Sunday, September 16, 2018

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்கள் வழங்க தடை ஐகோர்ட்டு உத்தரவு

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்கக்கோரி வக்கீல் புருஷோத்தமன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது. இரண்டாம் வகுப்பு வரை இரு பாடங்களும், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நான்கு பாடங்களும் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும்’ என்று தேசிய ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் கூறி உள்ளதை அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.



இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த உத்தரவு தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், எந்த மாநில அரசும் இதுவரை பதில் அளிக்கவில்லை என்றும் மத்திய அரசு வக்கீல் தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி கிருபாகரன், அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார்.



பின்னர், ‘இந்த உத்தரவு சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மட்டுமல்ல. மாநில பாடத்திட்ட பள்ளிகளுக்கும் பொருந்தும்’ என்று கூறிய நீதிபதி, இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் தமிழகத்தில் மாநில பாடத்திட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா? என்று தமிழக அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினார்.

அவ்வாறு சுற்றறிக்கை அனுப்பத்தவறினால், கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என்று எச்சரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.



Popular Feed

Recent Story

Featured News