Monday, November 5, 2018

சுனாமியின் தன்மை அறிவோம்!




சுனாமி. உலகில் நிகழும் பேரிடர்களில் மோசமான அழிவைத் தரும் ஒன்று. ஒரு நகரத்தையே அழிக்கக்கூடிய வல்லமை வாய்ந்தது. சுனாமியின்போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். இன்று சுனாமி குறித்த விழிப்புணர்வு நாள். சுனாமி குறித்த சில தகவல்கள்:

1. சுனாமி என்பது ஒற்றை அலையால் ஏற்படுவது அல்ல. பல அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக மிக வேகமாக அடித்து வரும்.

2. கடலுக்கடியில் நிகழும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு ஆகியவை சுனாமிக்கான முக்கியமான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

3. சுனாமி அலைகள் 100 அடிகளுக்கும் அதிகமான உயரம் கொண்டவையாக இருக்கலாம்.

4. சுனாமி அலைகள் வெறும் 30 செமீ உயரம் வரை வந்து, யாரும் கவனிக்காமலேயே கடந்தும் போய்விடலாம்!

5. சுனாமியின் சராசரி வேகம், ஒரு மணி நேரத்துக்கு 500-800 கிமீ!



6. மேலும், சுனாமி நிலத்தில் அதிகளவிலான உப்பைக் கலந்து நிலத்தை விஷமாக்கிவிடும். இதனால், பசியாலும் தாகத்தாலும் நோயாலும் பலர் மரணிக்கக்கூடும்.

7. சுனாமியில் நாம் மாட்டிக் கொள்ளும்பட்சத்தில், மிதந்து கொண்டு இருக்கும் ஒரு பொருளைப் பற்றிக் கொண்டு நீரின் போக்கிலேயே செல்ல வேண்டுமாம்.

8. சுனாமி எப்போது வரும் என்பதை அறிவியலாளர்களால் ஏறத்தாழ கண்டுபிடித்துவிட முடியும். நீரின் ஆழம், ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்தின் தூரம், நிலநடுக்கம், எரிமலைச் சீற்றம் முதலானவை நடந்த நேரம் ஆகியவற்றை வைத்து சுனாமி வரப்போகும் நேரத்தைக் கணக்கிடுகிறார்கள்.

9. சுனாமி என்பது ஒரு ஜப்பானிய மொழிச் சொல்.

10. ஜப்பானில்தான் வரலாற்றிலேயே அதிகளவிலான சுனாமி நிகழ்ந்திருக்கிறது.



- ஆஸிஃபா

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News