Wednesday, October 10, 2018

வருமான வரி: காலக்கெடு நீட்டிப்பு..!!

வருமான வரி: காலக்கெடு நீட்டிப்பு!

வருமான வரி ரிட்டன் மற்றும் தணிக்கை அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது.



2017-18ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டனையும், தணிக்கை அறிக்கையையும் சமர்ப்பிப்பதற்கு அக்டோபர் 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கான கால அவகாசம் அக்டோபர் 31ஆம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும்படி மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்குப் பங்குதாரர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பல்வேறு பங்குதாரர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, வருமான வரி ரிட்டன்களையும், தணிக்கை அறிக்கையையும் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் 2018 அக்டோபர் 15ஆம் தேதியிலிருந்து 2018 அக்டோபர் 31ஆம் தேதியாக நீட்டிக்கிறது. எனினும், செப்டம்பர் 24ஆம் தேதியன்று வெளியாகிய உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்ததுபோல, நீட்டிப்பு செய்யப்பட்ட தேதியில் வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வோர் வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 234ஏ-இன் கீழ் வட்டி செலுத்த வேண்டியிருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



முன்பு மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டிருந்த தகவல்களின்படி, ஊதியம் பெறும் வரி செலுத்துவோர் தாக்கல் செய்த வருமான வரி ரிட்டன்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் 31 வரை 71 விழுக்காடு அதிகரித்து 5.42 கோடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது.

Popular Feed

Recent Story

Featured News