வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புற்றுநோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை, இந்தியாவிலும் ஆசிய கண்டத்திலும் பெருகிக்கொண்டே இருக்கிறது . சுமார் 35 சதவிகித இந்திய ஆண்கள் இந்த புற்று நோய்க்கு ஆளாகிறார்கள். புகை பிடிப்பது , புகையிலை பாக்கு, குட்கா போன்றவற்றை உட்கொள்வதால் புற்று நோய்க்கு ஆளாகிறார்கள் . இந்த வாய் புற்றுநோயிலிருந்து நம்மை நாம் எவ்வாறு தற்காத்துக் கொள்ளப் போகிறோம் என்பது முக்கியம் .
வாய்ப்புற்றுநோய் வாயின் உட்புறத்தில், உதடுகளில், நாக்கு, கன்னங்களில் , நாக்கின் அடிப் பகுதியில் , வாய் மேலண்ணம், பற்களின் மத்தியில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
பொதுவாக பாக்கு, மாவா போன்ற புகையிலைப் பொருட்களை வாயில் எவ்விடத்தில் ஒதுக்குகிறோமோ அவ்விடத்தில் முதலில் புற்றுநோயின் அறிகுறிகள் காணப்படும். நீண்ட நேரம் இப்பொருட்களை வாயில் வைத்து மென்னுவதால், இப்பொருட்களில் உள்ள நச்சுகள் நாளடைவில் வாயின் மென்மையான உட்புறத்தை கடினப்படுத்தி , அந்த இடங்களில் திசுக்களின் சிதைவை ஏற்படுத்தும். பின் புற்றுநோயாக மாறுகிறது.
பொதுவாக நல்ல சத்தான உணவு வகைகள் உண்பது, நல்ல பழக்க வழக்கங்கள் , சிறிது உடற் பயிற்சி, இவை நம் உடல் நிலையை சீராக வைத்துக்கொள்ள உதவும் . இவை மட்டுமின்றி வாய்ப்புற்றுநோயை எவ்வாறு தடுப்பது, வாய்ப்புற்றுநோய் ஏற்பட்டால் அல்லது அறிகுறிகள் தென்பட்டால் எவ்வாறு சிகிச்சை மேற்கொள்வதை என்பதை இனி பார்ப்போம்.
தடுப்பு முறை :
வாய்ப்புற்றுநோய் தடுப்பு முறைகள் , புற்று நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது . இதை அதிக அளவில் பின்பற்றினால் புற்று நோயால் ஏற்படும் மரணத்தை அதிக அளவில் குறைக்க முடியும்
1. வாய்ப்புற்றுநோய் ஏற்பட மிக முக்கியமான காரணி புகையிலை , பாக்கு , குட்கா மாவா போன்ற பொருட்களை பயன்படுத்துவது . இப்பழக்கத்தை உடையவர்கள் நாளடைவில் படிப்படியாக குறைப்பதன் மூலம் , வாய்ப்புற்றுநோய் வராமல் தவிர்க்க இயலும்.
2. 6 மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தித்து வாய்ப்புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது நல்லது .
வாய்ப்புற்றுநோயின் சுயபரிசோதனையை நாம் அனைவரும் தெரிந்து கொண்டு, அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .
தற்போது ராஜன் வாய்ப்புற்றுநோய் சிகிச்சை மையம் தயாரித்த " வாய்ப்புற்றுநோய் சுய பரிசோதனை காணொளி" மக்களிடையே பரவலாக பரவி வருகிறது . மிக எளிய முறையில் எவ்வாறு நம்மை பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்பதை தெரிவிக்கிறது .
1) சாதாரண உணவு வகைகள் உண்ணும் பொழுது வாய் எரிச்சல் ஏற்படுவது .
2) வாயின் உட்புறத்தில் ( கன்னங்கள் , உதடுகள் , நாக்கு, மேலண்ணம் , பற்கள் நடுவில் ) வெள்ளை அல்லது சிவப்பு படலம் தென்படுவது .
3 ) 3 வாரங்களுக்கு மேலாக ஆறாமல் இருக்கும் வாய்ப்புண்
4) 3 விரல்கள் வாயினுள் நுழையும் அளவுக்கு வாயை திறக்க இயலாமை
இவை அனைத்தும் வாய்ப்புற்றுநோயின் அறிகுறிகள் ஆகும் . இவை தென்பட்டால் உடனடியாக பல் மருத்துவரை அணுகி , புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது மிக மிக அவசியம் .
வாய்ப்புற்றுநோயின் விழிப்புணர்வை நாம் அனைவரும் பகிர்வோம், வாப்புற்றுநோயில்லா சமுதாயம் உருவாக உதவுவோம் . நாளைய தலைமுறை நலமாய் வாழட்டும் .