Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 12, 2018

சட்டப் படிப்புக்கு மறு நுழைவு தேர்வு கிடையாது




சட்டப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (சிஎல்ஏடி) மீண்டும் நடத்தப்பட மாட்டாது என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 19 தேசிய சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு கடந்த மே 13-ஆம் தேதி நடைபெற்றது.

சிஃபி டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் ஆன்லைன் முறையில் சட்டப் படிப்புக்கான தேசியப் பல்கலைக்கழகம் இந்த தேர்வை நடத்தியது. தேசிய சட்டக் கல்லூரிகளில் சட்டப் படிப்பு, சட்ட மேற்படிப்புக்கான முக்கியத்துவம் வாய்ந்த இந்த நுழைவுத் தேர்வில் பல்வேறு தொழில்நுட்பப் பிரச்னைகளை சந்திக்க நேர்ந்ததாக மாணவர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 6 உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் மாணவர்கள் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 




இதில், நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று கோரப்பட்டது. 258 மையங்களில் 54,450 பேர் நுழைவுத் தேர்வை எழுதினர். இவர்களில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வின்போது தாங்கள் தொழில்நுட்பப் பிரச்னையை எதிர்கொண்டதாக புகார் தெரிவித்தனர்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வு, மாணவர்களின் கோரிக்கையை நிராகரித்தது. 

திட்டமிட்டபடி தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என்று நீதிமன்றம் கடந்த மாத இறுதியில் அனுமதி அளித்தது. இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.




அப்போது, தொழில்நுட்பப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வேண்டுமானால் அளிக்கலாம். ஆனால், மறுநுழைவு தேர்வு நடத்த வேண்டும்; இப்போது நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.