Monday, July 30, 2018

அடுத்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு பாடம் கட்டாயம்: மத்திய அரசு

டில்லி:



அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் விளையாட்டு பாடம் கட்டாயம் என்றும், அதற்கு மதிப்பெண்கள் வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.


மாணவ மாணவிகளிடையே விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் விளையாட்டை தனி பாடத்திட்டமாக உருவாக்கி, அதில் தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்க மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.



தற்போதைய நடைமுறையில் அனைத்து பள்ளிகளிலும், விளயாட்டுக்கு என்று வாரத்தில் இரண்டு பீரியடுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பெரும் பாலான பள்ளிகளில், அந்த பீரியடை மற்ற பாடத்துக்காக ஒதுக்கி பாடம் நடத்தி வருகிறார்கள். விளையாட்டு கல்விக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை.

இந்த நிலையில், பள்ளிகளில் விளையாட்டு கல்விக்கும் முக்கியத்தும் அளிக்கும் வகையில், பாட்டத்திட்டத்தில் விளையாட்டையும் தனி பாடத்திட்டமாக உருவாக்கி அதிலும் பரீட்சை நடத்துவது என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது சம்பந்த மாக ஆய்வு நடந்து வருகிறது.

இது சம்பந்தமாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மற்றும் கல்வி மந்திரிகள் மட்டத்தில் ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இதை அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை செயலாளர் ராகுல்பட்நாகர் கூறியுள்ளார்.

மற்ற பாடங்களை போல இதுவும் தனி பாடமாக இருக்கும். அதற்கு பரீட்சையும் நடத்தப்படும். 100 மார்க்குக்கு தேர்வு நடக்கும். அதில் 70 மார்க் எழுத்து தேர்வுக்கும், 30மார்க் செய்முறை தேர்வுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இந்த பாடம் இருந்தாலும் அவர்களுக்கு பரீட்சை நடத்தப்படமாட்டாது. ஆனால் 8-ம் வகுப்புக்கு மேல் கட்டாயம் பரீட்சை நடத்தப்படும். அதில் வெற்றி பெற்றால்தான் அவர்கள் தேர்வானவர்களாக கருதப்படுவார்கள்.



இது மட்டுமல்லாமல் இந்த பாடத்திற்காக தினமும் தனியாக வகுப்புகளும் நடத்த வேண்டும். அதற்காக தனி பீரியடு உருவாக்க வேண்டும் என்றும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News