சென்னை: பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்ட அரசாணையில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் 35-லிருந்து 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50-லிருந்து 45 ஆகவும், பிசி, எம்பிசி, பிசி முஸ்லிம் ஆகிய பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 45-லிருந்து 40 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய மதிப்பெண் அடிப்படையிலேயே 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், பொறியியல் படிப்புகளில் சேரும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் எண்ணிக்கை குறையும்.