இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்லூரிகளின் ஆசிரியர்கள் தி இந்து நாளிதழின் செய்தியாளரிடம் பேசினா். அப்போது அவர்கள் கூறியதாவது:
அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மகப்பேறு காலச் சலுகைகள் தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அந்த சுற்றறிக்கையானது, கல்வி கொள்கை மற்றும் திட்ட துணை இயக்குனர் ஆனந்த சர்மாவினால் அனுப்பப்பட்டுள்ளது. இது முறையாக அமல்படுத்தப்படவில்லை. அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் பதிவு பெற்ற ஆசிரியர்கள் மொத்தம் 1,21,984 பேரில் 50 விழுக்காடு ஆசிரியைகள் ஆவர். இவர்களில் பெரும்பாலோருக்கு மகப்பேறு காலச் சலுகைகள் கிடைக்கவில்லை.
மகப்பேறு நல (திருத்தம்) சட்டம் 2017ன்படி, அனைத்து கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியைகளின் குழந்தைகளுக்குக் காப்பகம் ஒன்றை அமைக்க வேண்டும். சட்டத்தின் கீழுள்ள நலத்திட்டங்களுக்கான பிரிவுகள் கடந்த ஆண்டு ஏப்ரலிருந்து அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால் இவை எதுவுமே அமல்படுத்தப்படவில்லை.
பெரும்பாலான கல்லூரிகளின் ஆசிரியைகளுக்கு மகப்பேறு கால விடுமுறை கூட அளிப்பதில்லை. இரண்டு மாத விடுப்பு எடுத்தாலும் அதற்கு சம்பளம் அளிப்பதில்லை. அதற்கு மேல் விடுப்பு எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக தனியார் கல்லூரிகளில் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.பசுபதி கூறுகையில், தனியார் கல்லுாரிகளில் ஆசிரியைகள் மிக மோசமாக நடத்தப்படுகின்றனர். மகப்பேறு காலச் சலுகைகள் மட்டுமின்றி அவர்களுக்கென எந்தச் சலுகையும் அளிக்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றார்.
தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மகப்பேறு நலச்சட்டத்தினை மதிப்பதில்லை என்றும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில்லை என்றும் ஆசிரியைகள் கூறியுள்ளனர்.