தருமபுரி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை முயற்சியின் போது காயமடைந்த மாணவி உயிரிழந்ததையொட்டி, குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி ஊர்பொதுமக்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமம் ஒன்றைச் சேர்ந்த மாணவி அருகில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
விடுதியில் தங்கியிருந்த அவர், தீபாவளி பண்டிகைக்காக வீட்டுக்கு வந்துள்ளார். கடந்த ஐந்தாம் தேதி இயற்கை உபாதைக்காக அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் மாணவி சென்றுள்ளார். அதே ஊரைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் ஆகியோர் மாணவியை பின்தொடர்ந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
மாணவிக்கு சகோதரன் முறை கொண்ட இருவரும் அவரை அருகில் உள்ள ஓடைக்கரைக்கு தூக்கிச் சென்றதாக சொல்லப்படுகிறது. மாணவியின் வாயில் துணியை வைத்து அடைத்த இருவரும் அவரை வன்கொடுமை செய்ய முயன்றதாக தெரிகிறது. இதில் மாணவி படுகாயம் அடைந்தார்.
இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி அரசு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டு, பின்னர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். அதேசமயம் உரிய சிகிச்சை அளிக்காததே உயிரிழப்புக்கு காரணம் என மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி ஊர்ப்பொதுமக்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த கிராமத்தில் கூடிய பொதுமக்கள் அனைவரும் அங்கேயே உணவு சமைத்து, சாப்பிட்டனர். இரவு முழுவதும் போராட்டம் நீடித்தது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment