Wednesday, August 9, 2017

கனியிடை ஏறிய சுளையும்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் 
கழையிடை ஏறிய சாறும், 
பனி மலர் ஏறிய தேனும் - காய்ச்சும் 
பாகிடை ஏறிய சுவையும்;; 
நனிபசு பொழியும் பாலும் - தென்னை 
நல்கிய குளிரிள நீரும், 
இனியன என்பேன் எனினும் - தமிழை 
என்னுயிர் என்பேன் கண்டீர்! 


பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப் 
புனலிடை வாய்க்கும் கலியும், 
குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை 
கொட்டிடும் அமுதப் பண்ணும், 
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள் 
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும் 
விழைகுவ னேனும், தமிழும் - நானும் 
மெய்யாய் உடலுயிர் கண்டீர்! 

பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம் 
பக்கத் துறவின் முறையார் 
தயைமிகு உடையாள் அன்னை - என்னைச் 
சந்ததம் மறவாத் தந்தை, 
குயில் போற் பேசிடும் மனையாள் - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை, 
அயலவராகும் வண்ணம் - தமிழ்என் 
அறிவினில் உறைதல் கண்டீர்! 

நிலச்சுடர் மணி வானம் - ஆங்கே 
நிறையக் குளிர் வெண் ணிலவாம், 
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே 
கடல் மேல் எல்லாம் ஒளியாம், 
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல 
மலைகளின் இன்பக் காட்சி, 
மேலென எழுதும் கவிஞர் - தமிழின் 
விந்தையை எழுதத் தரமோ? 

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய் 
தேக்கிய கறியின் வகையும் 
தன்னிகர் தானியம் முதிi - கட்டித் 
தயிரோடு மிளகின் சாறும், 
நன்மதுரஞ் செய் கிழங்கு - காணில் 
நாவிலி னித்திடும் அப்பம், 
உன்னை வளர்ப்பன தமிழா! - உயிரை 
உணர்வை வளர்ப்பது தமிழே!

Popular Feed

Recent Story

Featured News