Saturday, February 16, 2019

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உதவித் தொகை: பள்ளி, கல்லூரி வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்க உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தகுதியுடைய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக்கழகத்தில் பயிலும் தகுதியுடைய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம். 1.7.2017 முதல் 30.6.2018 வரையிலான காலத்தில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். குழு போட்டிகளா இருந்தால் முதல் இரண்டு இடங்களையும், தனிநபர் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

தேசிய அளவிலான போட்டிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக்கள் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், அண்ணா விளையாட்டரங்கத்தில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான ‌w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழுடன் மார்ச் 12ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

Popular Feed

Recent Story

Featured News