பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது ஆறுமாத கைக்குழந்தையை போலீஸ் நிலைய மேஜையில் படுக்க வைத்துவிட்டு பணி செய்து கொண்டிருந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது தெரிந்த விஷயம். இப்போது அது அவருக்கு பாராட்டையும், பரிசையும் பெற்றுக்கொடுத்துள்ளது. அத்துடன் சொந்த ஊருக்கு இடமாறுதலாகி செல்வதில் இருந்து வந்த சிக்கலுக்கும் தீர்வு பிறந்துள்ளது. அந்த பெண் போலீஸ் கான்ஸ்டபிள் பெயர் அர்ச்சனா ஜெயந்த் சிங். இவருடைய பூர்வீகம் ஆக்ரா. அங்கிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜான்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
அர்ச்சனா போலீஸ் நிலையத்தில் குழந்தையை படுக்கவைத்து விட்டு பணி செய்து கொண்டிருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதுடன் உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. இதுபற்றி போலீஸ் டி.ஜி.பி கூறுகையில், ‘‘போலீஸ் கான்ஸ்டபிளின் குடும்ப நிலவரத்தை கேள்விப்பட்டதும் ஐ.ஜி.யிடம் பேசினேன். அர்ச்சனா கடினமாக உழைக்கிறார். குழந்தை பிறந்த பின்னரும் விடுப்பு எடுத்துக்கொள்ளாமல் கடமை உணர்வோடு செயல்படுகிறார். அதனால் அவருக்கு ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிக்க முடிவு செய்தோம்’’ என்றார்.
‘‘நான் என் பெற்றோரையும், கணவரையும் சந்தித்து பேசி நெடுநாட்களாகிறது. தீபாவளிக்கு அவர்களுடன் சேர்ந்து இருப்பேன் என்று நினைக்கிறேன். பணி இடத்தில் சில பிரச்சினைகளை சந்தித்தேன். அதேவேளையில் சக ஊழியர்களிடமிருந்து ஆதரவு கிடைத்தது. இப்போது பணி இடமாற்றம் கிடைத்திருப்பது என் குடும்பத்தோடு சேர்ந்து வாழ உதவும். கான்பூரில் தங்கி படிக்கும் என் மூத்த மகளை ஆக்ராவுக்கு அழைப்பேன். என் கணவரும் என்னுடன் சேர்ந்துவிடுவார். போலீஸ் நிலையங்களில் ஒரு குழுவை நியமிப்பதற்கு எடுத்திருக்கும் முயற்சியும் மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் பெண் போலீசார் அனைவருக்கும் இது உதவியாக இருக்கும்’’ என்கிறார், அர்ச்சனா.
No comments:
Post a Comment