தமிழகம் முழுவதும் வரும் 10-ம் தேதி போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாககோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இந்த முகாம்கள் வரும் 10-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். இதற்காக அனைத்து மாநகராட்சி நகர் நல மையங்கள், மருந்தகங்கள், சத்துணவுக் கூடங்கள் மற்றும் மாநகராட்சிப் பகுதியிலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
வெளி மாநிலங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் வகையில், மாநகராட்சி பிரதான அலுவலகம், ரயில் நிலையம், 5 பேருந்து நிலையங்கள் மற்றும் 5 நடமாடும் ஊர்திகள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.மேலும், மாநகரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் வழங்கப்படவுள்ள போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முற்றிலும் பாதுகாப்பானது என பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே, கோவை மாநகரில் வசிக்கும் அனைத்து பொதுமக்களும் தங்களின் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், எந்தவிதமான நோய் வாய்ப்பட்டிருந்தாலும், அதனைக் கருத்தில் கொள்ளாமல், தவறாமல் அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து வழங்கி, நமது மாநகராட்சிப் பகுதியிலிருந்து போலியோ நோயினை அறவே ஒழித்திட அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.