எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகத்தில் ஜூன் 11-ஆம் தேதி தொடங்கியது. அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் கலந்தாய்வை நடத்த உள்ளது.
இதற்காக 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது.
6-ஆம் நாள்: விண்ணப்ப விநியோகத்தின் 6-ஆம் நாளான சனிக்கிழமை அரசு இடங்களுக்கு 61, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 22 என மொத்தம் 83 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக ஆறு நாள்கள் விநியோகத்தின் முடிவில் 36 ஆயிரத்து 859 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் (ஜூன் 17) விநியோகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை நேரில் பெறவும், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும் திங்கள்கிழமை (ஜூன் 18) கடைசியாகும்.