Friday, November 23, 2018

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் அமல்படுத்துவதற்கான பணிகள் தொடக்கம் ஆதார் விவரங்களுடன் முழுவிவரம் சேகரிப்பு



அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் அமல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி இருப்பதால் ஆதார் விவரங்களுடன் அவர்களின் முழு விவரம் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகள் தினமும் காலை 9.15 மணிக்கு தொடங்கி மாலை 4.15க்கு முடிவடைகிறது. பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு 10 நிமிடத்துக்கு முன்பாக, தலைமை ஆசிரியர் அறையில் உள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திடுவது நடைமுறையாக இருந்து வருகிறது.

இது போல மதியமும் பள்ளி துவங்குவதற்கு முன், ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திடவேண்டும். குறித்த நேரத்தில் வரமுடியாத ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களை சரிக்கட்டி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வருகின்றனர்.



இதனால் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிகல்வித்துறை சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது.

குறிப்பாக அனைத்து பள்ளிகளிலும், இந்தாண்டு இறுதிக்குள் பயோமெட்ரிக் வருகை பதிவேடு கொண்டு வரப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அங்கு பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியைகளின் எண்ணிக்கை, ஆசிரியரல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கை தயாரித்து வருகின்றனர்.



இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் முதற்கட்டமாக 3,688 அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 41,805 பேருக்கும், 4,040 மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 774 பேருக்கும் இந்த பயோமெட்ரிக் முறையில் அமலுக்கு வருகிறது. இதற்காக ₹15.30 கோடி செலவிடப்பட உள்ளது. மேலும் நிதிப்பற்றாக்குறை காரணமாக அரசுப்பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் உதவிகள் செய்ய அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.



இந்த திட்டத்ைத செயல்படுத்துவதற்காக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்ப முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆதாரில் உள்ள முழு விவரங்களுடன் ஆசிரியர்களின் விவரங்கள் இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.

அதன்பிறகு தனி சாப்ட்வேரில் இந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் ஆசிரியர்களின் கை ரேகை பதிவுகள் செய்யப்படும். இந்த பணிகள் அனைத்தும் டிசம்பர் மாத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News