நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. இதனைத்தொடர்ந்து பல்வேறு கட்சித்தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
மகாராஷ்டிராவில் வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 4 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர் பட்டியலில், பெயர்கள் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடந்தன. அவ்வகையில் பால்கர் மாவட்டத்தின் நல்லசோபரா பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் கடந்த ஆண்டு ஜூன் முதல் 2019 பிப்ரவரி வரை உள்ள தேர்தல் பணிகளை செய்து முடிக்க வேண்டும்.
ஆனால் இந்த பணிகளுக்காக நியமிக்கப்பட்ட 26 ஆசிரியர்கள் தேர்தல் பணிகளுக்கு வரவில்லை. இதையடுத்து அப்பகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளார். அதன் அடிப்படையில், தேர்தல் பணிகளை செய்ய மறுத்த 26 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.