தமிழகத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டுக்கான மூன்றாம் பருவத் தேர்வுகளை ஏப்.12- ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் வியாழக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 29-ஆம் தேதி முடிவடைகிறது.
இதையடுத்து, முதன்மைக் கல்வி அலுவலர்கள்,தங்கள் மாவட்டத்தில் பிற வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வுகளை,ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணையை மாவட்ட அளவில் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்.
மேலு,ம் வேலை நாள்களின் இழப்பினை சனிக்கிழமைகளில் ஈடு செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் நடப்பு கல்வியாண்டில் ஏப்ரல் 12-ஆம் தேதி கடைசி வேலை நாளாகும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.