பறவைக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா?
காற்றுக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா?
கூண்டுக் கிளிக்கும்
சிறகில்லாத மனிதனுக்கும்
ஒன்றும் பெரிய வேறுபாடு எனக்குத் தெரியவில்லை!
அடிமை மண்ணில் பிறந்தவர்களுக்குத்தான் தெரியும்
சுதந்திரத்தின் பொருள்!
சுதந்திர மண்ணில் பிறந்த மாணவனிடம் கேளுங்கள்...
சுதந்திரம் என்றால் என்ன? என்று..
பள்ளி மாணவன் சொல்வான் அதிலென்ன சந்தேகம்
பள்ளி விடுமுறைதான் சுதந்திரம் என்று!
சரி பள்ளி இருந்தால் எது சுதந்திரம்? என்று கேட்டால்...
மாணவன் சொல்வான் நிச்சயமாக வகுப்பு எடுக்காமல் இருப்பதுதான் என்று!
சரி வகுப்பு எடுத்தால் எது சுதந்திரம்..? என்றால்..
மாணவன் சொல்வான்...
தேர்வு வைக்கக்கூடாது! கேள்வி கேட்கக்கூடாது அப்படிக் கேட்டாலும் என்னைக் கேட்க்கூடாது அதுதான் சுதந்திரம் என்பான்!
இதோ சில நிகழ்காலச் சமூகத்தில் சுதந்திரம்....
சாலைவிதிகளை மீறுவதா சுதந்திரம்?
அவரிடம் கையூட்டு பெறுவதல்லவா சுதந்திரம்!
இலவசம் பெற்று ஓட்டளிப்பதா சுதந்திரம்?
ஆட்சிக்கு வந்து விலைவாசியை உயர்த்துவதல்லவா சுதந்திரம்!
அலுவலகத்தில் கடமையை செய்யாதிருப்பதா சுதந்திரம்?
போட்டிபோட்டு குறட்டைவிடுவதல்லவா சுதந்திரம்!
தாய் மொழி பேசுவதா சுதந்திரம்?
வயிற்றுக்காக ஆங்கிலம் பேசுவதல்லவா சுதந்திரம்!
பிறந்த நாட்டில் பணிபுரிவதா சுதந்திரம்?
வெளிநாட்டில் கூலி வேலை பார்ப்பதல்லவா சுதந்திரம்!
விடுமுறை எடுத்துத் திரைப்படம் பார்ப்பதா சுதந்திரம்?
கிரிக்கெட்டுக்காக விடுமுறை எடுப்பதல்லவா சுதந்திரம்!
விளம்பரங்கள் வழி மூளைச்சலவை செய்வதா சுதந்திரம்?
ஆளும் கட்சியின் அடிவருடுவதல்லவா ஊடக சுதந்திரம!
சாலை நடுவே குடித்து ஆட்டம் போடுவதா சுதந்திரம்?
மதுக்கடைகளை அரசே நடத்துவதல்லவா சுதந்திரம்!
நம்முள் நாமே அடிமைப்பட்டுக்கிடப்பதா சுதந்திரம்?
அன்று வெள்ளையன்! இன்று கொள்ளையன்!
கொடியேற்றுதாலோ! மிட்டாய் கொடுப்பதாலோ!
சுதந்திரம் வந்துவிடுவதில்லை!
இந்தியா ஒளிர்வதில்லை!
லித்துவேனியா நாட்டு மேயர் யாருக்கும் அஞ்சாமல்
சாலையோர ஆக்கிரமிப்புகளைத் தானே அகற்றி
ஒருநாள் தன் கடமையைச் செய்தார் என்று
உலகமே அவரைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது!
நம் நாட்டில் இப்படியொரு நல்ல செயல் செய்தால்
அடுத்த நாளே அந்த மனிதரை வேறு
ஊருக்கு பணிஇடமாற்றம் செய்துவிடுவோமே..
இதுவல்லவா உண்மைச் சுதந்திரம்..?
இந்தியத் திருநாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களும் சுதந்திரக் காற்றை அளவுக்கு அதிகமாகவே சுவாசிக்கிறோம். அதிலும் அரசு அலுவலகத்தில் வாழும் அலுவலர்கள்....
ஒரு முறை ஏதோ ஒரு சான்றிதழ் பெற உள்ளே சென்று வந்தால் தெரியும் சுதந்திரக் காற்றை நம்மைவிட இவர்கள் தான் அதிகமாக சுவாசிக்கிறார்கள் என்று..
அறிஞர்.அண்ணா, பெருந்தலைவர் காமராசர் போன்ற பல தலைவர்களும் தன்னலமற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகள் அவர் பெயரைச் சொல்லியே ஓட்டு வாங்கி பட்டை நாமம் சாத்துகிறார்கள். என்று அடுத்தவரைக் குறை கூறும் அதே நேரத்தில் நம்மையும் நாம் திருத்திக் கொள்ள முயல்வோம்!
சுதந்திரத்துக்காகப் போராடிய எத்தனையோ அன்பு நெஞ்சங்களை எண்ணிப்பார்ப்போம்!
தொ(ல்)லைக் காட்சி பார்த்து சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதை விட கீழ்க்காணும் உறுதிமொழிகளில் ஏதோ ஒன்றிரண்டையாவது வாழ்க்கையில் கடைபிடிக்க முயல்வோம்........
• “உணவு, உடை,உறைவிடம் என்னும் அடிப்படைத் தேவைகளை முதலில் நிறைவு செய்வோம்“
• “தரமான கல்வியை, தன்னம்பிக்கையளிக்கும் கல்வியை மாணவர்களுக்குத் தரமுயல்வோம்.“
•“நம் கடமையை செய்வோம்“
• “சுயநலமின்றி இருக்க நாமொன்றும் இயந்திரங்கள் அல்ல. பொதுநலம் கலந்த சுயநலம் கொண்டவர்களாக இருப்போம்“
• “பிறந்த நாட்டின் மீது பற்று வைப்போம்“
• “தாய் மொழியையே பேச முயல்வோம்“
• “நம் நாடு உயர நம் துறை சார்ந்து ஏதோ ஒரு வழியில் துணை நிற்போம்“
• “நாட்டின் பண்பாடுகளை மதிப்போம், போற்றுவோம்“
• “நம் நாட்டில் விளையும் விளைபொருள்களுக்கும், உற்பத்திப் பொருள்களுக்கும் முன்னுரிமை அளிப்போம்“
• “எல்லோருக்கும் அரசு வேலைவாய்ப்பளித்தல் இயலாத ஒன்று. (6000 அரசு பணியிடம் இருந்தால் பத்து இலட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள்) அதனால் சுயவேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வோம்“
நம் நாட்டில் எத்தனையோ நிறைகள் உண்டு!
நிறைகளை சொல்ல நிறையபோர் இருக்கிறார்கள்!
நான் மேற்கண்ட இடுகையில் குறைகளையே அடிக்கோடிட்டு இருக்கிறேன். குறைகளைத் திருத்திக் கொள்வதே வளர்ச்சியின் அடையாளமாக இருக்கும் என்பது எனது கருத்து.
அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்!