Tuesday, December 11, 2018

அறிக்கை விடும் தலைவர்கள் ஆலோசனை தரலாம் : அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு

சென்னை: ''மாணவர்கள் இல்லாத அரசு பள்ளிகளை நடத்துவது குறித்து, அறிக்கை விடும் அரசியல் கட்சி தலைவர்கள், ஆலோசனை தரலாம்,'' என, பள்ளி கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.



அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது, தரமான கல்வி வழங்குவது, புயல் பாதித்த பகுதிகளில் பள்ளிகளை நடத்துவது, பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, சென்னையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுடன், ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில்,

பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பங்கேற்று, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.பின், அவர் அளித்த பேட்டி:மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினோம். அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளோம். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோரை, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், தற்காலிகமாக நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



தென் மாவட்டங்களில் உபரியாக உள்ள, 4,000 ஆசிரியர்களை, மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள, 5,472 இடங்களுக்கு மாற்ற ஆலோசித்து வருகிறோம். புதிய ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு, வழக்குகள் தடையாக உள்ளன. வழக்குகளை முடித்து, டி.ஆர்.பி., வழியாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.நடப்பு கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் படிக்கும், 26 ஆயிரம் மாணவர்களுக்கு, 413 மையங்களில், 'நீட்' தேர்வு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. 



கடந்த, 2017 - 18ம் கல்வி ஆண்டில், 3,192 மாணவர்களுக்கு, தனியார் நிறுவனமும், தனியார் கல்லுாரிகளும் செலவு செய்து, நீட் பயிற்சியை இலவசமாக வழங்கின. அரசு, ஒரு காசு கூட செலவு செய்யவில்லை.
தமிழகத்தில், 33 அரசு பள்ளிகளில், ஒரு மாணவர் கூட இல்லை; 1,334 பள்ளிகளில், ஒன்பதுக்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர். எந்த பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. அறிக்கை விடும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இதுபோன்ற அரசு பள்ளிகளை நடத்த ஆலோசனை அளித்தால், ஏற்க தயாராக உள்ளோம்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News