Wednesday, September 26, 2018

தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள்: ஆணையத்துக்கு உத்தரவு!

தேர்தல் பணிகளில் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இரண்டு வாரத்தில் பதிலளிக்குமாறு, மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



திருவாரூர் மாவட்ட நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சிவபாக்கியம் உள்ளிட்ட இரண்டு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர். அதில், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஓட்டுச்சாவடி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவித்தனர்.

ஓர் ஆசிரியர் ஆயிரம் வீடுகளில் வாக்காளர் பட்டியலைச் சரி செய்ய அறிவுறுத்தப்படுவதாகவும், இதனால் ஆசிரியர்கள் பணி பாதிப்புக்கு உள்ளாவதாகவும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே இந்தப் பணிக்காகப் பயன்படுத்தப்படுகின்றனர். உயர் நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை இப்பணிகளுக்கு நியமிப்பதில்லை. அதனால், இப்பணிகளுக்கென்று தனியாக ஒரு துறையை உருவாக்கி வாக்காளர் பட்டியல் சரி செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.



இந்த மனுவை நேற்று (செப்டம்பர் 25) நீதிபதி மகாதேவன் விசாரித்தார். அப்போது, இந்த மனு குறித்து மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.

Popular Feed

Recent Story

Featured News