Friday, March 15, 2019

வதந்திகளை தடுக்க தொடர் நடவடிக்கை: வாட்ஸ் அப் நிறுவனம் தகவல்


கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் வதந்திகள் மற்றும் அவதூறு செய்திகள் பரப்புவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் கட்செவி அஞ்சல், சுட்டுரை (டுவிட்டர்), முகநூல் (ஃபேஸ்புக்) ஆகியவை சமூக வலைதளங்கள் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன.


இதில், ஏராளமான வதந்திகளும், அவதூறுகளும் பரப்பப்படுவது பெரும் பிரச்னையை ஏற்படுத்துகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சமூக ஊடகங்களில் அரசியல்ரீதியான அவதூறுகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக சமூக வலைதளங்கள் மூலம் எதிர்மறையான கருத்துகளை ரஷிய அமைப்புகள் பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

வரும் மக்களவைத் தேர்தலில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது; அமெரிக்காவில் எழுந்தது போன்ற புகார்கள், இந்தியாவில் எழாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுட்டுரை (டுவிட்டர்) நிறுவனத்துக்கு நாடாளுமன்ற நிலைக் குழு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கட்செவி அஞ்சல் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் போஸ் அனைத்து ஊடகங்களுக்கும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:


கட்செவி அஞ்சலைப் பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரத்தில், வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்கவும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவுக்காக குறைதீர் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு தகவலை ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் பகிர முடியாது என்ற கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளோம். இதுபோன்ற மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்

Popular Feed

Recent Story

Featured News