உடல் உஷ்ணம் என்பது நம்முடைய உடல் இயக்கத்திற்கு மிகவும் தேவையான ஒன்றாகும். இது நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் சீராக வைத்துக் கொள்ளவும், ஜீரண வேலையை நிகழ்த்தவும் தேவைப்படுகிறது.
உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகள்
உடற்சூடு அதிகரித்தால் உடலில் உள்ள பித்தப்பை பாதிப்புக்கு உள்ளாகும். அதோடு கல்லீரலும் பாதிக்கப்படும். இதன் காரணமாக சில உஷ்ண நோய்கள் தாக்கும் அபாயம் உருவாகும்.
கண் எரிச்சல், தூக்கமின்மை, வாய்ப்புண் போன்ற அறிகுறிகள் உடற்சூடு அதிகரிப்பதால் ஏற்படும். எனவே, இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அதை சரிசெய்து கொள்ள வேண்டும்.
உடலில் பித்தம் அதிகரிக்கும்போது உடற்சூடு பிரச்சனை ஏற்படும். இதற்கு காரணம் அன்றாட வாழ்வில் எடுத்துக்கொள்ளும் உணவு பழக்க வழக்கங்கள் தான்.
உடலில் உஷ்ணம் அதிகரித்தால் மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், தூக்கமின்மை, வயிற்று எரிச்சல், சிறுநீரக எரிச்சல், கண் எரிச்சல், மூலநோய், மலக்குடல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
பெண்களின் மாதவிடாய் நாட்களின் போது அவர்களுக்கு உடற்சூடு அதிகரிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை உண்டாகும்.
தீர்வுகள்
டீ, காபி, கோலா போன்ற பானங்கள், மீன், கருவாடு, கத்திரிக்காய், புளித்த தயிர், வினிகர், ஊறுகாய் ஆகியவையும் உடற்சூட்டை அதிகரிக்கும் என்பதால், இவற்றை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
மதுப்பழக்கம், புகைப்பழக்கம் ஆகிய பழக்கங்களை கைவிடுவதால் உடற்சூடு அதிகரிப்பதை தவிர்க்கலாம்.
வெள்ளரிக்காய், முள்ளங்கி, வெண்பூசணி, இளநீர், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவுப்பொருட்களை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மணத்தக்காளி, பொன்னாங்கன்னி போன்ற கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.