ஆதார் அடையாள எண் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்ககோரியும், நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் சட்டத்தை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகளில் ஆதார் செல்லும் என உச்சநீதிம்னறம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஆதார் அட்டை பாதுகாப்பானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மேலும் அது விளிம்பு நிலை மக்களுக்கு பயனளிக்கக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவுகளை பாதுகாக்கும் சட்டங்களை இயற்ற வேண்டும் எனவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
"ஆதார் விளிம்பு நிலை மக்களுக்கு கண்ணியத்தை வழங்குகிறது. தனியுரிமையைக்காட்டிலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கண்ணியம் பெரிது."என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஆதார் 0.232 சதவீதமே தோல்வி அடைந்துள்ளது. தற்போது ஆதார் செல்லாது என்று சொல்வது ஆதாரை பெற்ற 99 சதவீத மக்களை தொந்தரவு செய்வது போன்றது."
"இப்போது வேண்டாம் என்று கூறினால் அது குழந்தையை குளித்தொட்டியிலிருந்து வெளியே எடுப்பதற்கு சமம்"
"மேலும் சிபிஎஸ்இ, நீட் மற்றும் யுஜிசி ஆகியவற்றுக்கு ஆதார் தேவை" என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கு
ஆதார் அடையாள அட்டை தொடர்பாக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்திய சட்டத்தை எதிர்த்து கர்நாடக மாநில முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ். புட்டசாமி தொடுத்திருந்த வழக்குதான் தனிமனித அந்தரங்கத்துக்கு அரசியல் சட்டப் பாதுகாப்பு உண்டா என்பது குறித்த விவாதத்திற்கு வழிவகுத்தது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன நீதிமன்ற அமர்வு, தனியுரிமை தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை 2017ஆம் ஆண்டு வழங்கியது.
அரசியலமைப்பின் 142வது பிரிவின்கீழ், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவில் சட்டமாகக் கருதப்படுகிறது, ஆனால் தனியுரிமை குறித்த புதிய சட்டங்களை உருவாக்குவது பற்றி பேசப்படுகிறது. ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது மற்றும் அதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்து, ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு 38 நாட்கள் விசாரணை செய்தது.
ஆதார் அட்டை ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ஐந்து அடி கனமான சுவர்களுக்குள் பாதுகாப்பாக உள்ளதாக ஆதார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியிருந்தார்.
மறுபுறமோ, 2500 ரூபாயில் கிடைக்கும் கணினி மென்பொருள் மூலம் ஆதார் தகவல்களை பெறமுடியும் என்ற தகவல் வெளியாகி இந்திய மக்களை அதிர்ச்சிக்குளாக்கியது.
ஆதார் போன்ற ஒற்றை அடையாளத்தை வளர்ந்த நாடுகள் தவிர்ப்பது ஏன்?
ஆதார் ரகசியம்: களவு போகிறதா நம் அந்தரங்க தகவல்கள்?
ஆதார் போன்ற பயோமெட்ரிக் அடையாளத் திட்டம் அமெரிக்காவில் இல்லையே ஏன்?
யு.ஐ.டி.ஏ.ஐ-இன் இன் 12 இலக்க அடிப்படை எண்ணை ரகசியமாக வைத்திருக்க, 16-இலக்க மெய்நிகர் ஐடி (வி.ஐ.டி) முறை அமல்படுத்தப்படுகிறது.
தனது ஆதார் எண்ணை டிராயின் தலைவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டு ஆதார் தகவல் பாதுகாப்பானது என்று சவால் விட்டதும், 'டிஜிட்டல் ஆதார் சண்டை' தொடங்கியது.