Saturday, November 24, 2018

2 மணி நேரத்தில் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் நகரத்திற்கு புல்லட் ரயில்


2 மணி நேரத்தில் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் நகரத்திற்கு புல்லட் ரயில்களை இயக்குவது என்பது செயல்படுத்தக் கூடியது என்று ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.



தென் மாநிலங்களை பொறுத்தளவில் ஓரளவுக்கு அருகாமையில் அமைந்துள்ள இரண்டு முக்கிய நகரங்கள் சென்னை மற்றும் பெங்களூரு.

இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை தலா சுமார் ஒரு கோடியை எட்டப் போகிறது. இவ்வளவு பெரிய நகரங்களுக்கு நடுவே பயணிகள் போக்குவரத்து என்பது மிக அதிகமாக உள்ளது.

சதாப்திதான் வேகம்

பெங்களூரில் இருந்து மேற்கே 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மைசூர் நகரம் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு மாநகரம் ஆகும். எனவே இந்த மூன்று நகரங்களுக்கு நடுவே பயணிக்கும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு அதிவேக ரயில் இணைப்பு ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. தற்போது சென்னை-பெங்களூரு-மைசூர் நடுவே அதிக வேகத்தில் பயணிக்க கூடிய ரயில், சதாப்தி ஆகும். சென்னையிலிருந்து மைசூருக்கு, சதாப்தி ரயிலில் ஏழு மணி நேரம் செலவாகும். சென்னை-பெங்களூரை 5 மணி நேரத்தில் இந்த ரயில் கடக்கிறது. மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு, சென்னை-பெங்களூர் நடுவே, 6 மணிநேரம் முதல் 7 மணி நேரம் வரை செலவாகின்றன.



ஜெர்மனி ஆய்வு

இந்த நிலையில்தான் இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் மார்ட்டின் நே தங்களது ஆய்வறிக்கை, ரயில்வே வாரிய தலைவர் அஸ்வினி லோகானியிடம் வழங்கியுள்ளார். இந்த அறிக்கையில் முக்கியமாக கூறப்பட்டுள்ள தகவல்கள் இதுதான்: சென்னை மற்றும் மைசூர் நடுவேயான 435 கிலோமீட்டர் தூரத்திற்கு புல்லட் ரயில் காரிடார் அமைக்க முடியும்.

அதி வேகம்

இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் புல்லட் ரயிலை ஒரு மணிநேரத்திற்கு அதிகபட்சமாக 320 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும். 435 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கக்கூடிய இந்த மார்க்கத்தில் 84% தண்டவாளம் என்பது பாலத்திற்கு மேலேயும், 11% சுரங்கமாகவும், எஞ்சிய பகுதிகள் தரைப் பகுதியிலும் இயங்கக் கூடியதாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பயண நேரம் 2 மணி நேரம்தான்

இந்த ரயில் திட்டம் அமலுக்கு வந்தால் சென்னையில் இருந்து பெங்களூருக்கு 120 நிமிடங்களில் சென்றுவிட முடியும். அதாவது, இரண்டு மணி நேரம் மட்டுமே. இதன் மூலம் இவ்விரு நகரங்கள் நடுவே பயணிக்கும் பல லட்சம் பயணிகளுக்கு அது வரப்பிரசாதமாக அமையும். இதுபற்றி தனபால் என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் கூறும்போது. பெங்களூரு-மைசூர் நெடுஞ்சாலையில் டிராபிக் என்பது அதிகரித்துவிட்டது. பெங்களூரு முதல் சென்னை வரை பயணிப்பதற்கு ஐந்து முதல் ஏழு மணி நேரம் ஆகிறது. எனவே பலரும் பெங்களூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் செல்கிறார்கள்.



அனுமதி எப்போது?

புல்லட் ரயில் இயக்கப்பட்டால் விமானத்தை தவிர்த்து விட்டு ரயிலில் வெறும் இரண்டு மணி நேரத்தில் இவ்விரு நகரங்கள் நடுவே பயணிக்க முடியும் என்பது சிறப்பான விஷயம். விமான நிலையத்திற்கு அலையும் நேரமும் மிச்சமாகும். அதைவிட குறைந்த செலவிலும் பயணிக்க முடியும் என்றார். தற்போதைய நிலையில் மும்பை-அகமதாபாத் நடுவேயான புல்லட் ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜப்பான் அரசு நிதி உதவியுடன், இந்த திட்டம் செயல்படுகிறது. பெங்களூரு வழியாக சென்னை முதல் மைசூர் வரையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு இதுவரை அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News