Friday, December 14, 2018

வங்க கடலில் இன்று புயல் உருவாகிறது வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு








தென் கிழக்கு வங்க கடலில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டு இருந்தது.

அது தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (வெள்ளிக்கிழமை) புயலாக உருவாகும் என்றும், இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-


தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது.


இது சென்னைக்கு தென் கிழக்கே 1,150 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு, தென்கிழக்கே 1,330 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், 14-ந் தேதி (இன்று) புயலாக உருவாகிறது. தற்போதைய நிலவரப்படி இந்த புயல் தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக 15 (நாளை), 16 (நாளை மறுநாள்) ஆகிய தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும். வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.






15, 16-ந் தேதிகளில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயலாக மாறும் பட்சத்தில், அந்த புயலுக்கு ‘பெய்ட்டி’ என்று பெயர் சூட்டப்பட இருக்கிறது. இந்த பெயர் தாய்லாந்து நாட்டின் சார்பில் வைக்கப்பட உள்ளது.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து எண்ணூர், கடலூர் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

புயல் தமிழகத்தை நெருங்குமா?

வங்க கடலில் இன்று உருவாகும் புயல், தமிழக பகுதியை நெருங்குமா? என்ற கேள்விக்கு வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பதில் வருமாறு:-






சென்னைக்கு தென் கிழக்கே 1,150 கி.மீ. தொலைவில் இருப்பதால் இப்போது தெளிவாக எந்த பகுதியில் கரையை கடக்கும் என்று சொல்ல முடியாது. வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி 200 கி.மீ. தூரம் வரை(நேற்றைய நிலவரப்படி) வந்து கடந்து செல்லும். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த புயலினால் பெரிய அளவில் மழை இருக்க வாய்ப்பு இல்லை.

புயல் கரையை நெருங்கும் போது நிலக்காற்று வீச வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அப்படி வீசினால் மழை குறையும். என்றாலும் வட தமிழக மாவட்டங்களில் மழை இருக்கும். பெரிய அளவில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு தமிழக பகுதிக்குள் வந்தால் மட்டுமே மழை அதிகம் இருக்கும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. நிலநடுக்கோட்டு பகுதிக்கு 5 டிகிரி (500 கி.மீ.) கீழாக தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருக்கிறது. அது மேல் நோக்கி வரும்போது காற்றின் போக்கு, கடலின் வெப்பநிலையை பொறுத்து மாற்றங்கள் இருக்கும்.






No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News