ஈஷா யோகா மையத்தின் சார்பில், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'இளைஞரும் உண்மையும்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, சத்குரு அளித்த பேட்டி: இந்திய இளைஞர்களிடம், தெளிவான பார்வை, உள்நிலையில் ஒரு சமநிலையை ஏற்படுத்தும் நோக்கத்தில், 'இளைஞரும் உண்மையும்' என்ற, மிகப்பெரிய முயற்சியை, ஈஷா யோக மையம் கையில் எடுத்துள்ளது.
நாட்டில், இளைஞர் சக்தி, மக்கள் தொகையில், 50 சதவீதம் உள்ளது.
அவர்களின் சக்தி, அவர்களுக்கே தெரிவதில்லை; ஆழ்மனதில் புதைந்துள்ளது. வாழ்க்கையில், சக்தியும், காலமும் மிக முக்கியம். காலம் போய்க் கொண்டே இருக்கும். சக்தி நிலைத்திருக்கும். அதை, தேவையான தெளிவு, சமநிலை கொடுத்தல் வழியாக, நல்வழிப்படுத்தலாம். அதை கொண்டு வருவதே, இந்த, 'இளைஞரும் உண்மையும்' நிகழ்ச்சி.
நம்மிடம் உள்ள ஒரே சொத்து, இந்த இளைஞர்கள் படை தான். இந்த நிகழ்ச்சி துவங்கியவுடன், லட்சக்கணக்கான கேள்விகள் வந்துள்ளன. அதில், இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள போதை பிரச்னை தான், பிரதானமாக இடம்பெற்றுள்ளது.
படிக்கும்போது ஏற்படும் மன அழுத்தம் காரணமாகவே, போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். 25 ஆண்டுகளில், போதை பழக்கத்திற்கு அடிமையானோர் எண்ணிக்கை, ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தால், மேற்கத்திய நாட்டு கலாசாரத்தை பார்த்து, நம் நாடு மாறி வருகிறது. உலகம் முழுவதும், ஒரே கலாசாரம் என்ற நிலை ஏற்படுவதால், இந்த போதை பிரச்னை அதிகரித்துள்ளது.
எனவே, சிறு வயது முதலே படிப்புடன் சேர்த்து, மற்ற கலைகளையும் கற்று வந்தால், மனம் சிதறாமல் இருக்கும். நாட்டில், குறைந்த சதவீத இளைஞர்கள் மட்டுமே, நாட்டுப் பற்றுடன் திகழ்கின்றனர். இளைஞர்களின் தற்கொலை சதவீதம், வருத்தமடையச் செய்கிறது. இதற்கும் அடிப்படை, கல்வியாகவே உள்ளது.
Source: Dinamalar