மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்தியக் கலந்தாய்வு நடைமுறைகள் புதன்கிழமை தொடங்கின.அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குச் சமர்ப்பிக்கப்படும் 15 சதவீத இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் ஆகியவற்றுக்கு மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் 2018-2019-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளது.
அதன்படி, புதன்கிழமை முதல் கட்ட கலந்தாய்வுக்கான பதிவு செய்யும் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. ஜூன் 19-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். அதன் முடிவுகள் ஜூன் 22-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
32,482 விண்ணப்பங்கள்: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 11-ஆம் தேதி தொடங்கியது. புதன்கிழமை நடைபெற்ற விநியோகத்தில் அரசு இடங்களுக்கு 5263, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 591 என மொத்தம் 5,854 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று நாள்கள் நடைபெற்ற விநியோகத்தில் இதுவரை மொத்தம் 32,482 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.