அரியலூர் மாவட்டம், விளாங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் திறனூட்டல் பயிற்சி ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலர் தென்காசி சு.ஜவஹர் பேசியது:
நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெற, மாநில அரசின் நிதி, மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல், மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியன இத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ. 288.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடு பராமரிப்பு கணினிமயமாக்கப்பட்டு சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, பணியிட மாறுதல்கள், விடுப்பு, இதர விவரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். இதனை வருகிற ஆகஸ்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்கள் கருவூலகத்துக்கு செல்லாமல் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கலாம்.