பெண் குழந்தைகள் சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமாக சுகன்யா சம்ரிதி யோஜனா 2015ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் இதுநாள் வரையில் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூ.1,000 இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த விதியை இப்போது ஒன்றிய அரசு திருத்தியுள்ளது. இதன்படி இனிமேல் ரூ.250 மட்டும் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக இருந்தால் போதுமானது. அதிகளவில் பெண் குழந்தைகளை இந்தத் திட்டத்தில் இணைக்கும் விதமாக ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பட்ஜெட் உரையில் இந்தத் திட்டம் குறித்துப் பேசிய அருண் ஜேட்லி, “நவம்பர் 2017 வரையில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின்கீழ் 1.26 கோடிக் கணக்குகள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ரூ.19,183 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளது” என்று கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.