Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 10, 2019

வினாத்தாள் வெளியானதால் கெடுபிடி சி.பி.எஸ்.இ., தேர்வில் கட்டுப்பாடு

கடந்த ஆண்டு வினாத்தாள், 'லீக்' ஆனதால், நடப்பாண்டு, சி.பி.எஸ்.இ., தேர்வுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொது தேர்வு, மார்ச், 7ம் தேதியும்; பிளஸ் 2 தேர்வு, மார்ச் 2ம் தேதியும் துவங்குகின்றன. நாடு முழுவதும், 4,500 மையங்களில், 10ம் வகுப்பில், 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும்; பிளஸ் 2வில், 11 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் தேர்வு எழுதுகின்றனர்.



கடந்த ஆண்டு வினாத்தாள் லீக் ஆனதால், நடப்பாண்டில், பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் படிக்கும் பள்ளியில் உள்ள மையத்தில் தேர்வெழுதாமல், அருகில் உள்ள மையத்தில் எழுத வேண்டும். மையம் இல்லாத பட்சத்தில், அந்த பள்ளியில், தேர்வு கண்காணிப்பாளர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.வினாத்தாள்கள், வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். தேர்வு அன்று, அரை மணி நேரத்துக்கு முன், அவற்றை எடுத்து வர வேண்டும்.



தேர்வன்று, 15 நிமிடம் முன்னதாக, இரண்டு ஆசிரியர்கள், மாணவர்கள் நேரடி மேற்பார்வையில், வினாத்தாள் கட்டு பிரிக்க வேண்டும். பிரிக்கும்போதும், விடைத்தாள் கட்டும்போதும், அவற்றை புகைப்படம் எடுத்து, ஆன்லைனில் உடனுக்குடன் அனுப்ப வேண்டும். வினாத்தாள் பிரிக்கும் அறையில், கண்காணிப்பு கேமரா இருக்க வேண்டும்.பறக்கும் படை அதிகாரிகள் எந்நேரமும் பள்ளிக்கு வரலாம். முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கட்டுப்பாடுகளை, சி.பி.எஸ்.இ., விதித்துள்ளது.