Saturday, October 27, 2018

கடன்களை வாரி வழங்கும் வங்கிகள்!

அக்டோபர் 12 வரையிலான இரண்டு வாரங்களில்
இந்திய வங்கிகள் வழங்கிய கடன்கள் 14.35 சதவிகிதம் அதிகரித்துள்ளன.




வங்கிகள் வழங்கும் கடன் மற்றும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகை குறித்த விவரங்களை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 12 வரையிலான இரண்டு வாரங்களில் வங்கிகளின் கடன்கள் 14.35 சதவிகிதம் உயர்ந்து ரூ.89.93 லட்சம் கோடியாக இருந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் வங்கிக் கடன்கள் ரூ.78.64 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. வங்கிகளில் மேற்கொள்ளப்படும் டெபாசிட்களைப் பொறுத்தவரையில், 8.86 சதவிகித உயர்வுடன் மொத்தம் ரூ.117.85 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் டெபாசிட் மதிப்பு ரூ.108.25 லட்சம் கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



இதற்கு முன்னர் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த அறிக்கையின் படி, செப்டம்பர் 28 வரையிலான இரண்டு வாரங்களில் வங்கிக் கடன்களின் மதிப்பு ரூ.89.82 லட்சம் கோடியாகவும், டெபாசிட்களின் மதிப்பு ரூ.117.99 லட்சம் கோடியாகவும் இருந்தது. சென்ற ஆகஸ்ட் மாதத்தில் வேளாண் துறை தவிர்த்து இதர துறைகளுக்கு வங்கிகள் வழங்கிய கடன்களின் அளவு12.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் இதன் வளர்ச்சி 5.5 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்காக கடன்கள் சென்ற ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 6.5 சதவிகிதத்திலிருந்து இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 6.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோல, சேவைகள் துறைக்கான கடன்கள் 26.7 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.



Popular Feed

Recent Story

Featured News