செவ்வாய் கிரகத்தில் 20 கிமீ பரப்பளவில் மிகப்பெரிய ஏரி கண்டுபிடிப்பு... விஞ்ஞானிகள் மகிழ்ச்சி! - தமிழ்க்கடல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 27, 2018

செவ்வாய் கிரகத்தில் 20 கிமீ பரப்பளவில் மிகப்பெரிய ஏரி கண்டுபிடிப்பு... விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!


செவ்வாய் கிரகத்தில் 20 கிமீ பரப்பளவில் மிகப்பெரிய ஏரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



வாஷிங்டன் : ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி அனுப்பிய மார்சிஸ் ராடார் கருவி மூலம், செவ்வாய்கிரகத்தில் 20 கிலோ மீட்டர் பரப்பளவில், மிகப்பெரிய ஏரி போன்ற அமைப்பில் திரவ வடிவில் நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஏறக்குறைய பூமியை ஒத்த கிரகமாகக் கருதப்படும் செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நீண்ட காலமாக உலக நாடுகள் ஆய்வுகள் நடத்தி வருகின்றன.

அண்மையில் அமெரிக்கா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பிய புகைப்படத்தின் மூலம் அங்கு ஏரிப்படுக்கை போன்ற அமைப்பு இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் விஞ்ஞானிகளின் நம்பிக்கை அதிகரித்தது.




ஏரி கண்டுபிடிப்பு:

இந்நிலையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பு, மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற திட்டத்தின் கீழ் மார்சிஸ் ராடார் கருவி மூலம் செவ்வாய் கிரகத்தில் ஏரி போன்ற அமைப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. சுமார் 20 கிமீ பரப்பளவில், 1.5 கிமீ ஆழத்தில் இந்த திரவப்படலம் பனி சூழ்ந்து இருப்பதாக இத்தாலி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது சுமார் 3.6 மில்லியன் ஆண்டுகள் பழைமையானதாக காணப்படுவதாக அவர்கள் அமெரிக்க விஞ்ஞான பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.


ஆராய்ச்சிகள் தீவிரம்:

செவ்வாய் கிரகத்தின் தென்துருவத்தில் இந்த ஏரி இருப்பதால், அக்கிரகத்தின் மற்ற பகுதிகளிலும் நீர் இருப்பதற்கும், உயிரினங்கள் வாழ்வதற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால், மேற்புறம் பனி சூழ்ந்து இருப்பதால் இந்த நீரை குடிக்க பயன்படுத்த முடியாது என்பது ஆராய்ச்சிகளின் கருத்து. இதனால் மேலும் தங்களது ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 




உறுதிபடுத்த நடவடிக்கை:

செவ்வாய் கிரகத்தில் இந்த மிகப்பெரிய ஏரி கண்டுபிடிக்கப்பட்டதற்கு விஞ்ஞானிகள் பலர் மகிழ்ச்சி தெரிவித்து வரும், அதே நேரத்தில் இன்னொரு விண்கலம் இதனை உறுதிப் படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


ராடார் சாதனங்கள்:

கடந்த 2003-ம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பு இந்த மார்சிஸ் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. அதில் உள்ள ராடார் சாதனங்கள் செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




வானியல் நிகழ்வு:
இது ஒருபுறம் இருக்க, 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை செவ்வாய்கிரகம் பூமியை நெருங்கி வரும் நிகழ்வு அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. செவ்வாய் கிரகம் சூரியன், பூமி இரண்டுக்கும் மிக அருகில் வரும் நிகழ்வை வானியல் அறிஞர்கள் `பெரிஹெலிக் அப்போசிஷன்' (Perihelic Opposition) என்கிறார்கள். அப்போது செவ்வாய் கிரகமானது`வழக்கத்தைவிட 2.7 மடங்கு பெரிதாகத் தெரியும். இதை எல்லோரும் வெறும் கண்களால் பார்க்க முடியும்.
யார் யார் பார்க்கலாம்?
அலாஸ்கா, வடக்கு கனடா, கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய வட கோளப் பகுதியில் வசிப்பவர்கள் செவ்வாய்கிரகத்தைக் காண வாய்ப்பில்லை. அதே நேரத்தில், தென் அரைக்கோளத்தில் வசிப்பவர்கள், அதாவது ஐரோப்பா, ஆசியா, தெற்கு கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் செவ்வாயைத் தெளிவாகக் காண முடியும்.
மிக அருகில்:
இதற்கு முன்னர் செவ்வாய் கிரகம் கடந்த 2003-ம் ஆண்டு பூமிக்கு அருகில் வந்தது. அப்போது, கடந்த 60,000 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக அருகில் வந்து வியப்பை அளித்தது நினைவு கூரத்தக்கது.



Post Top Ad