Friday, September 21, 2018

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு "ஸ்மார்ட் கார்டு' வழங்கும் பணி: சிறப்பாசிரியர்களுக்குப் பயிற்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்காக, 8 வட்டாரங்களைச் சேர்ந்த சிறப்பாசிரியர்களுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.



மாவட்டம் முழுவதும் 5,165 மாற்றுத்திறன் குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கல்வித் திட்ட பொறுப்பாளர்கள் மூலம் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்திலுள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில், சிறப்பாசிரியர்கள் 81 பேருக்கு ஸ்மார்ட் கார்டு தொடர்பான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

இதில், முதல் கட்டமாக பழனி நகர், பழனி புறநகர், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், வடமதுரை, கொடைக்கானல், தொப்பம்பட்டி, குஜிலியம்பாறை ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சியின்போது, மாற்றுத் திறன் குழந்தைகள் பிறந்த தேதி, முகவரி, கல்வி பயின்று வரும் வகுப்பு, பாதிப்பு விவரம், அதன் சதவீதம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.



மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் எலும்பு முறிவு தொழில்நுட்பவியலர் விஜயபாஸ்கர் இப்பயிற்சியினை வழங்கினார்.

மாற்றுத்திறன் குழந்தைகள் தொடர்பான விவரங்கள் முழுமையாக ஆன் லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர், ஸ்மார்ட் கார்டு (தேசிய அடையாள அட்டை) வழங்கும் பணி விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

Popular Feed

Recent Story

Featured News