தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை மூலம் 31 ஆயிரத்து 200 பள்ளிக் கூடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது ஆங்கில பள்ளிகள் மோகத்தால் பல பெற்றோர் தனியார் ஆங்கில பள்ளிகளிலேயே மாணவர்களை சேர்க்கிறார்கள்.
எனவே, அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. பல இடங்களில் 15-க்கும் குறைவான மாணவர்களை கொண்டு பள்ளிகளை இயக்கி வருகிறார்கள்.
ஏற்கனவே அரசு இவ்வாறு குறைவான மாணவர்களை கொண்டு செயல்படும் 800 பள்ளிகளை மற்ற பள்ளிகளுடன் இணைக்கவும், 33 பள்ளிகளை நிரந்தரமாக மூடவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அரசு இதை மறுத்தது.
மாநில அரசுகள் நடத்தக்கூடிய பள்ளிகளுக்கு மத்திய அரசு பல்வேறு நிதி உதவிகளை செய்கிறது. சர்வ சிக்ஷா அபியான், ராஷ்டீரிய மத்திய மிக் அபியான் ஆகிய திட்டங்களின் கீழ் ஏற்கவே பள்ளிகளுக்கு உதவிகளை செய்து வந்தது.
இப்போது இந்த 2 திட்டங்களையும் இணைத்து சமக்ரா சிக்ஷா அபியான் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தின்படி மத்திய அரசு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சம் வரை மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி உதவிகளை செய்கிறது.
ஆனால், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்படாது என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி டெல்லியில் நடைபெற்றது.
அதில், தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் கலந்து கொண்டார். அப்போது அவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் குறைவாக மாணவர்கள் கொண்ட பல பள்ளிகளை இணைக்க போவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது 15 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகளை மூடுவது அல்லது மற்ற பள்ளிகளுடன் இணைப்பது என்று மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில அரசிடம் இருந்து தகவல் சென்றுள்ளது. அந்த பள்ளிகளுக்கு நிதி உதவிகள் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிதி கிடைக்காது என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. மத்திய அரசு மாநில பள்ளிகளுக்கு கழிவறை, மேலாண்மை, புத்தகம், நூலகம் போன்றவற்றுக்கும் திட்டங்கள் மூலம் உதவி வருகிறது.
இவற்றையும் மாணவர்கள் குறைவாக உள்ள மாநில அரசு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 3 ஆயிரம் பள்ளிகளை மூடினால் மற்ற 28 ஆயிரத்து 200 பள்ளிகளுக்கு ரூ.97 கோடி வரை மத்திய அரசின் நிதி கிடைக்கும்
இது சம்பந்தமாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது, பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதிகளை மத்திய அரசு மறுக்கும் போது, மாநில அரசுகள் பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
அரசு பள்ளிகளில் வசதியும், போதிய ஆசிரியர்களும் இல்லாத நிலையில் பெற்றோர்கள் எப்படி அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க முன்வருவார்கள் என்று கூறினார்.
வருங்காலத்தில் 15-ல் இருந்து 100 மாணவர்கள் வரை படிக்கும் 25 ஆயிரம் பள்ளிகளுக்கு கூட மத்திய அரசு நிதி உதவிகளை நிறுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் நிதி உதவி கிடைக்காது என்பதால் 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- Source Maalai malar