இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஏஆர்) கீழ் நாடு முழுவதும் செயல்படும் வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் நடத்தப்படும் இளநிலை வேளாண்மை, தொழில்நுட்பப் படிப்புகளில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு (ஏஐஇஇஏ) மூலம் நிரப்பப்படுகின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஏராளமானோர் மே 18-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை இத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். தேர்வுகள் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வறை நுழைவுச் சீட்டுகளை ஜூன் 15-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மாணவர் கெளதம் பாரதியின் தாய் விமலா பாரதி கூறியதாவது: காரமடையில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற எனது மகன், நீட் உள்ளிட்ட அகில இந்தியத் தேர்வுகளுக்காகத் தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், வேளாண் படிப்புக்கான தேர்வுக்கு மே மாதம் விண்ணப்பித்தார். நுழைவுச் சீட்டுகளை ஜூன் 15-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 18-ஆம் தேதிதான் பதிவிறக்கம் செய்ய முடிந்தது. அதில் பார்த்த பிறகே எனது மகனுக்கு ஆமதாபாதிலும், அவரது நண்பர்களான வெங்கடேஷ், கெளசிகன் ஆகியோருக்கு போபாலிலும் மையம் ஒதுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
நாங்கள் கோவை, சென்னை, சேலத்தில் தேர்வு மையம் கேட்டிருந்தோம். குஜராத்துக்குப் பதிலாக கேரளம், கர்நாடகத்தில் ஒதுக்கியிருந்தால் கூட சிரமப்பட்டு அழைத்துச் சென்றிருப்போம். ஆனால் குஜராத்துக்கோ மத்தியப் பிரதேசத்துக்கோ செல்ல முடியாது என்பதால் கஷ்டப்பட்டு படித்த படிப்பு வீணாகிவிடுமே என்ற கவலையில் எனது மகன் இருக்கிறார் என்றார்.