Monday, December 10, 2018

புகைப்பட வருகைப் பதிவு முறை சென்னை அரசுப் பள்ளியில் இன்று அறிமுகம்

புகைப்பட வருகைப் பதிவு முறை தமிழகத்தில் முதல் முறையாக சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்படவுள்ளது.



மாணவர்களை புகைப்படம் எடுத்து வருகைப் பதிவு செய்யும் முறையை அரசுப் பள்ளியில் அறிமுகம் செய்ய தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த, ஐ.சி.இ.டி. என்ற நிறுவனம் சார்பில், 'ஆண்ட்ராய்ட்' வகை செயலி வழியாக, இந்த தொழில்நுட்பம் அமலாகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், நாட்டிலேயே முதன்முறையாக, புகைப்பட வருகைப்பதிவு திட்டம் தமிழக அரசுப் பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது.



சீனாவில், ராணுவத்திலும், சில துறைகளிலும், இதை செயல்படுத்துகின்றனர்.
வகுப்பில் உள்ள மாணவ, மாணவியரின் புகைப்படங்கள் முதலில் சேகரிக்கப்பட்டு, அவை, "ஆன்ட்ராய்ட் ஆப்' மற்றும், கணினி சர்வரில் உள்ளீடு செய்யப்படும்.

வகுப்பு ஆசிரியர் தங்களது செல்லிடப்பேசியில் ஆன்ட்ராய்ட் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதிலுள்ள வசதியைப் பயன்படுத்தி வகுப்பில் உள்ள அனைத்து மாணவ, மாணவியரின் முகம் பதிவாகும் வகையில் ஒரே புகைப்படமாக எடுக்கலாம்.

அந்த புகைப்படத்தில் பதிவாகும் மாணவ, மாணவியரின் முகங்கள், செயலி வழியாக, வருகைப்பதிவாகி விடும். இந்த தொழில்நுட்பத்தால், தவறான வருகைப் பதிவு செய்ய முடியாது. இதன் மூலம் வருகைப்பதிவு எடுக்கும் நேரம் குறையும்.




கணினி முறையில், வருகைப் பதிவு விவரங்களை தொகுத்து வைக்கலாம். அவற்றை, யாரும் திருத்த முடியாது.

இது முற்றிலும் "ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ்' என்ற கணினி வழி செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பத்தில் செயல்படும் என்றனர்.

சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், 8-ஆம் வகுப்புக்கு மட்டும் புகைப்பட வருகைப் பதிவு முறை சோதனை முயற்சியாக திங்கள்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளது. இதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைக்கவுள்ளார்.



திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து மற்ற வகுப்புகளுக்கும், பிற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News