சென்னையில் உலகளாவிய நோய்ச்சுமை என்ற பெயரில் (global burden of disease study) மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தனது அறிக்கையை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்த ஆய்வானது நிகில் டான்டன் என்ற ஆராய்ச்சியாளரும் மற்ற சில ஆய்வாளர்களும் இணைந்து மேற்கொண்டுள்ளனர். ஆய்வில் சர்க்கரை நோயானது கட்டுப்படுத்தப்படாவிட்டால் இந்திய மக்களின் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 1990இல் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 26 மில்லியனாக இருந்தது 2016இல் 65 மில்லியனாக அதிகரித்துள்ளது. 1990இல் 5.5 விழுக்காடாக இருந்தது 2016இல் 7.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே அதிகமான சர்க்கரை நோயாளிகள் தமிழகத்திலும் அதற்கு அடுத்தபடியாக கேரளத்திலும் உள்ளனர். இதற்கு அடுத்த எண்ணிக்கையில், டெல்லி, பஞ்சாப், கோவா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ளனர். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றால் விளைவுகள் விபரீதமாகி விடும். முதலில் சர்க்கரை நோயைத் தடுப்பதற்கும் மேலாண்மை செய்வதற்கும் கொள்கையும், நிதி ஒதுக்கீடும், அதற்கான கட்டமைப்பும் செய்து தரப்பட வேண்டும்.