீருடைகள். இலவச மதிய உணவுகள் – தமிழ்நாட்டில் கல்வி நிலை உயர்ந்தது. காலங் காலமாக கல்வி கற்ற்றியாதவர்கள் எல்லாம் கல்வி கற்றார்கள். காமராஜரின் திட்டங்களினால் கல்வி பெருகியது நாட்டில்.

எல்லாக் கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனால் ஆயிரக்காணக்கான,இலட்சக்கணக்கான இந்தப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமே. அத்தனை பள்ளிகளுக்கும், ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு எங்கே போவது? இந்தக் கேள்வி எழுந்தது.

இதற்கும் ஒரு வழியைக் காமராஜரே கண்டுபிடித்துச் சொன்னார். அது என்ன?

”நாட்டிலே படித்துவிட்டு வேலை கிடைக்காமல், ஆயிரக்கணக்கான பேர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம், ஓராசிரியர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக நியமித்து விடலாமே. ‘அ’ – ‘ஆ’ ன்னா ‘அம்மா, அப்பா – படம், பட்டம், மரம், மாடு’ ன்னு கற்றுத் தரப் பயிற்சி ஆசிரியர்தானா தேவை?” என்றார் காமராஜர்.

அன்றைய பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த திரு நெ.து. சுந்தர வடிவேலு இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார். எங்கும் ஓராசிரியர்கள் பள்ளிகளுக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். பின்னர் அவரகளுக்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அரசு செலவிலேயே ஆசிரியர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்த திட்டத்தினால், எத்தனையோ படித்த வேலையற்றவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்தன. அந்தக் கால ஆரம்பப்பள்ளிப் பாடத்திட்டத்தில்,

”அணில் – ஆடு, இலை, ஈக்கள், உரல், ஊஞ்சல், எலி, ஏணி, ஐவர், ஒட்டகம்,ஓணான், ஔவையார், எஃகு என்றுதான் தொடக்கக் கல்விப பாடங்கள் இருந்தன. ‘ப – ட – ம்’ படம் என்றும், ‘ம -ர – ம்’ மரம் என்றும் எழுத்துக் கூட்டிப் படிப்பதும் இருந்தன.

இவைகளை எல்லாம் ஓராசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஒழுங்காக பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

பிள்ளைகள் படிக்க வழிகண்டாயிற்று. பெரியவர்கள, முதியவர்கள் படிக்க வழிகள் ஏதும் இல்லையா? – என்று கேட்கலாம்.

எல்லாக் கிராமங்களிலும் இரவுப் பாடசாலைகள் தொடங்கப்பட்டன. முதியோர் கல்வி கற்கலானார்கள். எழுத்துக்கள் – எண்கள்- எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார்கள். கல்வி நிலை உயர்வடைந்தது காமராஜர் ஆட்சியில். உண்மைதானே?

ஆரம்பப் பள்ளிப் படிப்போடு சந்தர்ப்பம் சூழ்நிலைகளால் மேலே படிக்க முடியாமற்போன, காமராஜர்தான் ‘தான் கற்றுத் தேராவிட்டாலும், தமிழ்நாட்டிலே இருந்த கோடானுகோடிப் பேர்கள் கல்வி கற்று வாழ்விலும் முன்னேற எல்லா வகையிலும் பாடுபட்டார். திட்டங்கள் தீட்டினார் – செயல்படுத்தினார்.

காமராஜரைப் படிக்காத மேதை என்பார்கள். உண்மையில் அவர் படிக்காத மேதை அல்ல. படித்த மேதை. தனது படிப்பு அறிவை அவர் காலப்போக்கில் வளர்த்துக் கொண்டார். ‘கற்றலிற் கேட்டலே நன்றே’ என்பார்கள். காமராஜருக்குக் கிடைத்த கேள்வி ஞானம் அளப்பற்கரியது. செய்தித்தாள்களைப் படிப்பதின் மூலம் நாட்டு நடப்புகளை, உலக நிலையை அன்றாடம் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

பாரதியார் பாடல்கள் மற்றும் பற்பல ஆங்கிலப் புத்தகங்களை எல்லாம் கூட அவர் அன்றாடம் படித்தார். நாளாக, நாளாக அவர் கற்ற்றிந்த மேதையர்களோடு, உடனிருந்து உரையாடும் ஆற்றலினையும் பெற்றார். ‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ – என்று ஆக்க அவரது ஆட்சியை அவர் பயன்படுத்திக் கொண்டார் என்றே கூறலாம்.

”கண்ணுடையோர் என்பர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையோர் கல்லாதவர்” – என்று

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

காமராஜர் காலத்தில் தமிழகத்தில் கண்ணுடையோர்களைவிட, முகத்திரண்டு புண்ணுடையோர்களே பெரும்பாலானவர்களாக இருந்தார்கள். காரணம் பொதுமக்களுக்குக் கல்வியின் மேல் நாட்டம் இல்லாமை என்பது இல்லை.

நாட்டில் நிலவிய வறுமை, பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் தான் காரணம் என்பதைக் காமராஜர் உணர்ந்திருந்தார்.

அன்றைய இந்தியாவில் மேற்கு வங்காளமும், கேராளவும்தான் கல்வியில் மிகமிகப் பின் தங்கியே இருந்து வந்தது.

”கல்வி சிறந்த தமிழ்நாடு” என்று பாடிய பாரதியின் வாக்கை மெய்ப்படுத்திக் காட்டியவர் பெருந்தலைவர் காமராஜரே ஆவார்.

காமராஜர் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில், கல்விக்காக அவர் என்னென்ன சாதனைகள் செய்தார் என்பதை இனிக் காண்போம்.

காமராஜர் ஆட்சிக்கால்த்தில்தான் எல்லாச் சிற்றூர்களிலும் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. பேரூர்களுக்கு எல்லாம் உயர்நிலைப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. நாட்டுப்புறம் என்று ஒதுக்கப்பட்ட கிராமங்களில் கூட உயர்நிலைப் பள்ளிகள் உருவாகின.

16 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் 16 லட்சம் குழந்தைகள் படிக்கலானார்கள். அதன் பின்னர் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது. ஏறத்தாழ 48 லட்சம் பிள்ளைகள் தமிழகத்தில் கல்வி கற்கலானார்கள்.

30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் 16 லட்சம் மாணவ – மாணவிகள் பகல் உணவு உண்டார்கள் என்று அன்றைய பள்ளிக் கல்வி இயக்குனராக இருந்த திரு. நெ.து. சுந்தர வடிவேலு கூறுகிறார்.

காமராஜர் முதலமைச்சராகப் பதவி ஏற்ற போது 3 இலட்சத்து 86 ஆயிரமாகயிருந்த உயர்நிலைப்பள்ளிகள், அவரது முயற்சிகளால் 13 லட்சமாக உயர்ந்தது. தொழிற் கல்விக் கூடங்களும் மாவட்டம் தோறும் தொடங்கப்பட்டன. தொழில்கள் பெருக வேண்டுமானால் தொழிற் கல்வியும் அத்தியாவசியமன்றோ.

இலவசக் கல்வி, மதிய உணவு, இலவசப் பாடப்புத்தகங்கள் என்றெல்லாம் அறிமுகப்படுத்திய காமராஜர், தனது ஆட்சிக் காலத்திலே தான் பள்ளிப் பிள்ளைகளிடையே சீருடையை அணிந்து எல்லாக் குழந்தைகளும் சமம் என்பதை நிரூபித்துக் காட்டினார்.

பள்ளிகளில் அந்தக் காலத்தில் பணக்கார்கள் வீட்டுப் பிள்ளைகள் ஆடம்பரமான உடைகளில் வந்தார்கள். ஏழை, எளிய பிள்ளைகள் கிழிசல் சட்டைகளைப் போட்டுக் கொண்டு பள்ளிக்கூடம் வந்தார்கள். பள்ளியில் படிக்கும் பிள்ளைகளைப்பார்த்தால், யார் யார் பணக்காரர்கள் வீட்டுப்பிள்ளைகள், யார் யார் ஏழைகள் வீட்டுப் பிள்ளைகள் என்று எளிதில் அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வேறுபாட்டை, வித்தியாசத்தை பூண்டோடு களைந்து எறியவே காமராஜர் பள்ளிப் பிள்ளைகளுக்குச் சீருடைத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்தத் திட்டத்தைத் தமிழகம் முழுதும் அமுல் படுத்தினார். இந்தத் திட்டத்தினால் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளிடம் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசங்கள் இல்லாமல் போய்விட்டன. அந்தச் சீருடைத்திட்டம் இன்னும் தமிழகத்தில் எல்லாப் பள்ளிகளிலும் இருக்கக் காணலாம்.

இன்று கூட எத்தனையோ, டாக்டர்கள், வழிக்கறிஞர்கள், என்ஜியர்கள், கலெக்டர்கள் மற்றும் காவல் துறைப் பெரிய அதிகாரிகள் எல்லாம், ”நாங்கள் பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த கல்வித் திட்டங்களால் படித்து, வேலைவாய்ப்புப் பெற்று உயர்ந்த நிலையில் இருக்கிறோம்” – என்று நன்றியுடன் சொல்லிக் கேட்கலாம்.

”கண்ணுடையோர் என்பார் கற்றோர் – முகத்திரண்டு
புண்ணுடையோர் கல்லாதவர்”

– என்றார் திருவள்ளுவர். கல்வி பெற்றோரே கண்ணுடையவர்கள், மற்றவர்கள் முகத்திரண்டு புண்ணுடையவர்கள் என்பதே வள்ளுவர் கருத்து.

தமிழகத்தில், பட்டி தொட்டிகள், சிற்றூர்கள், பேரூர்கள், நகரங்கள், பட்டணங்களில் எல்லாம் எல்லோர்க்கும் கல்வியை அளித்த பெருந்தலைவர் காமராஜரைத் தமிழகத்தில், ”கல்விக் கண் திறந்து வைத்தவர்” – என்று சொல்வதிலே தவறேதுமில்லையல்லவா.

இந்தியாவில் அன்று மேற்கு வங்காளமும், கேரளாவும்தான் கலவியில் சிறந்து விளங்கியது. அந்த அளவிற்குத் திட்டங்கள் தீட்டித் தமிழகத்தில் கல்வியை எங்கும் பரப்பியவர் காமராஜரே என்றால் அது மிகையாகாது. மதிய உணவுகள் மாணவ – மாணவியர்களுக்குப் போகும் திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் அந்தந்த மாவட்டத்தில் இருந்த பணக்காரர்களிடம் நன்கொடைகள் வசூலித்தே போடப்பட்டது. பெரும்பாலோனோர்,

”மண்டினி ஞாலத்து மக்கட்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே”

– என்று உதவிடத்தான் செய்தார்கள். அதிலும் பள்ளியில் படிக்கும் ஏழைப் பிள்ளைகளுக்கு உணவுகள் வழங்குவதில் அவர்கள் தர்ம சிந்தனையோடு தாராளமாக்க் கொடுத்தும் உதவி செய்தார்கள்.

தென்மாவட்டங்களில் சிலபல ஊர்களில், அறுவடை காலங்களில் இத்திட்டத்திற்காக ஒரு மரக்கால், இரண்டு மரக்கால் என்றும் அளந்து கொடுத்தார்கள். எட்டயபுரம் மகாராஜா கூட இத்திட்டத்திற்கு உதவி செய்தார்.

மழைக்காலம் அல்லது பஞ்ச காலம் என்று வந்துவிட்டால், கொடுத்தவர்கள் நிறுத்திக்கொண்டார்கள். இதனைக் கருத்தில் கொண்ட பெருந்தலைவர் காமராஜர், எக்காலத்திலும் மதிய உணவு கிடைக்க அரசாங்கமே வழிவகை செய்யும்படி உத்தரவிட்டார்.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளும் மதிய உணவு தங்கு தடையின்றி வழங்கப்பட்டது. கல்விக்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் தொகையில் இத்திட்டத்திற்காகவும் சேர்த்து அதிகப் பணம் ஒதுக்கிட அவர் ஏற்பாடு செய்தார்.

அந்தந்த திட்டத்தை அமுல்படுத்தும்போது அவைகளுக்குச் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளைக் காமராஜர் என்றும் கலந்து ஆலோசிக்கத் தவறியதே இல்லை. அவர்கள் அரசாங்க ஊழியர்களே என்றாலும் கூட அவர்களுக்குத் தக்க மரியாதைகளைக் கொடுத்தார்.

தன் கூடவே முதலமைச்சர் காரிலேயே அவர்களைப் பற்பல ஊர்களுக்கு உடன் அழைத்தும் சென்றார். அதிகாரிகளுக்கு இந்த நடவடிக்கை அதிசயமாக, ஆச்சர்யமாக, அதிர்ச்சியாகக்கூட இருந்தது எனலாம்.

காரிலே போகும்போது அவர்களை அந்தத் திட்டம் பற்றிய பல் வேறு பிரச்சினைகளையும், அவைகளைத் தீர்த்து வைக்கும் வழிமுறைகளையும் காமராஜர் சொல்லிக்கொண்டே போவார்.

இப்படித்தான் அன்று பள்ளிக் கல்வி இயக்குனராக இருந்த திரு. நெ.து. சு

Popular Feed

Recent Story

Featured News