Wednesday, August 1, 2018

நெட் 2018': தேர்வு முடிவுகள் வெளியீடு: 55,872 பேர் தகுதி

தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) முடிவுகளை மூன்றே வாரங்களில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். 



இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி -பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கும் நெட் தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். இந்தத் தேர்வு சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து சி.பி.எஸ்.இ. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 2018-ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வு கடந்த ஜூலை 8-ஆம் தேதி நாடு முழுவதும் 91 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 2,082 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. 84 பாடங்களின் கீழ் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை 11 லட்சத்து 48 ஆயிரத்து 235 பேர் எழுதினர். இது கடந்த ஆண்டுகளில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையைவிட மிக அதிகமாகும்.



இதில் உதவிப் பேராசிரியர் பணிக்கு 55,872 பேர் தகுதி பெற்றுள்ளனர். இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெற 3,929 பேர் தகுதி பெற்றுள்ளனர். தேர்வு எழுதுபவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், வழக்கமாக 3 தாள்கள் இடம்பெறும் நெட் தேர்வில் இம்முறை 2 தாள்கள் மட்டுமே இடம்பெறச் செய்யப்பட்டது. 

அது மட்டுமின்றி தகுதியான தேர்வர்கள் உடனடியாக வேலைவாய்ப்பில் சேர வழி ஏற்படுத்தும் வகையில், தேர்வு முடிவுகள் எப்போதும் இல்லாத வகையில் மூன்று வாரங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், தேர்வர்களின் ஓ.எம்.ஆர். தாள் மற்றும் விடைகள் முன்கூட்டியே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கொள்கையின்படி தேர்வெழுதிய மாணவர்களில் இரண்டு தாள்களிலும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெற்ற 6 சதவீதத்தினர், தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.



Popular Feed

Recent Story

Featured News