பள்ளி மாணவர்களுக்காக, 'வெப் கேமரா, வைபை' என, நவீன வசதி களுடன், 15.66 லட்சம், 'லேப்டாப்'கள் வாங்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழக அரசின் சார்பில், இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. வழங்க முடிவு இதற்கான பணிகளை, பள்ளி கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, இன்னும் லேப்டாப் வழங்கப்படவில்லை.இந்நிலையில், 2017-18ல் படித்த மாணவர்களுக்கு மட்டுமின்றி, நடப்பு கல்வி ஆண்டில்,பிளஸ் 1, பிளஸ் 2 படிப்போர் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும், இந்த ஆண்டிலேயே, லேப்டாப் வழங்க, பள்ளி கல்வித் துறை முடிவுசெய்துள்ளது.
இதற்காக, இந்திய தர நிர்ணய ஆணைய அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம், 15.66 லட்சம் லேப்டாப்கள் வாங்கப்பட உள்ளன. அதற்கான கொள்முதல் நடவடிக்கைகள், 'எல்காட்' என்ற, தமிழக அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் வாயிலாகதுவக்கப்பட்டுள்ளன.