மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 6 -ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டும் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என அனைத்தையும் நீட் தேர்வின் அடிப்படையில் மாநில அரசே நிரப்ப உள்ளது. இதன் காரணமாக நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே விண்ணப்பங்கள் விநியோகம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறுகிறது.
முதல்நாளான திங்கள்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 11,967 விண்ணப்பங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 5,631 விண்ணப்பங்களும் என மொத்தம் 17,598 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, இணையதளத்திலும் விண்ணப்பங்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
சென்னையைப் பொருத்தவரை அதிகபட்சமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2,905 விண்ணப்பங்களும், சென்னை மருத்துவக் கல்லூரியில் 603 விண்ணப்பங்களும், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 393 விண்ணப்பங்களும் விற்பனை செய்யப்பட்டன.
மூன்று மடங்கு உயர்வு: கடந்த ஆண்டு முதல்நாளில் 6,123 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. கடந்த ஆண்டைக் காட்டிலும் முதல் நாளன்றே மூன்று மடங்கு விண்ணப்பங்கள் அதிகமாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
கட்டுக்கடங்காத கூட்டம்: