Saturday, September 15, 2018

11, 12ம் வகுப்பு மதிப்பெண் இணைந்து ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கிடையாது. தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் - செங்கோட்டையன் அறிவிப்பு!

+2 பொதுத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் குறைப்பு மற்றும் 11ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது என்ற மிக முக்கிய அறிவிப்புகளை தமிழக கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டார்.



சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. வரும் கல்வியாண்டு முதல் உயர் கல்விக்குச் செல்ல 12ம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே போதும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மொத்த மதிப்பெண் 1,200ல் இருந்து 600 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 11, 12ம் வகுப்பு மதிப்பெண் இணைந்து ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கிடையாது. தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

11ம் வகுப்புப் பாடங்கள் மிகவும் கடினமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றும், 10, 11, 12ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுவதால் மன அழுத்தம் இருப்பதாகக் கூறுவதையடுத்தும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.



அதன்படி, பிளஸ் 1 தேர்வுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும், ஆனால் மதிப்பெண் உயர்கல்விக்கான சேர்க்கையின் போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News