Wednesday, November 21, 2018

மியான்மர், தென் ஆப்பிரிக்காவில் தமிழ்ப் பல்கலை. மூலம் தமிழ்ப் பயிற்சி அளிக்கத் திட்டம்



மியான்மரிலும், தென் ஆப்பிரிக்காவிலும் தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலம் தமிழ் பயிற்றுவிக்கப்படவுள்ளது என்றார் அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ. பாலசுப்பிரமணியன்.

இப்பல்கலைக்கழகத்தில் மொழியியல், கல்வியியல், மேலாண்மையியல் துறைகள் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கல்வியியலில் மொழித் தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பிலான பயிலரங்கத்தில் அவர் மேலும் பேசியது:



தமிழ் என்பது உலக மொழியாகிவிட்டது. இதற்குக் காரணம் தமிழர்கள் இல்லாத கண்டமே இல்லை. அந்தத் தமிழர்களுக்கு அவர்களுடைய அடையாளம் என்பது ஒரு சிக்கலாக உள்ளது. அந்த அடையாளத்துக்காக ஏங்குபவர்களுக்கு அந்த அடையாளத்தை அளிப்பது தமிழ்ப் பல்கலைக்கழகம்தான். இப்பணியைச் செய்யத் தமிழக அரசு நிகழாண்டு ரூ. 27 லட்சத்தை வழங்கியுள்ளது.



மியான்மரிலும், தென்ஆப்பிரிக்காவிலும் உள்ள தமிழர்களுக்குத் தமிழைப் பயிற்றுவிப்பதற்காகவும், தமிழ்ப் பண்பாட்டு உணர்வை ஊட்டுவதற்காகவும் 2019, மார்ச் மாதத்துக்குள் தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அங்கே சென்று முறையாகத் தமிழைப் பயிற்றுவித்துப் பண்பாட்டு உணர்வுகளை எடுத்துரைத்து வருவர் என்றார் துணைவேந்தர்.



முனைவர் த. முத்துகிருஷ்ணன், அமெரிக்கா தமிழ் அநிதம் செயலர் அ. காமாட்சி, மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கா. உமாராஜ், து. சேதுபாண்டியன், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரி உதவிப் பேராசிரியர் வ. தனலட்சுமி, மொழிப்புல முதன்மையர் இரா. முரளிதரன், கல்வியியல் துறைப் பேராசிரியர் கு. சின்னப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News