இரண்டு ஆண்டுகள் இளநிலை ஆசிரியர் கல்வியியல் கல்வி (பி.எட்.) சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் 600-க்கும் அதிமான பி.எட். கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,707 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, சென்னை காமராஜர் சாலையில் உள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு கல்வி நிறுவனம் நடத்தி வருகிறது.
2018-19 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்க உள்ளது. இதற்கு மொத்தம் 6,669 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 6 விண்ணப்பங்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
62 பேர் பொறியியல் பட்டதாரிகள்: விண்ணப்பித்தவர்களில் 62 பேர் பி.இ. பட்டதாரிகள் ஆவர். பொறியியல் பட்டதாரிகளுக்கென மொத்த பி.எட். இடங்களில் 116 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கட்டணம் எவ்வளவு? கலந்தாய்வில் பங்கேற்க வருவோர், 'The Secretary, Tamilnadu B.Ed. Admission, Chennai' என்ற பெயரில் கந்தாய்வுக் கட்டணத்தை வரைவோலையாகக் கொண்டு வர வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பு (எஸ்.சி.), பழங்குடி (எஸ்.டி.) வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.1,000, மற்ற வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.2,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கு... பி.எட். சேர்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், பொறியியல் பட்டதாரிகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதன் பிறகு, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.