பி.இ. மாணவர் சேர்க்கையை இந்த முறை ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.
ஆன்-லைன் கலந்தாய்வை ஜூலை 6 ஆம் தேதி தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஜூன் 2 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு உதவி மையங்களில் ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சென்னை மையத்தில் மட்டும் விளையாட்டுப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்காக ஜூன் 17 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:
அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே, இதுவரை சன்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள், சென்னையில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று பங்கேற்கலாம் என்றார்.