Wednesday, September 19, 2018

பயோ மெட்ரிக் கட்டாயமில்லை: அமைச்சர் காமராஜ்! !!

பயோ மெட்ரிக் கட்டாயமில்லை: அமைச்சர் காமராஜ் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை கட்டாயம் இல்லை என தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகள், ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஒரு கோடியே 96 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. அவற்றின்
அடிப்படையில், ரேஷன் கடைகளில் தற்போது பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் வருகின்றன.



முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு, ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதன்படி, ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே பயோமெட்ரிக்கில் கைவிரல் ரேகை வைத்தால் பொருட்கள் வழங்கப்படும்.

ஆதார் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே அனைவரது கைவிரல் ரேகையும் அரசிடம் உள்ளது. அதனால், ஸ்மார்ட் கார்டில் பெயர் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவரது கைவிரல் ரேகை பதிந்தால் மட்டுமே பொருட்கள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த முறையில், அனைவரது கைவிரல் ரேகையும் பயோ மெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்க முடியும். இதில், முறைகேடு நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை.

இந்த பயோ மெட்ரிக் முறை வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நடைமுறைக்கு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 19) சென்னை அண்ணாநகர் உணவுப்பொருள் பாதுகாப்புக் கிடங்கில் அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மழைக்காலத்தில் சேமிக்கப்படும் உணவுப்பொருட்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.



இதுகுறித்து அமைச்சர் காமராஜ் பேசுகையில், இங்கிருந்து பல அங்காடிகளுக்கும், பல ஊர்களுக்கும் ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவித்தா. “பொருட்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா, மூன்று மாதத்துக்குத் தேவையான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்யவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஸ்மார்ட் கார்டு என்பது வளர்ச்சித் திட்டமாகும். அதிலிருக்கும் குறைகளைக் களைந்துவிட்டு, அதைச் செயல்படுத்தி வருகிறோம். தரமான பொருட்கள் அனைத்து நேரங்களிலும் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்கிறோம். புதிதாக ரேஷன் கார்டு கேட்டு மனு அளித்தவர்களுக்கு, விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.



பயோ மெட்ரிக் முறை ரேஷன் கடைகளில் நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும், அது கட்டாயமில்லை. நடைமுறைச் சிக்கல் மற்றும் மக்களுக்குப் பாதிப்பு இல்லாமல் அந்த திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்தார்.

Popular Feed

Recent Story

Featured News